Monday 11 December 2017

23. வண்ணப் பாடல் - 05 - திருவண்ணாமலை


இன்று (02.12.2017) திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா. அண்ணாமலையார் மீது ஒரு வண்ணப் பாடல்.

அடாணா ராகம்
சதுஸ்ர ஜம்பை தாளம் (7) [தகதகிட (2 1/2) + தகிட (1 1/2) + தகதிமிதக (3)]

சந்தக் குழிப்பு:
தனதனன தான தனதான

பெருவினையில் ஊறி நலியாதே
..பிணிமுதுமை ஏதும் அணுகாதே
அரனடியை நாடி மனமார
..அரைநிமிட மேனும் நினைவேனோ
கரியுரிவை பூணும் மறவோனே
..கதியடைய நீயும் அருள்வாயே
எரிவடிவ மான இறையோனே
..எழிலருணை மேவு பெருமானே

நலிதல் - தேய்தல் / அழிதல்
உரிவை - தோல்
மறவன் - வீரன்
எரி - நெருப்பு

குறிப்பு - இங்கு அணுகாதே, நலியாதே ஆகிய இடங்கள், அணுகாமலும், நலியாமலும் என்ற பொருளில் வருகின்றன. அதாவது, வினையில் நாம் ஊறி நலியாமலும், பிணி, முதுமை போன்ற அவஸ்தைகள் நம்மை அணுகாமலும் இருக்க அரனின் தாளை நாடி, மனமார அவரை ஒரு அரை நாழியாவது நினைக்க மாட்டோமா எனுமாறு....

அண்ணாமலையானுக்கு அரோஹரா

சரண்யா.



Friday 8 December 2017

22. வண்ணப் பாடல் - 04 - திருவானைக்கா

ராகம் - துர்கா
தாளம் - சதுஸ்ர ஏகம் (திஸ்ர நடை)

தய்ய தான தனதனனா

வெள்ளை நாவல் அடியமரும்
..மெய்ய னேவெல் விடையுடையாய்
உள்ள மார உனைநினைவேன்
..உய்யு மாறு தனையருள்வாய்
தெள்ளி யார ணியமுறையும்
..செய்ய மேனி உடையவனே
வெள்ள மாகி நிறைபவனே
..வெய்ய ஊறு களையரிவாய்

வெள்ளை நாவல் - ஆனைக்கா ஸ்தல வ்ருக்ஷம்
உய்யு மாறு - உய்யும் ஆறு (வழி)
தெள்ளி - யானை
தெள்ளி ஆரணியம் - ஆனைக்கா
வெள்ளம் - நீர் (அப்பு ஸ்தலம்)
வெய்ய ஊறுகளை அரிவாய் - கொடிய துன்பத்தை அழிப்பாய்

பாடலைக் கேட்க:

https://drive.google.com/open?id=0By387kvntVlPLTRYcmZYeDBKOU0

21. வண்ணப் பாடல் - 03 - திருச்சிராப்பள்ளி

ராகம் - சிந்துபைரவி தாளம் - விலோம சாபு (மிஸ்ரசாபு வின் reverse) சந்தக் குழிப்பு: தனதன தான தனதன தான தனதன தான தனதான வியனென வாகி வளியொளி யாகி விரிபுன லாகி நிலமாகி ..விதையது வாகி விதியது மாகி விமலசொ ரூப நிலையாகி உயரிய ஞான மறைபொரு ளாகி உயிரொலி யாகி நிறைவோனே ..உனதிரு பாத மகிமையை நாளும் உவகையொ டோத அருள்வாயே அயனரி யாதி அமருல கோரும் அறியவொ ணாத வடிவோனே ..அறுமுக னோடு மிபமுக னோடும் அழகுடன் ஆடும் அயிலோனே செயமுக மீது சிறுநகை யோடு சிரகிரி மேவு பெருமானே ..சிறியனை ஆள நரைவிடை ஏறி விழைவொடு நீயும் வருவாயே விதை - மூலம் / தொடக்கம் விதி - முறை / வழிமுறைகள் உயிரொலி - பிரணவம் அயில் - சூலம் செயமுகம் - செய - வெற்றி அல்லது (செய்ய -> செய) அந்தி வண்ணம் (சிவப்பு நிறம்) தவழும் முகம் விழைவொடு - மகிழ்வொடு பாடலைக் கேட்க: https://drive.google.com/open?id=0By387kvntVlPSDBYSXViZjFFLWM சரண்யா

Friday 1 December 2017

20. வண்ணப் பாடல் - 02 - திருமயிலை

ராகம் - நளினகாந்தி தாளம் - ஆதி சந்தக் குழிப்பு: தனதன தனதன தனதான விரிசடை யினிலொலி நதியோடு ..மிளிரழ குடைமதி புனைவோனே கரமதி லொளிமிகு மழுவோடு ..கலையையும் அனலையும் உடையோனே நரையெரு தினிலம ரதிதீரா ..நளினம துரமுக உமைபாகா
திருவடி நிழலினை அருள்வாயே
..திருமயி லையிலுறை பெருமானே பதம் பிரித்த வடிவம் : விரிசடையினில் ஒலிநதியோடு ..மிளிரழ(கு) உடைமதி புனைவோனே கரமதில் ஒளிமிகு மழுவோடு ..கலையையும் அனலையும் உடையோனே நரை எருதினில் அமர் அதிதீரா ..நளின மதுரமுக உமைபாகா திருவடி நிழலினை அருள்வாயே
திருமயிலையில் உறை பெருமானே

சரண்யா.

Friday 24 November 2017

19. திருநறையூர் (நாச்சியார்கோவில்) (பிரபந்தம் 2)

திருநறையூர் (நாச்சியார்கோவில்)
[கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது]

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா

காய் காய் காய் காய்

மூவுலகை ஈரடியால் முன்பொருநாள் அளந்தானை;
மாவலியின் கருவத்தை மறித்தானை; இடைமேய்க்கும்
கோவலனை; இன்னருளைக் கொடுப்பானை; மாமருவும்
தேவனையென் ஆரமுதைத் திருநறையூர்க் கண்டேனே. 1

மறித்தல் - அழித்தல்
மா - திருமகள்

கீதையினை அருள்செய்த கேசவனைக் குழலூதும்
யாதவனைக் கோபியர்கள் யாவர்க்கும் கோமானைக்
கோதையருள் பாமாலை கொண்டாடும் மாதவனைச்
சீதையவள் நாயகனைத் திருநறையூர்க் கண்டேனே. 2

நீர்மல்கும் கடலைத்தன் நிலையாகக் கொண்டானைப்
பேர்மல்கும் பெரியானைப் பேரொளியாய்த் திகழ்வானைக்
கார்மல்கும் மேனியனைக் கதிராழி கொண்டானைச்
சீர்மல்கும் சீதரனைத் திருநறையூர்க் கண்டேனே. 3

கடல் - பாற்கடல்
நிலை - இருப்பிடம்

மாவாயைப் பிளந்தானை மத்தகரி கொன்றானை
மூவானை முதலானை முன்நடுபின் இல்லானை
நாவாரப் பறைவோர்க்கு நல்லருளைத் தருவானைத்
தேவாதி தேவனைநான் திருநறையூர்க் கண்டேனே. 4
மா - குதிரை
மத்தகரி - மத யானை (குவலயாபீடம்)
பறைதல் - புகழ்தல்

விண்ணவர்கள் யாவர்க்கும் வேயமுதம் தந்தவனை
எண்ணவொணா எழிலானை ஏற்றமெமக் களிப்பானைப்
பண்ணிசைக்கும் பாவலனைப் பார்த்தனவன் சாரதியைத்
திண்ணியதோள் உடையானைத் திருநறையூர்க் கண்டேனே. 5

கானகத்தில் நடந்தானைக் கடுந்துயரங் கொண்டானைத்
தானவர்கள் யாவரையும் சாய்த்தானைத் துதிசெய்த
வானவரைக் காத்தானை வஞ்சுளையை மணந்தானைத்
தீனனெனைக் காப்பானைத் திருநறையூர்க் கண்டேனே. 6

வஞ்சுளை - மேதாவி மகரிஷிக்கு மகளாக வகுளத்தின் (மகிழ மரத்தின்) அடியில் மஹாலக்ஷ்மி தோன்றினாள். அவளுக்கு வஞ்சுளா தேவி என்று பெயரிட்டார். பெருமாள் வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்து இங்கு மணந்தார்.

புள்ளரையன் மேலேறிப் பொலிவோடு வருவானை
வெள்ளமிசை ஆலிலையில் துயில்வானை அடியார்கள்
உள்ளமெனும் இல்லத்துள் உறைகின்ற உத்தமனைத்
தெள்ளியசீர் சிங்கத்தைத் திருநறையூர்க் கண்டேனே. 7

புள்ளரையன் - கருடன். கல் கருடன் உற்சவம் நாச்சியார்க்கோவிலில் மிகவும் பிரசித்தி.

காமனவன் தாதையினைக் கார்முகில்போல் கறுத்தானை
வாமதேவ னைத்தனது வலப்புறத்தில் வைத்தானைப்
பூமகளைக் காத்தானைப் புவிவாழப் பிறந்தானைத்
தீமைகளைக் களைவானைத் திருநறையூர்க் கண்டேனே. 8

காமன் - மன்மதன்
தாதை - தந்தை
வாமதேவன் - சிவன் (சங்கர நாராயண வடிவத்தில் சிவன் வலது புறமும் திருமால் இடது புறமும் இருப்பார்)
பூமகள் - பூமா தேவி

அக்கரமோர் எட்டாலே அழைத்திடவே வருவானைத்
துக்கமதைத் துடைப்பானைச் சுடராழி யைக்கொண்டு
சிக்கலவை அறுப்பானைச் சிங்கமுகப் பெருமானைத்
திக்கெதிலும் நிறைவானைத் திருநறையூர்க் கண்டேனே. 9

துக்கம் - துன்பம்
சிக்கல் - இடையூறு
திக்கெதிலும் - எல்லாத் திக்குகளிலும், இடங்களிலும் நிறைந்தவன்.

