Wednesday 16 January 2019

51. நவகிரக வெண்பா

சூரியன்

காரிருள் நீக்கும் கதிரவன் ஏழ்பரித்
தேரிலு லாவரும் சேவகன் ஆரியன்
வீரியம் நல்கிடும் வித்தகன் மித்திரன்
சூரியனே என்றும் துணை

ஏழ் பரி - ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலா வருபவன்
சேவகன் - வழி நடத்துபவன் ((ஞான) ஒளியைத் தந்து நமக்கு வழி காட்டுபவன்)
ஆரியன் - ஆசான் / பெரியோன்
வீரியம் - வீரம்
மித்திரன் - நண்பன் / சூரியனின் 12 நாமங்களில் ஒன்று

சந்திரன்

சிந்தைக்(கு) அதிபதியே சீதக் கதிருடையாய்
சுந்தர நாயகனே தூவெண் ணிறமுடையாய்
இந்திரை சோதரனே ஈசன் தலையமரும்
சந்திரனே நல்லருள் தா

சிந்தை - மனம்
இந்திரை - திருமகள் (இலக்குமி) - பாற்கடலைக் கடைந்த போது, சந்திரன் வந்தான். பின்னர் இலக்குமி தேவி வந்தாள் என்பது புராணம்.

அங்காரகன்

செங்கண் உடையோனே செம்மறி ஆடேறும்
மங்கள நாயகனே வச்சிர வேலுடையாய்
நங்கை நிலமகளின் நன்மகனே வீரமுடை
அங்கா ரகனே அருள்

அங்காரகனின் வாகனம் செம்மறி ஆடு.
வச்சிர வேல் - கூர்மையான வேல் (சக்தி ஆயுதம் [சூலம்])
பூமா தேவியின் குமாரன்

புதன்

மதிதாரை மைந்தன் மதியைத் தருவோன்
நதிசூடி பத்தர்க்கு நன்மை அருளும்
சதுரன் கவித்திறன் தந்திடும் சாந்தன்
புதபக வானே புகல்

மதி - சந்திரன்
தாரை - சந்திரனின் ஒரு மனைவி
சந்த்ர தாரா சுதம் என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் புதம் ஆச்ரயாமி சததம் கீர்த்தனையில் பாடியுள்ளார்.
மதியைத் தருவோன் - புத்தியைத் தருபவன். புத்தி தாதா என்று புதனுக்கு ஒரு பெயர்.
நதிசூடி - சிவபெருமான். (சங்கர பக்த சிதம் சதானந்த சஹிதம்)
சாந்தன் - சாந்தமானவன் - ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்..
புகல் - பாதுகாப்பு

குரு

அரிசனம் ஆடை அணியும் அரசைப்
பெரியவனை வல்லவனைப் பேச்சிற் கிறையை
மருளை அகற்றிடும் மங்களத் தேவ
குருவை நிதமும் குறி

அரிசனம் - மஞ்சள்
மஹா பல விபோ என்று தீட்சிதர் பாடியுள்ளார்.
பேச்சிற் கிறையை - பேச்சிற்கு இறையை
பேச்சு - வாக்கு (கீஷ்பதே)

சுக்கிரன்

சக்கர பாணியின் தண்ணருளால் கண்ணொன்றை
அக்கணமே பெற்ற அறிவிற் சிறந்தவனை
வக்கிரம் தீர்ப்பவனை வல்லசுரர் ஆசானைச்
சுக்கிரனை நாளும் துதி

