Wednesday, 26 February 2020

69. உன்னத கங்கை தாயே

26.11.2019 கார்த்திகை அமாவாசை.

திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் அவர்களின் வீட்டுக் கிணற்றிலிருந்து கங்கை பொங்கிய நாள்.

அதை நினைவுகூறும் வண்ணம், இந்நாளில் அடியேனின் அர்ப்பணம்.

மாதொரு பாகன் மீது
..மட்டிலா அன்பு கொண்ட
ஸ்ரீதர ஐயா வாளின்
..சீர்மிகு துதியில் மெச்சி
மேதினி உள்ளோர் காண
..வேகமாய்க் கிணற்றி ருந்தே
ஓதையோ டெழுந்து வந்த
..உன்னத கங்கை தாயே

சீர்மிகு துதி - ஸ்ரீதர ஐயாவள் பாடிய கங்காஷ்டகம்
ஓதை - ஆரவாரம்

பணிவுடன்,
சரண்யா

68. வண்ணப் பாடல் - 17 - திருப்புனவாயில்

தனதான தானந் தனதான

தவயோக மேதும் தெரியாத
..தமியேனென் மீதும் கனிவோடு
பவரோக சோகம் படராமல்
..பரஞான போதம் தருவாயே
அவிசீதன் வேதன் தனுசாரி
..அடிபேண மாணம் தருகோவே
புவனேசை ஆரும் திரள்தோளா
..புனவாயில் மேவும் பெருமானே

பவரோக சோகம் படராமல் - பிறவிப் பிணியால் வரும் துன்பம் அடியேனைச் சேராமல்

பர ஞானம் - உயர்ந்த ஞானம்

அவி - காற்று (வாயு)
சீதன் - சந்திரன்
வேதன் - பிரம்மா
தனுசாரி - இந்திரன் / திருமால்

வாயு, சந்திரன், இந்திரன், திருமால், பிரமன் போன்றோர் வழிபாடு செய்ய அவர்களுக்கு உயர்வு அளித்தார் இத்தலத்து ஈசன்.

மாணம் - மாட்சிமை / பெருமை

வாயு பகவானைக் குறிக்க, அவி  என்று இலக்கியங்களில் உபயோகப் படுத்தியுள்ளார்களா என்று தெரியவில்லை. எனினும் அகராதியில், அவி என்னும் சொல்லுக்கு "காற்று' என்ற பொருள் இருப்பதால் பயன்படுத்தியுள்ளேன்.
தனுசாரி என்ற பெயர் இந்திரன், திருமால் இருவரையும் குறிப்பதாக அகராதியில் கண்டேன்.

புவனேசை ஆரும் திரள் தோளா - பார்வதி அணையும் திரண்ட தோள்கள் உடையவன் என்னும் பொருள் வருமாறு.

சரண்யா

Thursday, 12 December 2019

67. காஞ்சி முனி - எண்சீர் விருத்தம்

வணக்கம்.

காஞ்சி மாமுனி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் ஒரு விருத்தம்.

எண்சீர் விருத்தம்

அரையடி வாய்பாடு: காய் காய் மா தேமா

அன்றாலின் நிழலமர்ந்த குருவே போற்றி
..அனுஷத்தில் அவதரித்த திருவே போற்றி

மன்றத்துள் நடமாடும் மணியே போற்றி
..வையகத்தும் நடமாடும் தருவே போற்றி

என்றென்றும் நின்தாளைப் பணிவார்க்(கு) இன்பம்
..இசைவோடு தந்திடும்நல் தேவே போற்றி

கன்றுக்காய் இரங்கிவரும் பசுவைப் போ(ல்)இக்
..கடையேற்கும் அருள்காஞ்சி முனியே போற்றி

தரு - கற்பக விருட்சம்
ஈற்றடியில் அருள் காஞ்சி முனி என்று வினைத்தொகையாக வைத்துள்ளேன். எப்போதும் அருளுவார் என்றவாறு.

சரண்யா 

Tuesday, 24 September 2019

66. தஞ்சைப் பெரிய கோயில் (பதிகம் 28)

வணக்கம்.

தஞ்சை பிரகதீஸ்வரர் மேல் ஒரு பதிகம்.

அறுசீர் விருத்தம்.

மா விளம் தேமா (அரையடி)

1.
நாமம் ஆயிரம் கொண்ட
..நாத ஆதியும் தேவும்
காமன் வெந்திட அன்று
..கண்ணால் நோக்கிய கோவும்
சேமம் அருளிடு வானும்
..சேவின் மேல்வரு வானும்
சாமம் பெரிதுகப் பானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

2.