அலையிடையே அரவுமிசை அறிதுயிலும் அச்சுதனை
நிலைகொடுக்கும் பெரியானை நிரைதன்னை மேய்ப்பானைக்
கலையுடைய கோகுலத்தைக் காப்பதற்குக் குடையாகச்
சிலையெடுத்துப் பிடித்தானைத் திருநறையூர்க் கண்டேனே. 10

அறிதுயில் - யோகநிஷ்டை
நிலை - வீடுபேறு
நிரை - பசுக்கூட்டம்
கலை - ஒளி/அழகு
சிலை - கோவர்த்தன மலை

Tuesday 31 October 2017

18. வண்ணப் பாடல் - 01 - நரமுக கணபதி - திருச்சி

திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில் கீழரன் சாலையிலுள்ள (East Bouleward Road) நன்றுடையான் கோயிலில் அருள்புரியும் நரமுக கணபதி மேல் ஒரு வண்ணப் பாடல். 

ராகம் - கானடா
தாளம் - ஆதி

சந்தம்:
தனதன தனதன தனதன தனதன 
தனதன தனதன தனதான 

அருமலர் கொடுநிதம் அடிபணி பவரவர்
..அடைதுயர் களையழி அதிதீரா!!
.அறுகுடன் அரிசியும் அவல்பொரி அளியிட
...அறிவெனும் ஒளிதரும் அருளாழீ

நரைவிடை யினிலமர் நிருமல! எழிலொலி
..நதிபுனை சிவனுமை புதல்வோனே!
.நறைமலர் மழுதளை இவையணி கரமுடை
...நரமுக கணபதி அருள்வாயே!!

பரிபுரம் அணிபதம் அதைஎளி யனெனது
..பவமற முடிமிசை இடுவாயோ
.பணையதன் நிழலினை இடமென விழைபவ! 
...பணிதனை அரையினில் அணிவோனே 

திரிசிர கிரியதன் அடியமர் குணபர
..திடமிக வுடைவடி வழகோனே 
.செறிவுடை வயல்நிறை வளவனின் நகருறை
...திருமிக அருளிடும் இறையோனே 

அறுகு - அறுகம் புல்
அளி - தேன்
இடு - இடுதல் / வைத்தல் / அர்ப்பணித்தல்
நரைவிடை... - இந்த நன்றுடையான் கோயில் விநாயகருக்கு நந்தி வாகனம். 
தளை - கயிறு.
இந்த ஆதி விநாயகர், கைகளில் தாமரை, கோடரி, பாசக்கயிறு ஆகியவற்றை வைத்துள்ளார். 
பவம்-பிறப்பு
அற - முற்று பெறுதல் / முழுவதும் ஒழிதல்
முடி - தலை
பணைமரம் - அரசமரம். பொதுவாக பிள்ளையார், அரசமரத்தடியில் விரும்பி அமர்வார். இந்தக் கோயிலிலும் அரசமரம் இருக்கிறது. 
பணி - பாம்பு. நாகாபரணத்தை இடையில் அணிந்துள்ளார். 
சிராப்பள்ளி மலைக்குக் கீழே இந்த  ஆலயம் அமைந்துள்ளது. 
வளவன் - சோழன்



Monday 30 October 2017

17. பொது - சிவன்

இன்று காலை என் மனத்தில் எழுந்த கவிதை...

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாய்பாடு: விளம் மா காய் (அரையடி)

உலகமே ஒருநா டகமேடை
..உணர்ந்திடின் ஒருபா தகமில்லை
அலகிலா விளையாட் டுடையீசன்
..அனுதினம் அரங்கேற் றிடும்லீலை
விலகினால் விரும்பி வரும்யாவும்
..விரும்பினால் விலகிச் செலுமவையே
மலரடி பணிவார்க் கிடரில்லை
..மருளிலை மனமே தெளிவாயே

சரண்யா
28.10.2017

Thursday 12 October 2017

16. திருவரங்கம் (பிரபந்தம் 1)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாய்பாடு:
விளம் மா காய்
..மா மா காய்

இருநதி களுக்கு நடுவினிலே
..இனிதாய்ப் பள்ளி கொண்டோனே!
திருவடி நிழலை அடைவோர்க்குச்
..சிறந்த பேற்றைத் தருவோனே!
கருநிற மேனி உடையோனே!
..கருணைக் கடலே! பணிவோர்மேல்
அருளினை வாரிப் பொழிவாயே!
..அரங்கத் துறையும் அம்மானே! 1

இருநதி - காவிரி, கொள்ளிடம்.
அம்மானே - அம்மான் (பெரியோன்) என்பதன் விளி.

நாலிரண் டெழுத்தால் நாமேத்த
..நலங்கள் யாவும் தருவோனே!
பாலக னே!பண் ணிசைபோற்றும்
..பவளச் செவ்வாய் உடையோனே!
வாலியை வென்ற வல்லவனே!
..மறையைக் காக்கும் மன்னவனே!
ஆலிலை மேலே துயில்வோனே!
..அரங்கத் துறையும் அம்மானே! 2

வானவர் கோவின் அகந்தையினை
..மலையைத் தூக்கி அழித்தவனே!
தானவர் பலரைச் சாய்த்தவனே
..தாபம் தீர்க்கும் அருளாளா!
தேனினும் இனிய குழலதனைத்
..தினமும் இசைத்துக் கவர்வோனே!
ஆனிரை மேய்க்கும் அழகோனே!
..அரங்கத் துறையும் அம்மானே! 3

வானவர் கோ - இந்திரன் (கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்த வைபவம்)

சகடனை உதைத்த கழலோனே!
..சபரிக் கருள்செய் பெருந்தகையே!
பகலவன் முதலோர் பணிந்தேத்தும்
..பச்சை வண்ணப் பெருமாளே!
இகபரம் தனிலே இன்பங்கள்
..என்றும் அருளும் இன்னமுதே!
அகலிகை சாபம் தீர்த்தோனே!
..அரங்கத் துறையும் அம்மானே! 4

சகடன் - சகடாசுரன்
பகலவன் - சூரியன்

உலகினைக் காக்கும் திருமாலே!
..ஒப்பில் லாத பெரியோனே!
சலனமென் றேதும் இல்லாத
..தலைவா! அடியார்க் கருள்வாயே!
நிலமகள் அவளைக் காத்தோனே!
..நேமி தன்னை உடையோனே!
அலைகடல் தனிலே துயில்கொண்ட
..அரங்கத் துறையும் அம்மானே! 5

நிலமகள் - பூமா தேவி

வையகம் தழைத்து வளர்வதற்கு
..வரங்கள் வாரிப் பொழிவோனே!
பையர வம்மேல் துயில்வோனே
..பத்தர் சொல்லில் மகிழ்வோனே!
மையுரு மேனி கொண்டோனே!
..வைகுந் தத்தில் வசிப்போனே!
ஐவரைக் காத்த அருளாளா!
..அரங்கத் துறையும் அம்மானே. 6

ஐவர் - பாண்டவர்கள்

வீடணன் வைத்த திருவுருவே!
..விண்ணோர் ஏத்தும் உத்தமனே!
கேடறுத் தருளும் கேசவனே!
..கீதம் கேட்டு மகிழ்வோனே!
ஈடிணை யற்ற அழகோனே!
..என்றும் நிலையாய் இருப்போனே!
ஆடர வின்மேல் துயில்கொண்ட
..அரங்கத் துறையும் அம்மானே! 7

வாரணம் அழைக்க வந்தோனே!
..மாசில் லாத மாதவனே!
ஈரடி யாலே மூவுலகை
..எளிதாய் அளந்த பெருமானே!
காரணப் பொருளாய் இருப்பவனே!
..கண்ணால் உலகை ஆள்பவனே!
ஆரமு தே!யென் னருமருந்தே!
..அரங்கத் துறையும் அம்மானே! 8

கொண்டலின் வண்ணம் கொண்டோனே!
..கோதை அவளை மணந்தோனே!
எண்டிசை யோரும் பணிந்தேத்தும்
..எழிலே! என்றன் ஆருயிரே!
வண்டுகள் மொய்க்கும் தேமலரை
..மனத்தால் விரும்பி ஏற்போனே!
அண்டம தாளும் ஆண்டவனே!
..அரங்கத் துறையும் அம்மானே! 9

வேயமு தே!வல் வினையறுப்போய்!
..வேதம் போற்றும் வேங்கடவா!
மாயவ னே!மல் லரைமாய்த்தோய்!
..மண்ணை உண்ட மணிவண்ணா!
தூயவ னே!திண் தோளுடையோய்!
..துயரைப் போக்கும் தூமணியே!
ஆயிரம் நாமம் கொண்டோனே!
..அரங்கத் துறையும் அம்மானே! 10

எனது தோழி ருக்மணி, இந்தத் திருவரங்கப் பதிகத்தில், கம்ப ராமாயணம் மற்றும் அருணாசல கவிராயரின் இராம நாடக கீர்த்தனைகள் ஆகியவை இத்தலத்தில் அரங்கேறியதைப் பற்றி சேர்க்க முடியுமா என்று கேட்டிருந்தார்.

அரங்கனின் அருளால் ஒரு பாடல் அதே வாய்பாட்டில் அமைந்து வந்துள்ளது. அவர் கேட்ட ஒரு பத்து நிமிடங்களில் திருமால் பாடலாக வந்து அமர்ந்தார். இன்று நிறைவுப் பாடலாய் அந்த வரிகளை இடுகிறேன்.

கம்பரின் இராமா யணந்தன்னைக்
..களிப்பாய்க் கேட்ட நரசிங்கா!
வம்பலர் மாலை களைவிரும்பி
..மார்பில் அணியும் மணிவண்ணா!
கம்பொடு நேமி யினையுடையாய்!
..கவிரா யருக்கன் றருள்செய்தோய்!
அம்புய நாபா! அருளாழீ!
..அரங்கத் துறையும் அம்மானே! 11

கம்ப ராமாயண அறங்கேற்ற மண்டபத்தருகே மேட்டழகிய சிங்கர் சன்னதி உள்ளது. கம்பர் தன் கவியில் நரசிம்மாவதாரம் பற்றி பாடிய பகுதி, ராமாயணத்தில் உள்ளது அல்ல. ஆதலால் ஏற்புடையதல்ல என்று அறிஞர்கள் சொல்ல, கம்பர் இந்த நரசிம்மர் முன், இந்த துதிகளைச் சொல்ல, அவற்றை ஆமோதிப்பது போல, கர்ஜனை செய்தார். அதனால் நரசிங்கா என்று அமைத்துள்ளேன்.