சக்கரபாணி - மஹா விஷ்ணு
மஹா விஷ்ணு, வாமனாவதாரம் எடுத்தபோது, மஹா பலியிடமிருந்து மூன்றடி மண்ணைப் பெறும் போது, சுக்ராசார்யார் வண்டாக மாறி, பலி சக்கரவர்த்தியின் கமண்டலத்தின் மூக்கினை அடைத்துக்கொண்டார். அப்போது, வாமன மூர்த்தி, ஒரு தர்பையால் அந்த மூக்கினைக் குத்தவே, வண்டின் ஒரு கண் போயிற்று. வந்தவர் மகாவிஷ்ணு ஆனதால், சுக்கிரனுக்கு ஒரு கண் மட்டுமே போய், மற்றொரு கண் தப்பித்தது.
ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், கேசவ கடாக்ஷ நேத்ரம் என்று ஸ்ரீ சுக்ர பகவந்தம் பாடலில் பாடியுள்ளார்.
வக்கிரம் - வறுமை

சனைச்சரன்

கருநிற மேனியன் காக்கைமேல் ஏறி
வருகிற தீரன் மறலிக்(கு) இளையன்
பனிச்சடை ஈசனின் பத்தர்க் கருளும்
சனைச்சரன் தாளே சரண்

மறலி - எமன்.
பனிச்சடை ஈசனின் பத்தர்க் கருளும் - சிவபெருமானின்  பக்தர்களுக்கு அனுக்ரகம் புரிவான். தீட்சிதரின் நவகிரக கீர்த்தனை - திவாகர தனுஜம் - அதில் வரும் ஒரு வரி.
பவானீஸ கடாக்ஷ பாத்ர பூத -
பக்திமதாம் அதிஸய ஸுப பலதம்
பவானீஸ - பவானியின் பதி - சிவபெருமான். சிவபெருமானின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு (பக்தர்களுக்கு), அதிசயிக்கும் வகையில் நற்பலன்களை அருளுபவன்.

ராகு

சுராசுரனைச் சூலக் கரத்தானை அன்பர்
உரோகம் அகற்றிடும் உத்தமனை மின்னும்
அராவுடல் கொண்ட அதிகோர மான
இராகுவை எந்நாளும் ஏத்து

தீட்சிதரின் நவகிரக கீர்த்தனை, ஸ்மராம்யஹம் சதா ராகும் என்ற பாடலில் வரும் தகவல்கள் சில:
சுராசுரம் - சுர - அசுரம் - பாதி உடல் தேவர்களைப் போல், பாதி உடல் அசுரர் உடல். பாற்கடலில் இருந்து வந்த அமுதத்தின் ஒரு துளியை உண்டதால் ஒரு பாதி  தேவர் உடல் பெற்றான் அசுரனான ராகு.
ரோகஹரம் - உபாதைகளைத் (உரோகம்) தீர்ப்பவன்
சூலாயுத தர கரம் - சூலாயுதத்தைக் கையில் ஏந்தியவன்.
அதிகோரமான - கராள வதனம் - பயங்கர வடிவம் உடையவன்.

கேது

கிரகணத்தின் மூலன் இராகுவிற்குக் கேள்வன்
உரகத் தலையன் மனித உடலினன்
வாதம் வழக்குகளில் வெற்றியைத் தந்திடும்
கேது களைந்திடுவான் கேடு

கேள்வன் - தோழன் (இணையாகக் காணப்படுபவர்கள்)
மஹாஸுரம் கேதுமஹம் பஜாமி என்ற தீக்ஷிதர் கீர்த்தனையில்,
உரகத் தலையன் - மஹா விசித்ர மகுட தரம் (விசித்திர மகுடம் - பாம்பின் தலையே மகுடம்)
நர பீட ஸ்திதம் ஸுகம் (மனித உடல் - அதுவே அவன் அமரும் பீடம்)
நவ க்ரஹ யுதம் ஸகம் (புதிதாக உருவான கிரகம் - ராகு; அவனது தோழன்)
க்ரஹணாதி கார்ய காரணம் - கிரகணத்திற்குக் காரணமானவன்
என்று பாடுகிறார்.

நவக்கிரக வெண்பா நிறைவுற்றது.
நவகோள் மகிழ்ந்து நன்மை அளிக்கட்டும்.
நமச்சிவாய வாழ்க!!

சரண்யா

No comments:

Post a Comment