தெய்வத் திருமுறை தன்னைத்
..தில்லைப் பதியினில் கண்ட
வைய கத்தினை ஆண்ட
..மன்னன் அருண்மொழித் தேவன்
கையால் செய்பணி ஏற்ற
..கண்ணோர் மூன்றுடை யானும்
தையற் கிடமளித் தானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

நம்பியாண்டார் நம்பி அவர்களின் துணைக்கொண்டு, திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரின் அருள்வாக்கால், தில்லையில் நடராஜரின் சன்னிதி அருகில் உள்ள ஒரு அறையில் தேவாரப் பாடல் சுவடிகள் உள்ளதை அறிந்த இராஜராஜ சோழன், அவற்றை மீட்டு, நமக்குக் கிடைக்கும்படி செய்தார்.

அருண்மொழித் தேவன் - இராஜராஜ சோழன்

தையல் - பெண் (பார்வதி)

3.

கண்ணார் நுதலுடை யானும்
..கருத்தில் நிறைந்திடு வானும்
பெண்ணோர் பாகனும் வெள்ளைப்
..பெற்றம் மிசையமர் வானும்
பண்ணார் தமிழினில் ஆரும்
..பரனும் கயல்குதித் தாடும்
தண்ணார் வயலுடை யானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

தஞ்சையில் உள்ள நீர் வளம் மிக்க வயல்கள் யாவும் இறைவனுடைய வயல்கள் என்றவாறு...

4.

மழுவும் வன்னியும் ஏந்தும்
..வனப்பார் இணைக்கரத் தானும்
பழுதில் அடியவர் செய்யும்
..பணியை விரும்பிடு வானும்
குழையார் செவியுடை யானும்
..கொடிபோல் இடையுடை மங்கை
தழுவும் மார்புடை யானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

5.

சங்கை தவிர்த்திடு வானும்
..சதியோ டிசைந்திடு வானும்
வெங்கண் கரியுரி தன்னை
..மேனி மேலணி வானும்
அங்கை குவித்திடும் அன்பர்க்(கு)
..அஞ்சேல் என்றருள் வானும்
தங்கம் போல்மிளிர் வானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

6.

ஏங்கும் அடியவர்க் கென்றும்
..இரங்கி அருளிடு வானும்
ஓங்கு பெருஞ்சுட ராக
..உயர்ந்து பரவிடு வானும்
தீங்கி ழைத்திடு செற்றார்
..சிதைய மேருவை வில்லாய்த்
தாங்கும் கரமுடை யானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

7.

மேவார் முப்புரம் அன்று
..வேவப் புன்னகைத் தானும்
நாவால் நவிற்றிடு வார்க்கு
..நன்மை பலவளிப் பானும்
பாவம் தீர்த்திடு வானும்
..பாவைக் கிடமளித் தானும்
தாவும் புனற்சடை யானும்
..தஞ்சைப் பெருவுடை யானே.

8.

பவளம் போல்மிளிர் வானும்
..பனியார் மலையுறை வானும்
துவசத் தினிலெரு தேற்ற
..துரியத் தினிலமர் வானும்
குவளை விழியுடை யம்மை
..குலவும் வீறுடை யானும்
தவளப் பொடியணி வானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

துவசத் தினிலெரு தேற்ற
..துரியத் தினிலமர் வானும்

துவசத்தினில் எருது ஏற்ற
..துரியத்தினில் அமர்வானும்

துவசம் - கொடி
துரியம் - உயர்ந்த யோக நிலை (ஸஹஸ்ரார சக்ரம் எனவும் கொள்ளலாம்)

கொடியில் இடபத்தை வைத்துக்கொண்ட உயர்ந்த யோக நிலையில் அமர்வானும் என்னும்படியாக..

குவளை விழியுடை யம்மை
..குலவும் வீறுடை யானும்

குவளைப்பூ போன்ற கருவிழிகள் கொண்ட அன்னை, தன்னோடு சேரும் பெருமை மிக்கவன்.

9.

இமவான் மகிழ்மரு கோனும்
..எளியார்க் கிரங்கிடு வானும்
கமலன் சிரத்தினைக் கிள்ளிக்
..களைந்த வல்லவன் தானும்
நமனை எற்றிய கோவும்
..நலமார் மறையுறை வானும்
சமகத் தினில்திளைப் பானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

10.

அஞ்செ ழுத்துடை யானும்
..அல்லில் நடமிடு வானும்
பஞ்சம் தீர்த்திடு வானும்
..பணியை அணிந்திடு வானும்
நெஞ்சில் நிறைந்திடு வானும்
..நீறு பூசிடு வானும்
தஞ்சம் அளித்திடு வானும்
..தஞ்சைப் பெருவுடை யானே.