கவிரா யருக்கன் றருள்செய்தோய் - கவிராயருக்கு அன்று அருள்செய்தோய்..
கம்பு - சங்கு

Friday 11 August 2017

15. திருமீயச்சூர் (பதிகம் 9)

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா

வாய்பாடு: காய் காய் காய் காய்

மாயத்தார் அறியவொணா மகிமையுடைச் சத்தியனும்
தேயத்தோர் தாமேத்தும் தேனமுதம் ஆனவனும்
நேயத்தோ டெமையாளும் நிர்மலனும் நித்தியனும்
மீயச்சூர் தனிலுறையும் வினைபோக்கும் இறையவனே. 1

மாயத்தார் - மாயையில் கட்டுண்டோர்.
தேயத்தோர் - அறிவில் சிறந்த சான்றோர்.
ஏத்துதல் - வழிபடுதல்

பெண்ணுறையும் மேனியனும் பேரொளியாய்த் திகழ்பவனும்
கண்ணொருமூன் றுடையவனும் கருணைமிகு தேவனும்நற்
பண்ணிசையில் மகிழ்பவனும் பவளநிறம் கொண்டவனும்
வெண்ணிலவை அணிபவனும் மீயச்சூர் உறைகோவே. 2

சடையதன்மேல் விரிநதியும் தண்மதியும் புனைவோனும்
உடையதுவாய் மதகரியின் வன்தோலை உடுப்போனும்
நடுநிசியில் இடுகாட்டில் நடமாடி மகிழ்வோனும்
விடையதன்மேல் வருவோனும் மீயச்சூர் உறைகோவே. 3

விரிநதி - விரிந்து பாயும் கங்கை நதி
தண்மதி - குளிர் மதி
மதகரி - மத யானை

படவரவைத் தொடையெனவே பாங்காக அணிவோனும்
இடமதனை மடமாதிற்(கு) இடமாக அளித்தோனும்
வடவரையை வில்லாக வைத்தெயில்மூன் றெரித்தோனும்
விடமதனை உண்டோனும் மீயச்சூர் உறைகோவே. 4

படவரவு - பட + அரவு = படமெடுக்கும் பாம்பு
தொடை - மாலை
இடம் - இடபாகம்
மடமாது - மடம் + மாது = அழகிய பெண்; மடம் = அழகு.
வடவரை = வட + வரை = மேரு மலை. வடக்கே உள்ள மலை.
எயில் மூன்று = திரிபுரம்

சோதனைகள் யாவையுமே தோல்வியுறச் செய்பவனும்
ஓதுமறை நான்கினுளே உறைவோனும் ஒளிர்வோனும்
கீதமதில் திளைப்போனும் கேழல்கொம் பணிவோனும்
மேதினியை ஆள்வோனும் மீயச்சூர் உறைகோவே. 5

கேழல் - பன்றி; வராகம்.
சிவபெருமான், தனது அடியைக் காண முடியாத வராகத்தின் (விஷ்ணு) வெண் கொம்புகளில் ஒன்றையுடைத்து, தனது இடையில் அணிகலனாக அணிந்துள்ளார்.

மான்மழுதீ இவையேந்தி நடம்புரியும் வல்லோனும்
வான்வளிதீ நீர்மண்ணென் றைம்பூதம் ஆனோனும்
தேன்வழியும் மலர்மாலை தனைச்சூடும் சேகரனும்
மேன்மைபல தருபவனும் மீயச்சூர் உறைகோவே. 6

காலனைஓர் காலாலே கடிந்தோனும் மோனத்தில்
ஆலதனின் நீழற்கீழ் அறங்கூற அமர்ந்தோனும்
கோலவடி வானவனும் குற்றங்கள் பொறுப்பானும்
வேலவனைத் தந்தோனும் மீயச்சூர் உறைகோவே. 7

தசமுகனின் செருக்கதனைத் தகர்த்தவனும் பின்னரவன்
இசைமடுத்து மகிழ்ந்தவனும் இன்னருளைத் தந்தவனும்
விசயனுக்குப் பாசுபதம் விருப்புடனே அளித்தவனும்
திசையெட்டும் பணிந்தேத்தும் திருமீயச் சூர்க்கோவே. 8

சக்கரத்தை மாலுக்குத் தந்தானும் மதியாத
தக்கனவன் பெருவேள்வி தகர்த்தானும் முன்னவனும்
முக்கணனும் பிறவானும் மூவானும் இறவானும்
விக்கினங்கள் தீர்ப்பானும் மீயச்சூர் உறைகோவே. 9

முன்னவன் - ஆதி.
முக்கணன் - முக்கண்ணன்
பிறவான்,மூவான்,இறவான் -> ஜன்மம், ஜரா, ம்ருத்யு இம்மூன்றும் இல்லாதவன்

கன்னல்விற் காமனைஓர் கண்ணாலே காய்ந்தோனும்
இன்னல்கள் தீர்ப்பானும் இன்பங்கள் சேர்ப்பானும்
அன்னத்தை வெண்டலையில் அகமுவந்தே ஏற்பானும்
மின்னல்போல் ஒளிர்வானும் மீயச்சூர் உறைகோவே. 10

கன்னல் - கரும்பு
வெண்டலை - வெண்மையான மண்டை ஓடு = வெண் தலை.

Wednesday 26 July 2017

14. திருக்கற்குடி [உய்யக்கொண்டான் திருமலை] (பதிகம் 8)

வணக்கம்.
அடுத்த பதிகம் - திருக்கற்குடி - உய்யக்கொண்டான் திருமலை.

கலி விருத்தம்.
வாய்பாடு - விளம் மா விளம் மா

பாத்திரம் ஏந்திப் பலிதனில் மகிழும்
சாத்திரம் போற்றும் சற்குரு நாதா!
மாத்திரைப் போதில் வாட்டம ரிந்து
காத்தருள் வாயே கற்குடித் தேவே. 1

வாட்டம ரிந்து - வாட்டம் அரிந்து
அரிதல் - அழித்தல்

தவமது புரிவோய்! தாரணி மார்பா!
சிவசிவ எனநின் சீர்ப்பெயர் சொலாது
பவவினை தனிலே பயந்துழன் றிடுமெம்
கவலைகள் அறுப்பாய் கற்குடித் தேவே. 2

தாரணி மார்பா - தார் அணி மார்பா
தார் = பூமாலை

அருத்தஅம் புலியை அணிந்திடும் அரனே!
நிருத்த!என் றுன்றன் நீள்கழல் பேணா(து)
இருட்டினில் உழலும் எமக்குயர் வான
கருத்தினை அருள்வாய் கற்குடித் தேவே. 3

அருத்த அம்புலி - பாதி நிலா (அர்த்த = அருத்த)
நிருத்த - நிருத்தன் என்பதன் விளி - நிருத்தா. அணுக்க விளி நிருத்த. பெருமா என்பதை பெரும என்றும் விளிப்பதுண்டு. அதுபோல் நிருத்தா என்பதை நிருத்த என்று விளித்துள்ளேன்.
நிருத்தம் = நாட்டியம். நாட்டியம் ஆடுபவன் நிருத்தன்.
கருத்து - மனம்

பொற்பதம் தூக்கிப் பொற்சபை தனிலே
அற்புத நடனம் ஆடிடும் அரசே
கற்பிதச் சூழைக் களைந்திடு வாயே
கற்பகத் தருவே கற்குடித் தேவே. 4

சூலம(து) ஏந்தும் சுத்தசெஞ் சுடரே!
ஆலதன் நிழலில் அமர்ந்தறம் உரைக்கும்
பாலதன் வண்ணா! பாலனைக் காக்கக்
காலனை உதைத்த கற்குடித் தேவே. 5

மார்க்கண்டேயன் காலனால் துரத்தப்பட்டப் போது பல ஆலயங்களில் உள்ள இலிங்கத் திருமேனியை வணங்கி வந்தான்.

உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள இறைவனை வணங்கிய போது, இறைவன் அவன் முன்னே தோன்றி, "உனக்குப் புத்துயிர் அளிக்கிறேன்" என்று சொன்னார். அதனால் உஜ்ஜீவநாதர் என்று பெயர் பெற்றார்.

பின்னர், திருவேற்காட்டில் மர்கண்டேயனை "சிரஞ்சீவி" என்று அருளி, திருக்கடவூரில் காலனை உதைத்தார் என்று தலவரலாறு தெரிவிக்கிறது.

எயிலவை மூன்றை எரித்தசெந் தழலே!
முயலகன் மேலே ஆடிடும் முதல்வா!
மயிலமர் கோன்சொல் மந்திரப் பொருள்கேள்
கயிலையம் பதியே! கற்குடித் தேவே. 6

எயில் மூன்று - திரிபுரம்
தழல் - தீ
முயலகன் - தீமைகளின் உருவகமான அரக்கன்.
முயலகம் என்பது வலிப்பு வியாதி. அதனால் இறைவன் முயலகன் மீது ஏறி நின்று அவனை வெளிவிடாமல் ஆடுகிறார் என்றால், வியாதிகள் நம்மை அணுகாது காக்கிறார் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.
மயிலமர் கோன் - முருகன்

அருளுடைச் சுடரே! அருமருந் தே!யெம்
பெருவினை பிணியைப் பெயர்த்திடும் பரனே!
ஒருபுறம் உமைக்குத் தந்தநற் சீலா!
கருணையின் உருவே! கற்குடித் தேவே! 7

இமிழ்கடல் தனிலே எழுவிடந் தனைத்தெள்
அமிழ்தெனப் பருகி அவனியைக் காத்தோய்!
தமிழ்தனில் மகிழ்வோய்! தவமுனிக் கருளும்
கமழ்சடை யானே கற்குடித் தேவே. 8

இமிழ் = ஒலித்தல். அலையோசை ஒலிக்கும் கடல்.
கமழ்தல் = மணம் வீசுதல் / பரவுதல். பரவிய சடையன்.

