Tuesday 16 January 2018

25. சிவன் சேவடி போற்றி - பொது (பதிகம் 11)

வணக்கம்.

சந்தவசந்தம் google குழுவில் 2017 ஜூன் மாதத்தில், கவிஞர் திரு வி. சுப்பிரமணியன் (சிவசிவா) அவர்கள் ஷட்பதி என்னும் கன்னட யாப்பைப் பற்றி எடுத்துச்சொல்லி, அதில் ஒரு பதிகம் எழுதிருந்தார். அவரது படைப்பால் உந்தப்பட்டு, அடியேனும் அந்தப் புதிய யாப்பினைக் கையாள விரும்பினேன். சிவபெருமான் அருளால் அவர் மீது இந்த ஷட்பதி அமைப்பில் ஒரு பதிகம் எழுதினேன்.

ஸ்தலம் - பொது.

ஷட்பதி பற்றி, அவர் சொல்லியவை சில - உங்கள் பார்வைக்காக.

கன்னடத்தில் "ஷட்பதி" என்ற பாடல் அமைப்பு - இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளனவாம். (இக்காலத்திலும் எழுதுகின்றனரா என்று அறியேன்).
இந்த "ஷட்பதி" என்ற பாடல் அமைப்பின் யாப்புக் குறிப்புச் சுருக்கம் -

(நான் அறிந்த அளவில்):

X X
X X
X X X +1

X X
X X
X X X +1

X = எவ்வகைச் சீர்/சீர்கள் அமைப்பும் இருக்கலாம். அதே அமைப்பு "X"

குறியீடு காட்டும் எல்லா இடங்களிலும் வரும்.

1. ஆறு அடிகள்
2. எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பயின்று வரும்.
3. 1,2,4,5 - அடிகள் அளவொத்து அமைவன. சீர் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக அமையும். (உதாரணமாக - அடிக்கு 2 சீர்களோ 4 சீர்களோ). அடியின் முதற்பாதியில் உள்ள சீர் அமைப்புப் பிற்பாதியிலும் அமையும்.
4. 3,6 - இவ்வடிகள் அளவொத்து அமைவன. ஏனைய அடிகளைவிட நீளமாக அமைவன. (இவ்வடிகளின் அமைப்பு: முதலடியின் சீர் அமைப்பு + முதலடியின் முதற்பாதி சீர் அமைப்பு + இறுதியில் கூடுதலாக ஓர் நெடில் எழுத்து).

ஷட்பதி அமைப்பில் அடியேனின் அர்ப்பணம்.

சிவன் சேவடி போற்றி

ஷட்பதி அமைப்பில் சிவபெருமான் மீது பத்துப் பாடல்கள்.

தலம் - பொது.

மா மா
மா மா
மா மா மாங்காய் (அரையடி)

மறைகள் புகழும்
இறைவன் கழலை
முறையாய் நாமும் பணிவோ மே
பிறையை அணியும்
கறைசேர் கண்டன்
நிறைவை நமக்குத் தருவா னே. 1

முடியா மறையின்
முடிவா னவனின்
அடியை எண்ணித் துதிப்போ மே
அடியும் இடையும்
முடிவும் இல்லா
விடையன் வெற்றி தருவா னே. 2

அடி இடை முடிவு இல்லா - ஆதி மத்ய அந்த ரஹித
விடையன் - எருதில் வருபவன்

விடையே றிவரும்
சடையன் தாளைத்
திடமாய் நாமும் பிடிப்போ மே
நடரா சனெனும்
படகைப் பற்றிக்
கடலைக் கடந்து களிப்போ மே. 3

கடல் - ஸம்ஸாரம்

கேடில் லாத
தோடன் கழலை
நாடி நன்மை அடைவோ மே
ஈடில் லாத
சேடன் அருளால்
ஓடி வினைகள் ஒழியும் மே. 4

கேடு இல்லாத - கெடுதல் இல்லாத (அழிவு இல்லாத)
தோடன் - தோடுடைய செவியன் - தோடணிந்தவன்
சேடன் - பெரியவன்

சதியோ டிசையும்
பதியின் பதத்தைக்
கதியென் றேநாம் அடைவோ மே
மதில்மூன் றெரித்த
நதியைப் புனைந்த
மதியன் புகழைப் பறைவோ மே. 5

சதி - பார்வதி
இசைதல் - சேர்தல்
மதியன் - நிலவைத் தலையில் அணிபவன்
பறைதல் - பாடுதல்

நரையே றேறும்
பரமன் பதத்தை
உருகி நிதமும் தொழுவோ மே
மரையை ஏந்தும்
பரையோர் பாகன்
கரையேற் றிநமைக் காப்பா னே. 6

நரையே றேறும் - நரை ஏறு ஏறும்
நரை - வெள்ளை
ஏறு - காளை மாடு
மரை - மான்
பரை - பெண் / பராசக்தி

மழுவை ஏந்தும்
அழகன் சிவனின்
கழலை நாமும் தொழுவோ மே
மழையாய் அருளைப்
பொழியும் இறைவன்
நிழலாய் நம்மைத் தொடர்வா னே. 7

கரியின் தோலை
உருவி அணிந்த
அரையன் அடியைப் பணிவோ மே
நரியைப் பரியாய்
உருமாற் றியவன்
விரைவாய் வந்து காப்பா னே. 8

அலையார் கடலில்
நிலைகொண் டவனும்
அலர்மேல் உறையும் அயனும் மே
நிலமும் வானும்
அலைந்தும் அறியாத்
தலைவன் தாளைப் பணிவோமே. 9

மணியார் கண்டன்
பிணிவார் சடையன்
பணிவார்க் கருளும் பரமே சன்
அணியார் உமையை
அணையும் தலைவன்
துணையாய் நமக்கு வருவா னே. 10

பிணிவார் சடை - கட்டிய நீண்ட சடை
அணியார் உமை - அணி - அழகு. அழகு நிறைந்த உமா தேவி
அணைதல் - சேர்தல் / புணர்தல் - அர்த்தநாரீஸ்வரர் என்று கொள்ள வேண்டும்

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

No comments:

Post a Comment