Friday 7 December 2018

48. சிவன் கும்மிப் பாடல் - பொது (பதிகம் 20)

வணக்கம்.

சில நாள்களுக்குப் பின் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.

சிவபெருமான் மீது கும்மிப் பாடல் வடிவில் (பாரதியாரின் கும்மியடி தமிழ்நாடு முழுவதும்.. பாடலை ஒட்டிய சந்தம்) ஒரு பதிகம் செய்துள்ளேன்.

இதில் இரண்டாவது பாடலிலருந்து, ஒவ்வொரு பாடலிலும் சிவபெருமானின் அட்ட வீரச்செயல்கள் வருமாறு அமைத்துள்ளேன்.

தலம் - பொது

1.

வெள்ளிப் பனிமலை மேவும் பரமரை
..மெச்சி அனுதினம் போற்றிடுவோம்
உள்ளம் உருகிட உன்னத நாமங்கள்
..ஒன்றும் விடாமல் செபித்திடுவோம்


2.

மேரு மலையினை வில்லென ஏந்திய
..வீர மிகவுடை வித்தகனார்
கோரச் செயல்கள்செய் தானவர் கள்மூன்று
..கோட்டைகள் வெந்திடச் செய்யரனார்

தானவர்கள் - அசுரர்கள்
மூன்று கோட்டைகள் - திரிபுரம்

செய்யரனார் - செய் அரனார். அரன் - சிவன்.

3.

கன்னல்விற் காமனைக் கண்ணால் எரித்தவர்
..கந்தனைத் தந்தவர் புண்ணியனார்
தன்னிகர் அற்றவர் சத்தியம் ஆனவர்
..தத்துவம் நால்வர்க் குரைசிவனார்

நால்வர்க் குரைசிவனார் - நால்வர்க்கு உரை சிவனார்

4.

காலனைக் காலினால் எற்றிக் கடிந்தவர்
..கானகத் தேயாடும் நித்தனவர்
ஆலகா லத்தினை அஞ்சாமல் உண்டவர்
..ஆழியை மாலுக் கருள்நிமலர்

நித்தன் - சிவனின் ஒரு பெயர். பக்தர்களுக்கு நிதி அவர். அதனால் நித்தன். மேலும் என்றும் சாஸ்வதமானவர். நித்தியமானவர். அதனாலும் நித்தன் என்பார். நிர்த்தம் என்றால் நடனம் என்று பொருள். நிர்த்தன் - நித்தன் என்றும் வழங்கலாம். நடனம் ஆடுபவர்.

5.

அந்தகன் கர்வம் அழித்தவர் ஆதியும்
..அந்தமும் இல்லாத சோதியவர்
சந்திரன் வானதி சூடும் சடாதரர்
..தந்தி முகவனின் தந்தையவர்

6.

ஆனையின் தோலினை ஆடையாய்ப் பூண்டவர்
..அம்பலத் தாடிடும் கூத்தரவர்
மானையும் தீயையும் ஏந்தும் கரத்தவர்
..மங்களம் நல்கிடும் நம்பரவர்

7.

தக்கனின் வேள்வியைச் செற்றவர் நித்தியர்
..சங்கக் குழையணி காதுடையர்
முக்கண்ணர் முன்னவர் மூவாத என்னப்பர்
..மூவிலைச் சூலம் உடைப்பரமர்

8.

வேதங்கள் நான்கும் விரித்தோதும் வல்லவர்
..வெந்துயர் தீர்க்கும் விகிர்தரவர்
சூதம் அறுப்பவர் சுத்த வடிவினர்
..சோதியாய் எங்கும் நிறையிறைவர்

சூதம் - பிறப்பு / துன்பம் / வஞ்சனை

9.

வேதன் சிரமொன்றை வெட்டி எறிந்தவர்
..வேடனுக் கின்னருள் நல்கியவர்
மாதவம் செய்திட்ட பார்த்தனுக் கத்திரம்
..வாஞ்சை யுடன்தந்த வள்ளலவர்

வேடன் - கண்ணப்ப நாயனார்

10.

ஏறதன் மேலேறி எங்கும் திரிபவர்
..ஏற்றம் அளித்திடும் ஈசரவர்
பாறுசேர் ஓட்டினைக் கையினில் கொண்டவர்
..பாவங்கள் போக்கிடும் தேசரவர்

பாறு - புலால் (மாமிச) வாசம். பிரமனின் ஒரு தலையைக் கிள்ளி எடுத்து, அதில் பிக்ஷை ஏற்பவர்.

11.

மாலயன் கண்டில்லா மாசற்ற சோதியை
..மங்கை சிவகாமி நாதரையே
காலையும் மாலையும் கைதொழு தேத்திட
..காணாமற் போய்விடும் நம்வினையே

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

No comments:

Post a Comment