அலையினில் துயிலும் அச்சுதன் தானும்
கலைமகள் கோவும் கண்டறி யானே!
மலைமகள் மருவும் மலர்ச்சுடர் ஒளியே!
கலையமர் கரத்தோய்! கற்குடித் தேவே 9

கலைமகள் கோ = பிரமன்
கலையமர் கரத்தோய் - மான் அமரும் கரம் உடையவர் (மானைக் கையில் கொண்டவர்)

விண்ணவர் போற்றும் வித்தக வேந்தே!
வெண்ணில வணியும் விரிசடை யோனே!
பெண்ணுறை தேகா! பேரெழிற் கோவே!
கண்ணுத லானே! கற்குடித் தேவே! 10

Monday 10 July 2017

13. திருவிடைமருதூர் (பதிகம் 7)

வணக்கம்.

அடுத்த பதிகம் - திருவிடைமருதூர்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

(மங்கள ரூபிணி மதியணி சூலினி என்ற தமிழ்ப் பாடல் அமைப்பு. அயிகிரி நந்தினி அமைப்பும் கூட..)

வாய்பாடு:
விளம் விளம் விளம் விளம்
..விளம் விளம் காய்

மங்கள வடிவினர் மறைதனில் உறைபவர்
..மன்னுயிர் காத்திடும் மன்னரவர்
திங்கள ணிந்திடும் செந்நிற மேனியர்
..தீவினை தீர்த்திடும் தேவரவர்
அங்கயற் கண்ணியின் அங்கரம் பற்றிய
..அம்புலி அதளணி அரசரவர்
எங்களை ஆண்டிடும் எழில்மிகு நாயகர்
..இடைமரு தூருறை இறையவரே. 1

அம்புலி - அம் + புலி -> அழகிய புலி
அதள் - தோல்

விண்ணவர் ஏத்திடும் வித்தகக் குருவவர்
..வெள்விடை ஏறிடும் பாகனவர்
பெண்ணுறை மேனியர் பிறைமதி சூடிடும்
..பேரொளி யாய்த்திகழ் பரமனவர்
கண்ணுதற் தேவவர் கனைகடல் இருந்தெழு
..கார்விடம் தனைநுகர் ஈசனவர்
எண்ணுதற்(கு) இனியவர் எழில்வடி வானவர்
..இடைமரு தூருறை இறையவரே 2

தன்னிகர் அற்றவர் தத்துவம் ஆனவர்
..தண்ணருள் தந்திடும் தேசனவர்
நன்மைகள் யாவையும் நயமுடன் அருள்பவர்
..நரைவிடை மேல்வரும் நம்பனவர்
மின்னொளிர் மேனியர் மெய்ந்நிலை தருபவர்
..மேதினி காத்திடும் பாலனவர்
இன்னிசை தனில்மகி ழும்பர மானவர்
..இடைமரு தூருறை இறையவரே 3

நம்பன் - ஆணிற்சிறந்தோன் ; கடவுள் ; சிவன்.
பாலன் - காவலன் (க்ஷேத்ரபாலன் என்பதில் வருவது போல்)

கடலிருந் தெழுவிடம் தனைநுகர்ந் தவரவர்
..காசினி வாழ்வதற் கருளியவர்
படவர வணிபவர் பழவினை தீர்ப்பவர்
..பணிபவர்க் கருளிடும் பரமனவர்
நடுநிசி யில்நடம் ஆடிடும் நாயகர்
..நாடிடும் அன்பருள் ளிருப்பரவர்
இடரது நசிப்பவர் இன்பம ளிப்பவர்
..இடைமரு தூருறை இறையவரே 4

நீறத னைத்திரு மேனியில் அணிபவர்
..நீண்டழ லானவி கிர்தனவர்
பேறுகள் அருள்பவர் பிஞ்சுவெண் ணிலவணி
..பெருமுலை நாயகி நாதனவர்
ஆறது சூடிடும் அருமறை வித்தகர்
..ஐவிரற் கோவணம் தனையணிவர்
ஏறதில் ஏறிடும் இன்முகம் உடையவர்
..இடைமரு தூருறை இறையவரே 5

விகிர்தன் - கடவுள்
ஏறு - காளை

கூற்றுவ னையிடக் காலினா லுதைத்தவர்
..கூவிள மாலையைச் சூடுபவர்
போற்றிடும் அடியவர்க் கருளினைப் பொழிபவர்
..பொற்சபை யில்நடம் ஆடுபவர்
வேற்றுவி காரமி லாதவர் மானிடர்
..வேதனை யாவையும் விரட்டுபவர்
ஏற்றம ளிப்பவர் இருவினை அறுப்பவர்
..இடைமரு தூருறை இறையவரே 6

அயனவ னுடையொரு சிரந்தனை அரிந்தவர்
..அபயம ளித்திடும் அண்ணலவர்
நயமுட னேநலம் யாவையும் அளிப்பவர்
..நானிலம் போற்றிட ஆடுபவர்
முயலகன் மேல்நடம் ஆடிடும் நாயகர்
..முத்திய ளித்திடும் முத்தனவர்
எயிலவை மூன்றினை எரியுறச் செய்தவர்
..இடைமரு தூருறை இறையவரே 7
அயன் - பிரமன்

மடமையி னால்மதி யால்நினை யாதுவெண்
..மலையினைப் பெயர்த்திட முனைந்தவனின்
மடமையை அழித்திடப் பெருவிரல் ஒன்றினை
..மலையினில் ஊன்றிய மாவலியர்
மிடறத னில்விடம் அதனைய டைத்தவர்
..மேனியில் நீறினைப் பூசுபவர்
இடபம தில்வரும் இசைவடி வானவர்
..இடைமரு தூருறை இறையவரே 8

மடமை - அறிவின்மை / கர்வம்
வெண்மலை - கயிலை மலை (பணி மூடிய வெள்ளை மலை)
*இராவணின் கர்வத்தை அடக்கிய கதை
மிடறு - தொண்டை
நீறு - விபூதி
இடபம் - ரிஷபம் / காளை

நேமியை ஏந்திய நாரண னுங்குளிர்
..நீரச மலர்மிசை உறைபவனும்
பூமியு ளாழ்ந்துமே விண்ணிலெ ழுந்துமே
..புரிதலுக் கரிதென உணர்த்தியவர்
சேமம ளிப்பவர் தேனமர் மலர்திகழ்
..சேவடி தொழுபவர்க் கருளுபவர்
ஏமம ருள்பவர் எங்குமு றைபவர்
..இடைமரு தூருறை இறையவரே 9

நேமி - சக்கரம்
நீரச மலர் - தாமரை மலர்
மிசை - மேல்
நீரச மலர் மிசை உறைபவன் - பிரமன்
சேமம் - நன்மை
ஏமம் - பாதுகாப்பு

குண்டிகைக் கையரும் சாக்கிய ரும்பிற
..கூட்டமும் தாமறி யாப்பெரியர்
வெண்டலை யில்பலி தேர்ந்திடும் அந்தணர்
..விசயருக் கத்திரம் அருளியவர்
துண்டவெண் மதியினைச் சூடிடும் சுந்தரர்
..தூயசெஞ் சுடரெனத் திகழுபவர்
எண்டிசை யோர்புகழ்ந் தேத்திடும் நாயகர்
..இடைமரு தூருறை இறையவரே 10

குண்டிகைக் கையர் - கமண்டலத்தைக் கையில் வைத்திருக்கும் சமணர்கள்
சாக்கியர் - பௌத்தர்கள்
பிற கூட்டம் - மற்ற நாத்திகர்கள்
வெண்டலை - வெள்ளை தலை - பிரம்ம கபாலம்
விசயன் - அர்ஜுனன்

இடைமருதூர் பதிகம் நிறைவுற்றது.

12. காஞ்சி முனி

கலி விருத்தம் - வாய்பாடு -  விளம் மா (அரையடி)

கருணையின் உருவே! காஞ்சியின் முனியே!
வரமிக அருளும் வையகக் குருவே!
கருதிடும் அடியார் கவலைகள் அறுக்கும்
அருமருந் தே!நற் கதியருள் வாயே!

சரண்யா.
08-06-2017

இன்று வைகாசி அனுஷம். காஞ்சி காமகோடி பீடாதிபதி பரமாச்சார்யாள் மகாபெரியவா ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி.

Friday 9 June 2017

11. பொது - திருக்குறுந்தொகை (பதிகம் 6)

வணக்கம்.

அடுத்த முயற்சி - குறிப்பாக இன்ன தலம் என்றில்லாமல், பொதுவாக, சிவபெருமான் மீது புனைந்த பாடல். அப்பர் பெருமானின் வட்டனை மதிசூடியை... என்ற தேவார அமைப்பில்.

கட்டளைக் கலிவிருத்தம் திருக்குறுந்தொகை அமைப்பில்.

இலக்கண குறிப்பை இப்பதிவின் இறுதியில் காண்க.

நாத னைந்நட மாடிடுந் தேவனை
வேத னைவ்விட முண்டவென் ஐயனைக்
கீத னைக்கெடி லத்துறை வேந்தனை
ஆத னையடி யேன்மறந் துய்வனோ. 1

ஆதன் - பெரியோன்/ஆன்மா
கெடிலத்துறை - கெடிலம் - திருவதிகை வீரட்டானத்தில் ஓடும் ஆறு.

