Wednesday 7 March 2018

33. திருமால் - சிவன் சிலேடைகள்

1.
கிரியினை ஏந்திடுவான் கெட்டவிடம் உண்டான்
கரியினை மாய்த்தான் கரிக்கருள் செய்தான்
வரமிகவே தந்திடுவான் வையம் அளக்கும்
அரியை அரனென்(று) அறி

திருமால்:
  • கோவர்த்தன மலையை ஏந்திய தீரன் 
  • பூதனையிடம் விடந்தோய்ந்த பாலை அருந்தியவன்
  • குவலயாபீடம் என்ற யானையை மாய்த்தவன்
  • கஜேந்திரனுக்கு அருள் செய்தவன்
  • வரமிக அருள்பவன்
  • திரிவிக்கிரமனாய் உலகை அளந்தவன்

சிவன்:
  • திரிபுர சம்ஹாரம் போது மேரு மலையை வில்லாக ஏந்தியவன்
  • பாற்கடலில் வந்த விடத்தை உண்டவன் 
  • தாருகா வன முனிவர் ஏவிய யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து மேலாடையாக அணிந்தவர்
  • ஆனைக்காவில் பூஜை செய்த யானைக்கு முக்தி அளித்தவர்
  • வரங்கள் பல தருபவர்
  • இந்த உலகம் வாழ படியளப்பவர் (2 நாழி நெல் அளந்து அன்னையுடன் 32 வகை அறங்கள் வளர்த்தார்.


2.
வில்லேந்தி மாற்றாரை வெல்லும்; அடியார்கள்
சொல்லில் மகிழும்; சுடராழி கொள்ளும்;
எருதைத் தழுவி எழிலாளைச் சேரும்
திருமால் சிவனென் றுணர்

ஆழி - பெரியது/சக்கரம்
சுடர் - நெருப்பு/ஒளி.

திருமால்:
  • இராமனாய் வில்லேந்தி இராவணாதி அசுரர்களை வென்றார்.
  • அடியார்கள் பாடலில் மகிழ்வார்.
  • ஒளியுடைய சக்கரத்தைக் கையில் வைத்துக் கொண்டவர்.
  • நப்பின்னை பிராட்டியை மணம் செய்து கொள்ள, கண்ணனாய் வந்து காளையை அடக்கினார்.

சிவன்:
  • திரிபுர ஸம்ஹாரத்திற்காக வில்லேந்தினார்.
  • அடியார்கள் பாடலில் மகிழ்வார்.
  • அளவற்ற தேஜஸ் (தேசு) தன்னிடம் கொண்டவர்.அல்லது பெரிய நெருப்பினைக் கையில் ஏந்தியவர்.
  • ரிஷபத்தைத் தழுவி, அதன் மேல் ஏறி, அன்னை பார்வதியுடன் சேர்ந்து அமர்வார்.

3.
கங்கை நதிதந்தான் கார்முகில் போலருள்வான்
சங்கொலி தன்னில் திளைப்பான் எழிலாரும்
மங்கைக் கிடமளித்தான் மாயம்செய் ஈசனைப்
பங்கயக் கண்ணனாய்ப் பார்

திருமால்:
  • விஷ்ணு, திரிவிக்கிரமனாய் உலகை அளந்தபோது, பிரம்மா தன் கமண்டல நீரால் அவர் பாதத்தை அபிஷேகம் செய்ய, அதுவே ஆகாச கங்கையாய்க் கீழே வந்தது.
  • பாஞ்சஜன்யத்தை ஊதி குதூகலமாய் பாரத யுத்தத்தை நடத்தினார்.
  • திருமால், இலக்குமிக்குத் தன் மார்பில் இடம் அளித்தார்

சிவன்:
  • சிவபெருமான் தன் சடையில் அந்த பிரவாகத்தைத் தாங்கி, பாரத பூமியில் ஓடச் செய்தார், பகீரதன் வேண்டுதலினால்.
  • சிவபெருமான் விரும்பும் 18 இசை வாத்தியங்களில், சங்க நாதமும் ஒன்று
  • சிவன், பார்வதிக்குத் தன் இடபாகம் தந்தார்.


4.
கம்பம் தனிலெழும் கையில் மழுவேந்தும்
வம்பார் இலைசூடும் வான்நீலம் ஆர்ந்திடும்
கொம்பணியும் பாம்பின்மேல் கோலமாய்க் கூத்தாடும்
நம்பனை நம்பியென்று நம்பு

  • கம்பம் - திருக்கச்சி ஏகம்பம் / தூண்
  • மழு - சிவன் கையில் மழு / பரசுராமர் கை கோடரி
  • இலை - வில்வம் / துளசி
  • வான்நீலம் - பெரிய விடம் (நீல நிற விடம்) கழுத்தில் நிறையும் / அழகிய நீல மேனி
  • கொம்பு - பன்றிக் கொம்பு அணிதல் / வராக அவதாரம்
  • பாம்பின் மேல் கூத்து - திருவாசி (பாச்சிலாச்சிராமம்) என்ற தலத்தில் பாம்பின் மேல் நடராஜர் ஆடுவார். முயலகன் இருக்காது. / காளிய நடனம்.
  • நம்பன் - சிவன் / நம்பி - விஷ்ணு


அன்புடன்,
சரண்யா

No comments:

Post a Comment