Monday 30 July 2018

46. திருவெறும்பூர் - (பதிகம் 18)

“மாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்” - என்ற வாய்பாடு. ஒரோவழி வேறு காய்ச்சீர் வரக்கூடும்.

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா

மடமாதோர் புரங்கொண்டான் மதியத்தைச் சிரங்கொண்டான்'
நடமாடிப் பலிதேர்வான் நகைத்தேமுப் புரஞ்செற்றான்
இடர்யாவும் களைஈசன் எழிலாரும் எறும்பூரில்
அடலேற்றின் மிசைஊர்வான் அருளாரும் பெருமானே 1

மடமாது ஓர் புரம் கொண்டான் - மட - அழகு. அழகிய பெண்ணை ஒரு பக்கம் கொண்டான்
மதியம் - சந்திரன்
அடல் ஏற்றின் - அடல் ஏறு - அடல் - வலிமை மிக்க

கருதுந்தன் னடியார்கள் கடுந்தொல்லை தனைத்தீர்ப்பான்
ஒருதும்பை மலர்தூவி உளமாரத் துதிசெய்வோர்
இருள்நீக்கி ஒளிசேர்ப்பான் எழிலாரும் எறும்பூரில்
அருளீயும் பரமேசன் அமுதூறும் கரத்தானே 2

ஒரு தும்பை - உயர்வான தும்பை மலர்

ஆலத்தை மிடறேற்றான் அறம்நால்வர்க்(கு) உரைசீலன்
சூலத்தைக் கரமேற்றான் துயர்போக்கும் மணிகூடன்
ஏலப்பூங் குழலாள்கோன் எழிலாரும் எறும்பூரில்
கோலக்கூத் தினையாடும் குறையில்லாப் பெரியோனே 3

மணிகூடம் - திருவெறும்பூர் தலத்தின் மற்றொரு பெயர்
ஏலப்பூங் குழலாள் - திருவெறும்பூர் தலத்தின் அம்பிகை

அமுதூறும் அருந்தாளன் அகிலம்போற் றிடுந்தேசன்
நமனைத்தன் இடக்காலால் நன்றாய்எற் றியதீரன்
இமையோர்கட் கிரங்கீசன் எழிலாரும் எறும்பூரில்
இமவானார் மகளோடே இனிதாக அமர்வோனே 4

பேரோரா யிரங்கொண்டான் பெருநீர்நஞ் சினையுண்டான்
தேரேறிச் சமர்செய்து திரியும்முப் புரஞ்செற்றான்
ஈராறு கரன்தாதை எழிலாரும் எறும்பூரில்
வேரூன்றி அமர்பெம்மன் வினைதீர்க்கும் இறையோனே 5

தலையோட்டில் பலிதேர்வன் தவசீலன் முக்கண்ணன்
அலைவீசும் கடல்தந்த ஆலாலம் விழைந்துண்டான்
இலையாரும் நுனைவேலன் எழிலாரும் எறும்பூரில்
கலையேந்தி நடமாடும் கரைசேர்க்கும் பெருமானே 6

ஒருநான்கு மறைபோற்றும் உயர்ஞான குருநாதன்
திருமார்பில் மணிமாலை சிரமாலை அணிவாமன்
இருநான்கு வரைத்தோளன் எழிலாரும் எறும்பூரில்
திருவாரி வழங்கீசன் செகம்காக்கும் பெருமானே 7

வரை - மலை
இருநான்கு - எட்டு
எட்டுப் பெரிய மலை போன்ற தோள்கள் - அட்ட புஜம் - கைகள் எட்டுடைக் கம்பன் எம்மானை என்ற சுந்தர மூர்த்தி நாயனார் தேவாரம்.

துடியேந்தும் ஒளிக்கரத்தான் துளிர்வில்வம் விழைதூயன்
முடிவில்லான் நிகரில்லான் முதலில்லான் மழுவாளன்
இடுகாட்டில் நடமாடி எழிலாரும் எறும்பூரில்
திடமாக அமர்செய்யன் சிவையோர்பால் உடையானே 8

சிவை - பார்வதி
துடி - உடுக்கை

உரகம்மேல் துயில்வானும் மரையின்மேல் உறைவானும்
சரணங்கள் முடிதேடிச் சலிப்புற்றார் அவர்முன்னோர்
எரியாக எழுபெம்மான் எழிலாரும் எறும்பூரில்
பரிவாய்வீற் றிருகோமான் பணிமாலை அணிவானே 9

உரகம் - பாம்பு
மரை - தாமரை மலர்
எரி - நெருப்பு
பணி - பாம்பு

கணையொன்றால் புரம்மூன்றைக் கனல்மூட்டி எரிவீரன்
சுணைவேலன் உமைபாகன் சுருதிக்குப் புணையாவான்
இணையில்லான் பரமேட்டி எழிலாரும் எறும்பூரில்
துணையாய்வந் தருள்நம்பன் துயர்போக்கும் பெருமானே 10

சுணை - கூர்மை
புணை - ஆதாரம்

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

No comments:

Post a Comment