தூய னைத்துயர் நீக்கிடும் ஈசனை
மாய னைம்மறைக் காட்டிலு றைவனை
நேய னைந்நிறம் ஓரைந் துடையனை
ஆய னையடி யேன்மறந் துய்வனோ. 2

ஆயன் - பொன் மயமானவர்

முத்த னைம்முது குன்றமர் கோவினைப்
பித்த னைப்பிறை சூடிய பேரெழிற்
சித்த னைச்சிரிப் பாலெயில் மூன்றெரி
அத்த னையடி யேன்மறந் துய்வனோ. 3

முதுகுன்று - விருத்தாச்சலம் (திருமுதுகுன்றம்)

கமல னுங்கரி யானும் அறிந்திடா
நிமல னைந்நீள் தழலாய் எழுந்தனை
விமல னைவ்விடை ஏறிடும் பாகனை
அமல னையடி யேன்மறந் துய்வனோ. 4

கமலன்-பிரமன்
கரியான்-விஷ்ணு

விருத்த னைவெண் குளிர்மதி சூடியை
நிருத்த னைநெடு நாகம் அணிந்தனைக்
கருத்த னைக்கார் மிடறுடை ஈசனை
அருத்த னையடி யேன்மறந் துய்வனோ. 5

மெய்ய னைம்மென் மலரணி புன்சடைச்
செய்ய னைச்சேர்ந் தறியாக் கரத்தனைக்
கையி னில்கன லேந்திநின் றாடிடும்
ஐய னையடி யேன்மறந் துய்வனோ. 6

சேர்ந்தறியாக் கரத்தன் - கூப்பிய கைகள் இல்லாதவன். நமக்கு ஏதாவது வேண்டுமென்றாலோ அல்லது நம்மைவிட பெரியவரைப் பார்த்தாலோ நாம் கைகளைக் கூப்பி வணங்குவோம். ஆனால் இறைவனிடம் எல்லாம் இருக்கிறது. அவருக்கு வேண்டுவது என்று எதுவும் இல்லை. மேலும் இறைவனே பெரியவன். அவரைவிடப் பெரியவன் வேறு யாரும் இல்லை. ஆதலால் அவர் கைகளைக் கூப்ப வேண்டியது இல்லை. அவர் கைகள் சேர்ந்து இருக்காது. சேர்ந்தறியாக் கையானை என்று மாணிக்கவாசக பெருமான், திரு அம்மானையில் பாடியுள்ளார்.

விண்ண வர்விரும் பித்தொழும் வேந்தனை
எண்ணு தற்கினி தான இறைவனைப்
பெண்ணு றைபெரு மானைப் பெருந்துறை
அண்ண லையடி யேன்மறந் துய்வனோ. 7

பெருந்துறை - திருப்பேணுபெருந்துறை (திருப்பந்துறை) என்று கும்பகோணம் - பூந்தோட்டம் பாதையில், நாச்சியார்க்கோவிலுக்கு அருகில் உள்ள பாடல் பெற்ற தலம். அல்லது திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில் (புதுக்கோட்டைக்கு அருகில்) என்றும் கொள்ளலாம்.

பூத னைப்புவி காத்திடும் பேரெழிற்
பாத னைப்பை அரவம் அணிந்தனைச்
சீத னைச்செஞ் சடைமேல் முடிந்தனைத்
தாத னைத்தமி யேன்மறந் துய்வனோ. 8

பூதன் - தூயன்.
சீதன் - சந்திரன்.
தாதன் - தந்தை.

கோதி லாக்கோ கழிதனில் வந்தனை
நீதி யைநிலை பெற்றிடச் செய்தனைச்
சோதி யைச்சுட ராயொளிர்ந் தோங்கிய
ஆதி யையடி யேன்மறந் துய்வனோ. 9

கோகழி - திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்.

உமையி னையொரு பாகம் உடையனை
இமைய வர்பணிந் தேத்தும் எழிலனைச்
சமண ருந்தர மில்லோ ருமறியா
அமுதி னையடி யேன்மறந் துய்வனோ. 10

இமையவர் - தேவர்கள்
சமண ருந்தர மில்லோ ருமறியா - சமணரும் தரம் இல்லோரும் அறியா.
தரம் இல்லோர் - நாத்திகர்.

பி.கு:
1. இப்பதிகத்தில் பத்துப் பாடல்கள்.
2. பாடலுக்கு நான்கு அடிகள்.
3. ஒவ்வோர் அடியிலும்:
1. முதல் சீர் 'மா'
2. இரண்டாம் சீர் நேர் அசையில் தொடங்கும்
3. 2-3-4 சீர்களுக்கு இடையே வெண்டளை பயிலும்
4. அடி நேர் அசையில் தொடங்கினால், அடியில் 11 எழுத்துக்கள். நிரை அசையில் தொடங்கினால், 12 எழுத்துக்கள்.

ஐயா திரு பசுபதி அவர்களின் "கவிதை இயற்றிக் கலக்கு" புத்தகத்தில் அவர் கூறி இருந்ததை இங்கு பகிர்கிறேன். "கட்டளைக் கலிவிருத்தத்தில், 2-3-4 சீர்களுக்கு இடையே வெண்டளை பயின்று வருமாறு அமைத்தால், இந்த எழுத்துக் கணக்குகள் தானே சரியாகிவிடும்".

4. சந்தத்திற்காக சில வரிகளில் ஒரு ஒற்று (எ.டு. ந்,வ்,ம்) வரின் சிறக்கும்
5. முதல் சீரிலும், மூன்றாம் சீரிலும் மோனை வராது, முதல் சீர் முதல் அசை, இரண்டாம் சீர் இரண்டாம் அசை ஆகியவற்றில் மோனை பயின்று (கள்ள மோனை) அமைந்துள்ளது.

Tuesday 2 May 2017

10. திருநல்லம் (கோனேரிராஜபுரம்) - (பதிகம் 5)

அடியேனின் அடுத்த பதிகம் -
திருநல்லம். தற்போது, கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது.

கலி விருத்தம்.
மா மாங்காய்  (அரையடி)

அமுதத் துளிவீழ்ந்த அரச வனமேவும்
இமையோர் பணிந்தேத்தும் இடபக் கொடியோனே
உமையோ டமர்வோனே உவந்து நடமாடி
நமையுங் காப்பாயே நல்லத் துறைவோனே. 1

அமுதத் துளிவீழ்ந்த அரச வனம் - பத்ராஷ்வத்த வனம் என்று பவிஷ்ய  புராணத்தில், உத்தர காண்டத்தில்  இத்தலம் போற்றப்படுகிறது. பத்ரம் - தங்கம்.

அஷ்வத்தம் - அரசு.

அரச மரங்கள் நிறைந்த காடு. ப்ரளயத்தின் போது, ஈசன் அமுத கலசத்தை அம்பால் சாய்த்த போது, சில துளிகள் இத்தலத்தில் வீழ்ந்தது. அதனால் பொன்னிறமாக காட்சி அளித்தது.

பூமித் தாயன்று புனித நீர்கொண்டு
சேமம் உறவேண்டிச் சிறப்பாய்த்  துதிசெய்ய
ஏமம் தந்தோனே இனிதின் இனிதான
நாமம் பலகொண்ட நல்லத் துறைவோனே. 2

பூமி தேவி, ஹிரண்யாக்ஷனிடம் சிக்கி அல்லல் பட்டு, விஷ்ணுவால் காப்பாற்றப் பட்டதும் இங்கு வந்து சிவனை (உமாமகேஸ்வரரை)  வணங்கி நலம் பெற்றாள். பூமித் தீர்த்தம் என்று அன்னை உண்டாக்கிய குளம் ஒன்று  இக்கோவிலில் உள்ளது.

நீல கண்டத்தில் நெடிய அராச்சூடும்
கோல வடிவான கொன்றைச் சடையோனே
ஆல நீழற்கீழ் அறங்கள் உரைப்போனே
ஞாலங் காப்போனே நல்லத் துறைவோனே. 3

அரா - பாம்பு.

எட்டுத் திசையோரும் ஏத்தும் எழிலோனே!
பிட்டுப் பெறவேண்டிப் பிரம்பால் அடிபெற்றோய்!
மட்டு மலர்மாலை மார்பில் அணிவோனே!
நட்டம் பயில்வோனே! நல்லத் துறைவோனே! 4

எட்டுத் திக்பாலகரும், திருநல்லத்தைச் சுற்றி அவரவர்களுக்கு உரியதான திக்குகளில் கோவில் அமைத்து உமாமகேஸ்வரரை அந்தந்தக் கோவிலில் வழிபட்டனர்.

1. நாகம்பாடி (கிழக்கு - இந்திரன்)
2. அன்னியூர் (தென்கிழக்கு - அக்னி)
3. கருவிலி (தெற்கு - யமன்)
4. வயலூர் (தென்மேற்கு - நிருதி)
5. சிவனாரகரம் (மேற்கு - வருணன்)
6. வைகல் (வடமேற்கு - வாயு)
7. புதூர் (வடக்கு - குபேரன்)
8. நல்லாவூர் (வடகிழக்கு - ஈசானன்)

ஆகிய கோவில்கள்.

வேத கானத்தை விழைந்து மகிழ்வோனே
பேத மில்லோனே பெருமை உடையோனே
போதந் தருவாயே புன்மை தீர்ப்பாயே
நாத மயமான நல்லத் துறைவோனே. 5

விழைதல் - விரும்புதல்
பேதம் - வேறுபாடு / மாற்றம்
போதம் - ஞானம்.
புன்மை - துன்பம்.

தஞ்சம் அடைவோரைத் தாங்கி அருள்வாயே 
வஞ்சம் தீர்ப்பாயே வளங்கள் சேர்ப்பாயே
கொஞ்சும் அலைசூழ்ந்த கோலக் கடற்றந்த
நஞ்சு தனையுண்ட நல்லத் துறைவோனே. 6

*வஞ்சம் - கபடம்/சிறுமை
*கொஞ்சும் அலைசூழ்ந்த கோலக் கடல் - பாற்கடல். திருமால், பாம்பணையில் அங்கு துயில்வதால், அவரைக் கொஞ்சி அலைகள் விளையாடுகின்றன என்று கற்பனை செய்து எழுதியது.

மானும் சுடுதீயும் மழுவும் இவையேந்திக்
கானந் தனிலாடும் கச்சைக் கழலோனே
வானும் மண்ணெங்கும் வளர்செஞ் சுடரோனே
ஞானம் அருள்வாயே நல்லத் துறைவோனே. 7

கானம் - காடு.
கச்சை - சதங்கை.