பணிவுடன்,
சரண்யா

Tuesday, 20 August 2019

65. அத்தியூர் - காஞ்சிபுரம் - அத்திவரதர் (பிரபந்தம் 5)

அத்தி வரதன் மேல் இயற்றிய வெண்பாக்கள்.

எல்லாப் பாடல்களின் ஈற்றடியும் - அத்தி வரதன் அவன் என்று வரும்.

1.
அத்திகிரி மேவும் அழகன் அழலுமிழும்
அத்திகிரி தன்னை அலரிட்டுக் - கத்திய
அத்தி உயிர்காக்க அத்திக்கில் ஏவிய
அத்தி வரதன் அவன்

அத்திகிரி - ஹஸ்திகிரி/ ஹஸ்தி சைலம் எனப்படும் காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில்
அத்திகிரி - அத் திகிரி - அந்தத் திகிரி - திகிரி - சக்கரம்
அலர் இட்டுக் கத்திய - தாமரைப் பூவை அர்பணித்து, "ஆதி மூலமே" என்று கத்திய யானை
அத்தி - யானை (கஜேந்திரனைக் குறிக்கிறது)
அத்திக்கில் - அந்தத் திசையில்
அத்தி - அத்தி மரத்தால் விஸ்வகர்மா வடித்த வரதராஜ பெருமாள்

2.
அத்தி உருக்கொண்(டு) அமரர்கோன் பூசிக்க
உத்தமத் தானம் உவந்தளித்தோன் - நித்தமும்
பத்திசெய் அன்பர்தம் பாவங்கள் தீர்த்தருளும்
அத்தி வரதன் அவன்

தேவேந்திரன், தான் பெற்ற சாபத்தால், யானையாக மாறினான். பின்னர் காஞ்சிக்கு வந்து யானை உருவில், வரதராஜ சுவாமியைப் பூஜை செய்து சாப விமோசனம் பெற்றான்.

தானம் - இடம் (ஸ்தானம்)

3.
மீனமாய் வந்துயர் வேதத்தைக் காத்தவன்
ஏனமாய் மண்ணை இடந்தவன் - மானவர்
முத்திக்கு வித்துமுன் மூவடி மண்கேட்ட
அத்தி வரதன் அவன்

மீனம் - மீன் - மத்ஸ்யாவதாரம் எடுத்து, வேதங்களை பிரளயத்திலிருந்து காத்தவன்
ஏனம் - பன்றி / வராகம்.
இடத்தல் - குத்தி எடுத்தல். கடலிலிருந்து பூமியைப் பெயர்த்து மேலே கொண்டுவந்தவன்.
மானவர் - மனிதர்கள்
மூவடி மண்கேட்ட - வாமனாவதாரம் குறிப்பு.

4.
படையோரைந் தேந்துபவன்; பாம்பணையான்; பாதம்
அடைவோர்க்(கு) அடைதரும் அப்பன் - விடையோன்றன்
சித்தத் துறைவோன்; திருப்பாற் கடல்வளர்
அத்தி வரதன் அவன்

படையோர் ஐந்து ஏந்துபவன்- பஞ்ச ஆயுதங்கள் - சங்கு, சக்கரம், வில், வாள், கதை
அடைதரும் - அடைக்கலம் தரும்
விடையோன் - சிவ பெருமான்

5.
பேய்முலை நஞ்சுண்ட பிள்ளை; மனம்மயக்கும்
வேய்ங்குழல் ஊதிமகிழ் வித்தகன் - ஆய்க்குலத்தில்
அத்தத்தின் முன்பத்தாம் அல்லில் அடிவைத்த
அத்தி வரதன் அவன்

அத்தத்தின் பத்தாம்நாள் - பெரியாழ்வார் பாடல்.
ஹஸ்த நக்ஷத்ரத்தின் பத்தாம் நக்ஷத்ரம் -
ஹஸ்தத்திலேந்து 10 ஆம் நக்ஷத்ரம் திருவோணம். முன்னோக்கி உத்திரம், பூரம் என்று சென்றால் ரோகிணி பத்தாம் நக்ஷத்திரம் ஆகும். 
கம்ஸனைக் குழப்புவதற்காக பெரியாழ்வாரின் வாக்கு.

கீழ்க்கண்ட தகவலுக்கு - திரு சஹஸ்ரநாமன் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றிகள் பல.

ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் இவை.மூன்றும் ஜன்ம, அனுஜன்ம, த்ரிஜன்ம நக்ஷத்ரங்கள்.

ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம் செய்ய ப்ரஹ்மதேவருடைய
ப்ரார்த்தனையே காரணம். அதனால் ப்ரஹ்மாவை தேவதையாக உடைய ரோஹிணியில் அவதரணம் ஏற்பட்டது.

யஜுர் வேதத்தில்,
"ரோஹிணீ நக்ஷத்திரம் - ப்ராஜாபதிர் தேவதா " என்பதே இதற்கு நிரூபணம். இங்கு ப்ரஜாபதி என்பது ப்ரஹ்மாவைக் குறிக்கும்.

ரோஹிணியிலிருந்து 10 வது ஹஸ்தம். அதிலிருந்து 10 வது திருவோணம். சேர்த்துக்கொண்ட 3 நக்ஷத்ரங்களையும் கழிக்க, ஸமுதாய நக்ஷத்ர ஸங்கயை 27 வரும்.

6.
அனந்த சரசுள் அறிதுயில் கொள்வோன்
வனஞ்சென் றுறைந்த மகிபன் - சினந்தெதிர்த்த
மத்த கயத்தை மருப்பொசித்து மாட்டிய
அத்தி வரதன் அவன்

அனந்த சரசு - அனந்த சரஸ் புஷ்கரணி.
மத்த கயம் - மத யானை - குவலயாபீடம்

7.
கன்றெறிந்து, கானில் கனியுதிர்த்துக் கோகுலத்தைக்
குன்றெடுத்துக் காத்தவன், "கோவிந்தா" - என்றதனால்
கத்திர பந்துவெனும் கள்ளனையும் ஆட்கொண்ட
அத்தி வரதன் அவன்

கன்று - வத்ஸாசுரன்
கனி - விளாங்கனி - விளாங்கனியாய் நின்ற மற்றொரு அசுரன் - கபித்தாசுரன்
குன்று - கோவர்த்தன மலை
கத்திர பந்து - க்ஷத்திரபந்து என்பவன் - மன்னர் குலத்தில் பிறந்தாலும், தீய வழியில் ஒழுகினான். அதனால் அவன் குடும்பத்தாரே வெறுத்து ஒதுக்க, காட்டில் வாழ்ந்து, கொள்ளை அடித்து வந்தான். முனிவர் ஒருவரால் திருந்தி, "கோவிந்தா" என்று ஜபித்து வந்தால், பாவங்கள் தீரும் என்று அவர் சொல்ல, கோவிந்தா என்று பலமுறை ஜபித்து நற்கதி அடைந்தான்.

8.
கஞ்சனை மாய்த்தவன் கன்றின(ம்) மேய்த்தவன்
தஞ்சமென்(று) அண்டிய சான்றவர் - பஞ்சவர்க்(கு)
உத்தி உணர்த்தித்தேர் ஓட்டி உரமளித்த
அத்தி வரதன் அவன்

சான்றவர் - சிறந்தவர்
பஞ்சவர் - பாண்டவர்
உத்தி - ஆலோசனை/வழி

9.

சாம்பனுந் தேவருஞ் சாலத் திகைப்புறத்
தாம்பினாற் கட்டுண்ட தற்பரன் - பாம்புமிசை
வித்தக நர்த்தனம் வீறுகொண் டாடிய
அத்தி வரதன் அவன்.

சாம்பன் - சிவபெருமான்
தாம்பு - கயிறு
பாம்பு - காளியன்

10.

சிங்கவுரு வேற்றுச் சிறுவன்சொல் கேட்டெழுந்த
துங்கன்; மரையாள் துணைவனரன் - பங்குறையும்
சத்தி தமையன் சமுசார பந்தந்தீர்
அத்தி வரதன் அவன்

சிங்கம் - நரசிம்மர்
சிறுவன் - பிரகலாதன்

மரையாள் துணைவனரன் பங்குறையும்
சத்தி தமையன் - மரையாள் துணைவன்; அரன் பங்குறையும் சத்தி தமையன்.

மரை - தாமரை. மரையாள் - தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமி.

11.

அத்தி வரதன் அவனெனவட் டாக்கரனைத்
தித்திக்கும் நற்றமிழில் செப்பியவிப் - பத்தும்
பகர்வார் பிறவிப் பயனைப் பெறுவார்
திகழ்கூர் பரமனடி சேர்ந்து.

அத்தி வரதன் அவன் என அட்டாக்கரனை = அட்டாக்கரன் - எட்டெழுத்து மந்திரத்தான் - அஷ்டாக்ஷரன்

பதிகம் நிறைவுற்றது

ஓம் நமோ நாராயணாய