Friday 23 February 2018

30. சிவனின் கழலைத் தொழுவோமே - பொது (பதிகம் 13)

நமச்சிவாய வாழ்க!

வணக்கம்.

அடுத்த பதிகம்.

சிருங்கேரி சங்கராச்சார்யர் அனந்தஸ்ரீ விபூஷித பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகள் அவர்கள் எழுதிய "கருட கமண தவ சரண கமலமிஹ" என்ற விஷ்ணு ஸ்துதியை ஒட்டிய சந்தத்தில், கவிஞர் திரு. சிவசிவா அவர்கள் எழுதிய பதிகத்தின் யாப்பை வைத்து, அடியேன் எழுதிய பதிகம்.

தலம் - பொது

நாலடிமேல் ஈரடி வைப்பு

சந்தம்:
தனன தனதனன
தனன தனதனன
தனன தனதனன தானா
தனன தனதனன தானா
.. தனனா தனனா தனதானா
.. தனனா தனனா தனதானா

சில பாடல்களில் தனன என்னும் இடங்களில் தந்த, தன்ன, தான போன்ற சந்தங்களும் வரலாம்.
தனதனன என்னும் இடத்தில், தானதன, தந்ததன, தன்னதன என்றும் வரலாம்.

1.
எருது மிசையமரும்
அருண நிறமுடைய
நிரதி சயநிமல ரூபன்
கருணை பொழியும்அமு தீசன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே.

நிரதிசய - அதிசயத்திற்கும் அப்பாற்பட்டது

2.
அசையும் அரவணியும்
இசையில் உளமகிழும்
நிசியில் நடனமிடும் ஈசன்
அசலன் அசலமகள் நேசன்
.. சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

அசலன் - சலனம் அற்றவன் / கடவுள்
அசலம் - அசைவற்றது / மலை

3.
சுருதி விழையுமரன்
அரிய மலரொளியன்
இருளை அரியும்அறி வாளன்
அருளி மகிழும்அரு ளாளன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே.

அரிய மலர் ஒளியன் - அதி அற்புதமான மலர் போல் அழகினைக் கொண்டவன்.. இதுவரை யாரும் அதுபோன்ற அழகைக் கண்டதில்லை

இருள் - அறிவின்மை.
அரி - களைதல்

4.
சூலம் அணையழகன்
ஆலம் உடைமிடறன்
ஆல நீழலமர் வேதன்
ஞாலம் ஆளும்நட ராசன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

5.
இருவர் அறியாத
ஒருவன்; வளைமங்கை
மருவும் அணிநீல கண்டன்
பரவி ஒளிவீசும் அண்டன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

இருவர் - அரி அயன்
அணி - அழகு
அண்டன் - அண்டத்தின் தலைவன்

6.
கம்பம் அதிலுறையும்
வம்பு மலரணியும்
நம்பன் நிமலனுமை பாகன்
உம்பன் விடையமரும் வாகன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

கம்பம் - கச்சி ஏகம்பம்
வம்பு மலர் - மணம்வீசும் மலர்
உம்பன் - தேவன்
வாகன் - அழகன்

7.
கனக சபையிலிரு
முனிவர் அகமகிழ
இனிய நடனமிடும் வானன்
நினைவில் இணையுமெழில் ஏனன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

இரு முனிவர் - பதஞ்சலி, வ்யாக்ரபாதர்
இணைதல் - சேர்தல்
வானன் - ஆகாய வடிவானவன்
ஏனன் - பன்றிக் கொம்பினை அணிபவன்.

8.
தென்னி லங்கையதன்
மன்னன் அகமழிய
வன்ன விரலையிடு பாதன்
மின்னு மணியணியும் நாதன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

அகம் - அகந்தை
வன்ன விரல் - அழகிய விரல்.

9.
பாதி மதியணியும்
ஆதி அந்தமிலன்
நாத மயமான மூலன்
வேதம் ஓதுதவ சீலன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

ஆதி அந்தமிலன் = பிறப்பு இறப்பு இல்லாதவன்.
மூலன் = அனைத்தும் சிவபெருமானிடத்திருந்தே வருகிறது.

நாத மயமான மூலன் (குறிப்பு):
சிவபெருமானின் கரத்தில் இருக்கும் உடுக்கை சத்தத்திலிருந்து, ஓம்காரம், வேதம், வியாகரணம் முதலிய வேத அங்கங்கள் யாவும் தோன்றியது என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டது.

10.
கங்கை ஆர்சடையன்
மங்கை ஓர்பங்கன்
அங்க மாலையணி தேசன்
துங்க வடிவுடைய நேசன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

அங்கம் - எலும்பு.
துங்கம் - தூய்மை

பதிகம் நிறைவுற்றது.

சரண்யா

No comments:

Post a Comment