இலங்கை யரையன்றன் இறுமாப் பழித்தோனே
கலங்கி யவன்செய்த கானம் கேட்டோனே
சலங்கை தனைக்கட்டிச் சதிரா டுங்கோவே
நலங்கள் அருள்வாயே நல்லத் துறைவோனே. 8

கதியென் றடைவோர்குக் கருணை புரியாயே;
விதியின் சிரங்கொய்தோய்! வில்வத் தொடையோனே!
சதியை இடங்கொண்டு சதியோ டிசைந்தாடும்
நதியைப் புனைந்தோனே! நல்லத் துறைவோனே!. 9

விதி - பிரமன்.
சதி - பார்வதி.
சதி - தாளம் (ஜதி)

நிமிர்புன் சடைமேலே நிலவை அணிவோனே 
குமிண்புன் னகைகொண்ட கோவின் கழற்பேணாச் 
சமணர் முதலார்க்குச் சற்றும் அருளானே
நமனைக் கடிந்தோனே நல்லத் துறைவோனே. 10

குமிண் புன்னகை கொண்ட கோ - குனித்த புருவமும் பாடலில் வருவது போல - குமிண் சிரிப்பு.

சமணர் முதலார்க்கு - சமணர் முதலான நாத்திகர்களுக்கு.

அருளானே - அருளாதவனே.

நமன் - எமன்.

Thursday 13 April 2017

09. திருவானைக்கா - (பதிகம் 4)

திருவானைக்கா (கரிவனம்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வாய்பாடு - விளம் மா காய் (அரையடி)

விரிசடை முடிமேல் வெண்மதியும்
.. விரிநதி தனையும் புனைவோனே 
திரிபுரந் தன்னைச் சிரிப்பாலே 
.. தீக்கிரை யாக்கிச் சாய்த்தோனே
அரியவன் தங்கை அவள்செய்த 
.. அரும்பெருந் தவத்தில் மகிழ்ந்தோனே
கரியினுக் கருள்செய் பெரியோனே
.. கரிவனம் மேவும் பெருமானே. 1

*சிரிப்பாலே - முப்புரத்தை, தன் மந்திரப் புன்னகையாலேயே எரித்தார்.
*அரியவன் - அரி அவன். அரி - திருமால்.
*கரி - யானை
*கரிவனம் - ஆனைக்கா.

மாலயன் அறியா மலர்ச்சுடரே
.. மாதொரு பாகம் கொண்டோனே
சீலனே தில்லைச் சிற்சபையில்
.. சீர்மிகு நடனம் புரிவோனே 
வேலவன் தன்னை விண்ணோர்தம்
.. வெந்துயர் தீர்க்கத் தந்தோனே
காலனைக் காலால் உதைத்தோனே
.. கரிவனம் மேவும் பெருமானே. 2

விண்ணவர் போற்றும் வித்தகனே 
.. வெள்விடை யேறும் வேதியனே 
மண்ணுயிர்க் கென்றும் மகிழ்வோடு
.. வரங்களை அருளும் மன்னவனே
தண்ணருள் உவந்து தருவோனே
.. சத்தியம் அதனை உரைப்போனே
கண்ணுதற் தேவே கருப்பொருளே
.. கரிவனம் மேவும் பெருமானே. 3

ஏவிய மரையும் எரிதழலும்
.. ஏந்திநின் றாடும் இறையோனே
கூவிள மாலை தனையணிந்த
.. குற்றமொன் றில்லாக் கோமானே
பூவினைத் தூவிப் புகழ்வோர்க்குப்
.. பூமியில் சிறந்த பேறருளும்
காவிரிக் கரையில் அமர்ந்தோனே
.. கரிவனம் மேவும் பெருமானே. 4

மரை - மான்.
தழல் - நெருப்பு.
தாருகாவன முனிவர்கள் சிவன் மீது ஏவியவற்றை தன் கைகளில் தாங்கி ஆடினார்.
கூவிளம் - வில்வம்.

அந்தகன் மமதை அழித்தோனே
.. ஆதவன் பல்லைத் தகர்த்தோனே
இந்திரன் முதலா வெண்டிசையோர்
.. ஏத்திடும் இன்பக் கழலோனே
தந்தியின் முகனைத் தந்தோனே
.. தத்துவப் பொருளாய் நின்றோனே
கந்தனைப் பெற்ற கருணையனே
.. கரிவனம் மேவும் பெருமானே. 5

*அந்தகன் - அந்தகாசுரன்.
*ஆதவன் பல்லைத் தகர்த்தல் - தக்கன், சிவனை மதியாது வேள்வியை நடத்தினான். அங்கே சிவன் சென்ற போது, பலரும் அவரை அவமதித்தனர். பகன் எனப்படும் தை மாதத்திற்குரிய சூரியன், நடந்தவற்றைக் கண்டு நகைத்தான். அதனால் கோபமுற்ற வீரபத்திரர், ஆதவனின் பல்லை உடைத்தார். பல் இல்லாத காரணத்தால், சூரியனுக்கு மிருதுவான, முந்திரி போன்றவை சேர்க்காத உணவை (சர்க்கரைப் பொங்கல் போன்றவை) சங்கராந்தி அன்று நிவேதனமாக கொடுக்கிறோம்.
*தந்தியின் முகனை - தந்தி இன்முகனை. இன்முகம் - ஸுமுகம் என்று விநாயகனுக்குப் பெயர்.

நாரியொர் பாகம் கொண்டவனே
.. நான்மறை போற்றும் நாயகனே 
நீரது வாகி அமர்ந்தோனே 
.. நீண்டழ லாகி நிமிர்ந்தோனே
சூரியன் முதலொன் பதுகோள்கள்
.. துதிசெய அருளும் ஆரியனே
காரிருள் நீக்கும் கதிரொளியே
.. கரிவனம் மேவும் பெருமானே. 6

*நாரி - பெண்
*நீரது வாகி அமர்ந்தோனே - ஆனைக்கா, அப்பு ஸ்தலம். நீரினைக் கொண்டு லிங்கத் திருமேனி செய்து, அம்பாள் வழிபட்டாள்.
*சூரியன் முதலொன் பதுகோள்கள் - சூரியன் முதல் ஒன்பது கோள்கள்.
*ஆரியனே - பெரியவனே

பைம்முக நாகம் அணிந்தோனே
..பத்தருக் கருளும் பரம்பொருளே
ஐம்முகங் கொண்ட அருளோனே
..ஐம்பெரும் பூதம் ஆனோனே
மைம்முக வேழம் உரித்தோனே
..வன்புலித் தோலை அணிந்தோனே
கைம்மழு வேந்தி நடஞ்செய்யும்
..கரிவனம் மேவும் பெருமானே. 7

பைம்முக நாகம் - சினத்தால் சீறும் படமெடுக்கும் நாகம்.
பத்தர் - அடியவர்.
ஐம்முகம் - ஸத்யோஜாதம் முதலிய ஐந்து முகங்கள்.
மைம்முக வேழம் - கரிய முகமுடைய யானை. யானையின் தோலுரித்தல் - அட்டவீரச் செயல்களில் ஒன்று.
கைம்மழு - கையில் மழு (சம்பந்தர் சிராப்பள்ளி தேவாரம் - நன்றுடையானை.... என்ற பதிகத்தில், இரண்டாம் பாடலில் கைம்மகவேந்தி... என்ற ப்ரயோகம், இங்கு கைம்மழு வேந்தி என்று உபயோகப்படுத்தியுள்ளேன்)

மலையினைத் தூக்க நினைத்தோனை
.. வலுவிழந்(து) அரற்றச் செய்தோனே
வலையினைப் பின்னு சிலந்திக்கு 
.. வரமிக அளித்த வல்லோனே
தலையெனும் கலனில் பலிதேர்ந்து
.. தவமதில் மகிழும் சடையோனே
கலையினைக் கையிற் கொண்டோனே
.. கரிவனம் மேவும் பெருமானே. 8

வலுவிழந் தரற்றச் செய்தோனே - வலு இழந்து அரற்றச் செய்தோனே. 
அரற்றல் - புலம்பல்.
தலை - தலை ஓடு
கலன் - கையில் கொண்ட பொருள் 
பலி தேர்தல் - யாசித்தல்
கலை - மான்.

சோமனை யணியும் சுந்தரனே 
.. சோதியாய் நீண்டு வளர்ந்தோனே
தூமலர்க் கொன்றைத் தொடையோனே 
.. தோடணி செவியை உடையோனே 
மாமணி கண்டம் கொண்டோனே
.. மாதவன் வணங்க மகிழ்ந்தோனே
காமனை முற்றும் காய்ந்தோனே
.. கரிவனம் மேவும் பெருமானே. 9

பாலதன் வண்ணம் கொண்டோனே
.. பாரினைக் காக்கும் பாலகனே
மாலினை இடத்தே வைத்தோனே
.. மானுடம் வாழ அருள்வோனே
ஆலதன் நிழலில் அமர்வோனே
.. அறநெறி நால்வர்க் குரைப்போனே 
காலினைத் தூக்கி நின்றாடும்
.. கரிவனம் மேவும் பெருமானே. 10

பாலகன் - காவலன். (க்ஷேத்திர பாலகர்).

Thursday 30 March 2017

08. அம்பாள்

மலையரசன் தான்செய்த மாதவம்; ஆடற்
கலையரசன் கைப்பிடித்த கற்பகம்; ஆடும்
அலையரசன் மேற்றுயில் அச்சுதன்றன் தங்கை;
நிலையரசி தாளே நிலை.

நிலையரசி - என்றும் அன்னையே அரசி.
நிலை - சத்தியம் / சாஸ்வதம்

Thursday 23 March 2017

07. திருமயிலை சிங்காரவேலவன்

சந்தப் பாடல்.
அடியேனின் முதல் முயற்சி.

சந்தம்:
தனதனன தனதான

திருமயிலை சிங்காரவேலவன்

கயிலைமலை தனிலாடும்
..கருணைமிகு பெரியோனின்
நயனவெழு கதிரோனே
..நளினமுக முருகோனே
இயலிசையில் மகிழ்வோனே
..இமையவர்தம் இறையோனே
மயிலைநகர் உறைவேளே
..மனநிறைவு தருவாயே

கதிரோனே-கதிரிலிருந்து வந்தவன் அல்லது கதிரொத்த பிரகாசம் உடையவன்.



Thursday 16 March 2017

06. ஆலிலை அழகன்

ஆலிலை அழகன்


அறுசீர் விருத்தம்
வாய்பாடு - காய் மா காய் (அரையடி)
ஆலிலையில் துயிலும் அழகோனே
..அறநெறியைத் தழைக்கச் செய்தோனே
நீலமயில் இறகை அணிந்தோனே
..நெஞ்சதனின் உள்வந்(து) அமர்வாயே
கோலவடி வான கோமானே
..கொஞ்சுகுழல் ஊதி மகிழ்வோனே
ஞாலமதைக் காக்கும் திருமாலே
..ஞானநிலை தன்னை அருள்வாயே

05. திருமயிலை - (மயிலாப்பூர், சென்னை) - (பதிகம் 3)

திருமயிலை (மயிலாப்பூர், சென்னை)

திருமுக்கால் அமைப்பு.
வாய்பாடு:
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் மா
திருஞானசம்பந்தரின் "திடமலி மதிலணி.." என்னும் சிறுகுடித் தேவாரத்தின் உந்துதலால் உதித்தவை.

வரமிக அருளிடும் மயிலையில் உறைதரு
கரமதிற் கலையுடை யீரே
கரமதிற் கலையுடை யீருமைத் தொழுபவர்
திரமது பெறுவது திடமே 1

திரம் - வலிமை
திடம் - உறுதி/நிச்சயம்

மதியணி சடையுடை மயிலையில் உறைதரு
நதியினைப் புனைந்திடு வீரே
நதியினைப் புனைந்திடு வீருமை நவில்பவர்
விதியது விலகுதல் விதியே. 2

'விதி' பொருள் முறையே:
விதி - ஊழ் (பழவினை)
விதி - இயல்பு.

மாதொரு புறமுடை மயிலையில் உறைதரு
சோதியாய் ஆழ்ந்தெழுந் தீரே
சோதியாய் ஆழ்ந்தெழுந் தீருமைத் துதிப்பவர்
கோதது குலைந்திடும் உடனே 3

கோது - குற்றம்

மதுநிறை மலர்திகழ் மயிலையில் உறைதரு
மதிலவை மூன்றெரித் தீரே
மதிலவை மூன்றெரித் தீருமை வழிபடச்
சதிகளைத் தகர்த்திடு வீரே 4

மறைகளும் புகழ்ந்திடும் மயிலையில் உறைதரு
பிறைமதி அணிசடை யீரே
பிறைமதி அணிசடை யீருமைப் பேணவே
குறைகளும் கொள்வது குறையே 5

மருங்கடை மதனெரி மயிலையில் உறைதரு
அருங்கழல் இரண்டுடை யீரே
அருங்கழல் இரண்டுடை யீருமை அடைந்திட
பெருங்கலி வல்வினை பிரிவே. 6

வானவர் போற்றிடும் மயிலையில் உறைதரு
மானமர் கரமுடை யீரே
மானமர் கரமுடை யீருமை வாழ்த்திடத்
தானொடு தனதகன் றிடுமே 7

வல்லசு ரனைச்செறு மயிலையில் உறைதரு
கொல்லர வினையணிந் தீரே
கொல்லர வினையணிந் தீருமைக் குவிபவர்
வல்லமை பெற்றிடு வாரே 8

வல்லசுரன் - இராவணன்
செறுதல் - அடக்குதல்
கொல்லரவு - கொல்லும் வல்லமை படைத்த பாம்பு
குவிதல் - வணங்குதல்

மாலயன் அறிகிலா மயிலையில் உறைதரு
காலனைக் கடிந்துதைத் தீரே
காலனைக் கடிந்துதைத் தீருமைப் புகழ்பவர்
சீலராய்ச் சிறந்திடு வாரே 9

மாவிடை ஏறிடும் மயிலையில் உறைதரு
மாவிடந் தனைநுகர்ந் தீரே
மாவிடந் தனைநுகர்ந் தீருமை வணங்கிட
மாவிடர் உறுவது மாய்வே. 10

மாவிடை - பெரிய ரிஷபம்
மாவிடம் - பெரிதாய் திரண்ட விடம்
மாவிடர் - மா இடர் - பேரிடர்.
மாய்வு - மறைவு

இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் அமைந்தவை.

இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை" என்று கருதலாம்.

முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி.

இப்பாடல்களில் இரண்டாம் அடி மீண்டும் மூன்றாம் அடியில் வரும். (இடைமடக்கு).

Friday 3 March 2017

04. திருஆலவாய் (மதுரை) - (பதிகம் 2)

ஆலவாயான் விருத்தம்

கலி விருத்தம்
வாய்பாடு - தேமா கூவிளம்  (அரையடி).

ஞால மேத்திடும் ஞான சீலனே
சூல மேந்திடும் சுத்த சோதியே
கால காலனே கந்தன் தந்தையே
ஆலின் கீழமர் ஆல வாயனே. 1

கான கத்திலே கச்சைக் கட்டியே
வான வர்களும் வாழ்த்த ஆடிடும்
மீன லோசனி  மேவும் நாதனே
ஆனைத் தோலணி ஆல வாயனே. 2

*கச்சை - சதங்கை

கோதி லாதவன் கோல மேனியன்
சோதி யானவன் சோர்வி லாதவன்
தாதி லாதவன் தாபம் தீர்ப்பவன்
ஆதி யானதென் ஆல வாயனே. 3

*கோது - குற்றம்
*கோலம் - அழகு
*தாது - தோற்றம்/மூலம்

ஏற தேறியே எங்கும் வந்திடும்
நீறு பூசிய நீல கண்டனே
பேறு நல்கிடும் பிஞ்சு வெண்மதி
ஆறு சூடிடும் ஆல வாயனே. 4

*ஏறு - காளை மாடு
*ஏற தேறியே - ஏறு அது ஏறியே.

மன்னன் வேண்டிட மாறி ஆடிடும்
இன்னல் நீக்கிடும் இன்ப வெள்ளமே
மின்னல் போலவே மேனி கொண்டொளிர்
அன்ன மேந்திடும் ஆல வாயனே. 5

*பாண்டிய மன்னனுக்காக இடதுக்காலை நிலத்தில் ஊன்றி, வலதுக்காலை மேலே தூக்கி ஆடிய வைபவம்.
*அன்னம் ஏந்திடும் - பலி தேர்ந்து உண்பது.

தீயும் நீரதும் தீண்டி டாமலே
மாயம் செய்தவர் மானம் காத்தவர்
தாயு மானவர் தண்ணி ழல்தரும்
ஆய தேசுடை ஆல வாயனே. 6

*சம்பந்தர், சமணர்களை எதிர்த்து  அனல், புனல் வாதங்களில் வெற்றி பெறுவதற்குக் காரணமானவர், சொக்கநாத பெருமான் என்று பொருள் வர முதல் இரு அடிகளைப் பாடியுள்ளேன்.
*ஆய தேசு - ஆயம் - தங்கம். பொன் போல் ஒளிர்பவன்.

முப்பு ரத்தினை முற்றுங் காய்ந்தவர்
வெப்பு நோயறு வெந்த நீற்றினர்
அப்ப ராளுடைப் பிள்ளை பாடிய
அப்ப னேதிரு ஆல வாயனே. 7

*பாண்டியனின் வெப்பு நோய், சம்பந்தர் பாடிய திருநீற்றுப் பதிகத்தால் தீர்ந்தது. நோயினைத் தீர்த்தவர் சொக்கநாத பெருமான் என்பதால், நோயினை  வெற்றி கொண்டவர் (அறுத்தவர்) ஆலவாய் அண்ணல் என்று பாடியுள்ளேன்.
*வெந்த நீற்றினர் - திருநீறு அணிந்தவர்
*ஆளுடைப் பிள்ளை - ஞானசம்பந்தர்

மாலும் வேதனும் ஆழ்ந்தெ ழுந்துமே
சால நேடியும் சற்றுங் கண்டிலர்
கோல வெண்கடல் தன்னில் தோன்றிய
ஆல முண்டதென் ஆல வாயனே. 8

*ஆல முண்டதென் ஆல வாயனே - ஆலம் உண்டது என் ஆலவாயனே/ ஆலம் உண்ட தென் ஆலவாயனே

மண்ணைத் தூக்கினார் வந்திக் காகவே
புண்ணைத் தாங்கினார் பைம்பொன் மேனியில்
வண்ண மைந்துடை மண்ணு யிர்க்கருள்
அண்ண லேதிரு ஆல வாயனே. 9

*வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தபோது, மக்கள் யாவரும் மண்ணைச் சுமந்து, அணைக்கட்ட முற்பட்டனர். அப்போது வந்தி என்னும் பிரட்டிக்காக, பெருமான், மண்ணைச் சுமந்து, பிட்டைக் கூலியாக அவளிடமிருந்து பெற்று, மன்னனிடம் சரிவர வேளை செய்யாததால் பிரம்பால் அடிபெற்றார். அந்த அடி, அனைவரின் முதுகிலும் விழுந்தது.
*வண்ண மைந்துடை - நிறங்கள் ஒரைந்துடையாய் - மாணிக்கவாசகர் சிவபுராணம் ப்ரயோகம்.

தொண்டை யில்விடம் தேக்கிக் காத்தவர்
மண்டை யோட்டுவெண் மாலை  பூண்டவர்
துண்டத் திங்களை சூடும் சுந்தரர்
அண்டம் ஆளுமென் ஆல வாயனே. 10

*துண்டத் திங்கள் - பிறை நிலா
*சுந்தரர் - அழகானவர். மதுரை பெருமானின் பெயரும் - சுந்தரேசர்.

Tuesday 28 February 2017

03. திருச்சிராப்பள்ளி - (பதிகம் 1)

ஈசன் வெண்பா

பாடல் 1:
விடைமேல் வலம்வரும் வித்தகன்; கொன்றைச்
சடைமேல் பிறையணி சங்கரன்; வில்வத்
தொடையோ டரவணி சோதியன்;  பொற்றாள்
அடைக்கலம் சேர்தல் அழகு.

* தொடையோ டரவணி - தொடையோடு அரவு அணி
* தொடை - மாலை

பாடல் 2
தூயவர்; ஓர்கழல் தூக்கி நடமாடும்
மாயவர்; மாதவளுக் கின்னருள் செய்திட்ட
தாயவர்; பூதமைந் தானவர்; கற்குன்று
மேயவர்; தண்தாளை மெச்சு. 2

* மாயவர் - மாயம் (மறைத்தல்) செய்பவர். ஐந்தொழில்களில் ஒன்று திரோதானம் என்னும் மறைத்தல்.
* மாதவளுக் கின்னருள் செய்திட்ட - மாது அவளுக்கு இன்னருள் செய்திட்ட.
* மாது - வணிகர் குலப் பெண் இரத்னாவதி.
* பூதமைந் தானவர் - பூதம் ஐந்து ஆனவர்.
* கற்குன்று - கற்களால் ஆன மலை.

பாடல் 3

சிரத்தில் பிறைநிலா சீரா றணிந்து
கரத்தில் மழுமான் கனலிவை யேற்று
மரத்தின் நிழலில் மகிழ்ந்தமர் நாதன்;
புரத்தை யெரித்தோன் புகல். 3

சிரத்தில் பிறைநிலா சீரா றணிந்து - சிரத்தில் பிறை நிலா, சீர் ஆறு அணிந்து
*சீராறு - சீராக ஓடும் கங்கை நதி
கரத்தில் மழுமான் கனலிவை யேற்று
மரத்தின்....
கரத்தில் மழு,மான்,கனல் இவை ஏற்று ஆல மரத்தின்...
*மழு - கோடரி
*கனல் - நெருப்பு
*புரம் - திரிபுரம்
*புகல் - துணை

பாடல் 4

விண்ணவர் போற்றும் விமலன்; விரிசடையில்
வெண்ணிலாச் சூடும் விடையன்; பணிவோர்க்குத்
தண்ணிழல் தந்திடும் தங்கத் தருவவரின்
பண்ணிசை போற்றுந்தாள் பற்று.

*வெள்விடை - வெள்ளை ரிஷபம்
*பாகன் - தலைவன்
*தருவவரின் - தரு அவரின். தரு - மரம்.
*தங்கத் தரு - உயர்ந்த/சிறந்த தரு.
*பண்ணிசை - இனிய இசை/பதிகம்/துதி.

பாடல் 5

எண்ணுதற் கெட்டா எழில்வடி வானவர்;
கண்ணுதற் றேவர்; கருணைக் கடலவர்;
பெண்ணுறை மேனியர் பெய்கழ லேத்திட
மண்ணுயிர் ஈட்டும் வரம்.

*கடலவர் - கடல் அவர்.
*பெய்கழல் - இனிய,அழகிய கழல்கள்.

பாடல் 6

முத்தலைச் சூரனின் மெய்த்தவம் மெச்சியே
இத்தலம் மீதமர்ந்(து) இன்னருள் நல்கிடும்
சத்தியம் ஈதெனச் சாதுவெண் மர்க்குரை
வித்தகன் பாதமே வித்து.

*முத்தலைச் சூரன் - திரிசிரன் என்ற அசுரன்.
*சாதுவெண் மர்க்குரை - எட்டு முனிவர்களுக்கு உபதேசம். சனக,சனந்தன, சனாதன, சனத்குமாரரோடு, பதஞ்சலி, வ்யாக்ரபாதர், திருமூலர், சிவயோகமுனி. இது திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோவிலில் தக்ஷிணாமூர்த்திக்கு உரிய தனிச்சிறப்பு.

பாடல் 7

முத்தாபம் அற்றவன் முப்புரம் செற்றவன்
முத்திக்கு வித்தவன் மும்மலம் தீர்ப்பவன்
முத்தமிழ் ஏத்திடும் முச்சங்கக் கோனவன்
முத்தான தாள்களே முற்று. 7

*முற்று - முடிவு. அனைத்தும் அவன் பாதங்களையே அடைகின்றன.

பாடல் 8

நீதி வழங்காத நீசன்மேற் கோபமுற்(று)
ஆதி உறந்தையை மண்ணால் அழித்தானைச்
சோதி வடிவாகத் தோன்றிய நாதனைப்
பாதி மதியனைப் பாடு.

*நீதி வழங்காத நீசன் - உறந்தையை  (உறையூரினை) தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழன், சார முனிவரின் கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை. அதனால், அவர் சிராப்பள்ளி ஈசனை நாடவே, ஈசன்,  சினங்கொண்டு உறையூர் மேல் மண்மாரியைப் பொழிந்து மூடினார். வெக்காளியம்மன் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் மனமிரங்கி மீண்டும் நல்லருள் புரிந்தார்.

*பாதி மதியன் - பிறை நிலா அணிந்தவன்.

பாடல் 9

ஐயாறு மேவிய ஐயனே; உன்றனை
மெய்யாவென் றேயுள்கி மெச்சினேன்;  துய்யனே;
செய்யதே(சு) உள்ளோனே; தேவனே; உன்னடியே
உய்யுமா(று) என்றுணர்ந்தேன் ஓர்ந்து.

*உள்கி - உள்ளத்தால் உருகி
*செய்ய தேசு - சிவந்த ஒளி
*உய்யுமாறு - உய்யும் ஆறு - வாழ்வதற்கு / ஈடேறுவதற்கு வழி.
*ஓர்ந்து - தேர்ந்தெடுத்து
*இறைவன் அடியே உய்ய வழி வகுக்கும் என்று உணர்ந்து தேர்ந்தெடுத்தேன்.

பாடல் 10

நாதத்தி னுள்ளுறை நாதனை  ஓதும்நால்
வேதத்தி னுட்பொருளை மேதகுஆல் கீழமர்ந்து
போதந் தருஞான போதகனை எவ்விதப்
பேதமுமி லாதோனைப் பேணு.

பேணு - போற்று.

Monday 27 February 2017

02. அறுசமயக் கடவுளர் துதி (வெண்பா)

1. காணபத்யம்:
விநாயகர்:

வாரண மாமுகனை வல்வினை தீர்ப்பவனைச்
சாரண கின்னரர்கள் சாற்றுநல் வேதியனைக்
காரண மானவனைக் காக்குந்நற் காவலனைப்
பூரண  மானவனைப் போற்று

சாரணர், கின்னரர் - 18 வகை சிவ  கணங்களைச் சேர்ந்தவர்கள்.
சாற்றும் - சாற்றுதல் - புகழ்ந்துப் பேசுதல்
காரண மானவனை - காரணம் ஆனவனை. அனைத்திற்கும் காரணம் விநாயகனே.

2. கௌமாரம்:
முருகன்:

கந்தனை வள்ளிமகிழ் காந்தனை யாவரும்
வந்தனை செய்திடும்  வையகத்து  வேந்தனைச்
சிந்தனை செய்யவே தீவினை தீண்டாமல்
வந்தவன் காத்திடு வான்

3. சைவம்:
சிவன்:

ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே!
காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே!
வீழிமிழ லைமேவும் வித்தக வேந்தே!நீ
வாழியென் பார்க்கருள வா

4. சாக்தம்:
அம்பாள்:

தாயே இபமுகன் தன்னை அளித்தவளே
நீயே துணையென நித்தமும் போற்றிடும்
சேயேன் சிறப்பொடு வாழ அருள்புரி
வாயே உமையே மகிழ்ந்து

இபமுகன் - யானை முகன்

5. வைணவம்:
விஷ்ணு (சக்கரத்தாழ்வார்):

உக்கிர மாவுருவே ஓங்கிவளர் சோதியே
வக்கிரந் தீர்ப்பவனே மாதவன் கைதவழ்
சக்கர நாயகனே தத்துவப் பேருணர்வை
இக்கணமே ஈவாய் எமக்கு

திருமால் கையில் தாங்கும் சக்கரம், திருமாலே என்று கருதி பாடியது. சக்கரத்தை பாடினால் சக்கரபாணியை பாடுவதாகும்.

* உக்கிர மா உரு - விஷ்ணுவின் உக்கிரமான ஸ்வரூபம் சக்ராயுதம்.
* ஓங்கிவளர் சோதி - சக்ராயுதம், கனல் ரூபம்.  தீமைகளை எரித்து அழிக்கும் வல்லமை பெற்றது. சுடர் ஆழி என்று,  பெரியாழ்வார்  திருப்பல்லாண்டில் புகழ்கிறார்.
* ஸ்ரீ சுதர்சன காயத்ரி மந்திரம், ஜ்வாலா சக்ராய என்று கூறுகிறது. ஜ்வாலை - நெருப்பு.
* வக்கிரம் - துன்பம்
* தத்துவப் பேருணர்வு - தத்துவ ஞானம். ஸகல தத்வ ப்ரதிஷ்டித என்று சுதர்சன அஷ்டகத்தில் வரும்.

6. சௌரம்:
சூரியன்:

ஞாயிறு நாளனை ஞாலத்தின் பேரொளியை
ஆயிரங் கைகொண்(டு) அருள்செயும் ஆதவனைக்
காரிய காரணனைக் காரிருள் போக்கிடும்
சூரியனை நாளும் துதி

* ஞாலம் - உலகம்.
* பேரொளி - சூரியனின் ஒளி, உலகிற்கு இன்றியமையாதது.
* ஆயிரம் கை - ஆயிரம் கிரணங்கள்.
* காரிய காரணன் - செய்யும் செயல்கள் அனைத்திற்கும் காரணமானவன்.

Friday 10 February 2017

01. குரு வந்தனம்

ஜகத்குரு காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மீது இயற்றிய வெண்பா.





















ஆதிகுரு நாதனே ஆலின் நிழலமர்
வேதியனே வேதம் தழைத்தோங்க மேதினிமேல்
வந்துதித்துக் காஞ்சியில் வாழ்முனியே நின்னடியார்
வெந்துயர் தீர்ப்பாய் விரைந்து.


ஆலின் நிழல் - ஆல மரத்தின் நிழல்
வெந்துயர் - கடுமையான துயரம் - சம்ஸாரம் என்னும் சுழல்.