Friday 27 April 2018

38. வண்ணப் பாடல் - 11 - திருவண்ணாமலை

ராகம்: சங்கராபரணம் 
தாளம்: ஆதி

சந்தக் குழிப்பு:

தனதனன தான தனதனன தான
.தனதனன தான தனதான

இமகிரிகு மாரி யொடுநடனம் ஆடும்
.இனியவ!வி சால குணநேயா!

..இளமதியும் ஆறும் எழிலுடனு லாவும்
...இருசடைவி னோத! அழகோனே!

கமலமல ரானும் அரியுமறி யாத
.கடைமுதலி லாத அழலோனே!

..கரியினுரி பூணும் மறவ!விடை யேறி!
...கடையனெனை ஆள வரவேணும்

நமலுமொரு பாலன் நலமொளிற வாழ
.நமனையுதை கால! அயிலோனே!

..நரலையுமிழ் ஆலம் அதைநுகரும் ஈச!
...நமசிவய ஓத அருள்வோனே!

அமரவுல கோரும் அனுதினமும் ஆரும்
.அமலகுரு நாத! பெரியோனே!

..அரவுதலை மாலை அணியுமதி தீர!
...அருணகிரி மேவு பெருமானே!

நமலுதல் - வணங்குதல்
நமலும் ஒரு பாலன் - மார்க்கண்டேயன்
ஒளிறுதல் - விளங்குதல்
நலம் ஒளிற வாழ - நலம் விளங்க வாழ
ஆர்தல் - அனுபவித்தல்



Tuesday 24 April 2018

37. வண்ணப் பாடல் - 10 - திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)

ராகம் - அம்ருதவர்ஷினி
தாளம் - சதுஸ்ர ஏகம்


சந்தக் குழிப்பு:
தனனந் தனனந் தனதான

குளிரும் புனலஞ் சடைமேலே
..குலவும் பதி!உன் றனைநாட
எளியன் படும்வெந் துயர்தீரும்
..இனிதென் றுமெயென் றனைநாடும் 
வளமும் புகழுந் தருவோனே
..வளைமங் கையுடன் புணர்வோனே
முளையிந் துவணிந் திடுவோனே 
..முதுகுன்(று) அமரும் பெருமானே

இனிதென் றுமெயென் றனைநாடும் - 
இனிது என்றுமெ என்றனை நாடும்

முளையிந் துவணிந் திடுவோனே -
முளை இந்து அணிந்திடுவோனே

முளை இந்து - வளர் பிறை.

பாடலைக் கேட்க:


Friday 20 April 2018

36. வண்ணப் பாடல் - 09 - திருவானைக்கா (கரிவனம்)

ராகம்: பிலஹரி
தாளம்: ரூபகம் (சதுஸ்ர ரூபகம்) [1 த்ருதம், 1 லகு (நான்கு அக்ஷரம்) = 2 + 4 = 6 எண்ணிக்கை]

தனத்த தனதன தனதன தனதன தனதான

விரித்த சடையினில் விரிநதி இளமதி முடிவோனே
.விழித்த கணமதில் ரதிபதி தனைஎரி அனலோனே

கருத்த மதகரி யதனுரி வையையணி மறவோனே
.கழுத்தி லலைகட லினிலெழு விடமதை உடையோனே

அருத்தி யுடனரு மலர்களை அணிகுளிர் புனலோனே
.அரிக்கி ளையவளின் அருதவ மதில்அகம் மகிழ்வோனே

சிரித்த முகமொடு கரிவனம் அதிலமர் பெருமானே
..சிறப்பொ டடியவர் உலகினில் உயர்வுற அருள்வாயே 

அருத்தியுடன் அருமலர்களை - ஆசையுடன் அருமையான மலர்களை

பாடலைக் கேட்க:
https://drive.google.com/open?id=1kO9SwQXed5B4cVkoj8RMeaVpczSPXI-L

Wednesday 18 April 2018

35. திருவாலவாய் [திரு ஆலவாய் / மதுரை] (பதிகம் 15)

வணக்கம்.

அடுத்த பதிகம்

அறுசீர்ச் சந்த விருத்தம்.

தான தானன தானனா (அரையடி)

சில இடங்களில் தான என்ற இடம், தந்த என்றும், தானன என்ற இடம் தனதன என்றும் வரும்.

பாதி மாதுடை மேனியன்
..பாதி மதியணி வேணியன்
சோதி யாயெழு தூயவன்
..சுந்த ரன்சிவ சங்கரன்
நீதி கூறிய நேரியன்
..நீறு பூசிய நிட்களன்
ஆதி யாகிய ஆரியன்
..ஆல வாயுறை ஐயனே. 1

நேரியன் - நுண்ணறிவுடையவன்

நீதி கூறிய நேரியன் -
பாண்டியன் சபையில் வந்து சாட்சி சொன்னது, வாதம் செய்தது.

பாறு சேர்தலை அங்கையன்
..பாணம் ஏவிடும் வல்லவன்
ஏற தேறிடும் இன்முகன்
..ஏதம் ஏதுமி லாதவன்
வேறு பாடறி யாதவன்
..வேதம் ஆகமம் ஆனவன்
ஆறு சூடிடும் அம்பலன்
..ஆல வாயுறை ஐயனே. 2

பாறு சேர்தலை அங்கையன் - கழுகுகள் தொடரக்கூடிய புலால் நாற்றம் நிறைந்த தலையோட்டைக் கொண்ட கையன்.

சம்பந்தர் தேவாரம் - திருப்பராய்த்துறை.

நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை யண்ணலே.

வந்தி யின்சுமை உற்றவன்
..மாற னிடமடி பெற்றவன்
கந்த வேளைய ளித்தவன்
..கார ணப்பொரு ளானவன்
நந்தி மேல்வரும் நாயகன்
..ஞான பண்டிதன் ஆதிரன்
அந்தி வண்ணமு டையவன்
..ஆல வாயுறை ஐயனே. 3

ஆதிரன் - பெரியோன்

வெள்ளி யம்பல மீதிலே
..மென்சி ரிப்பொடு நர்த்தனம்
துள்ளி ஆடிடும் வித்தகன்
..சொல்லு தற்கரி தானவன்
கள்ளி னும்மினி தானவன்
..கண்ணி யையணி மாமையன்
அள்ளி அள்ளிவ ரம்தரும்
..ஆல வாயுறை ஐயனே. 4

கள் - தேன்
கண்ணி - மாலை
மாமை - அழகு

நீல வண்ணனும் வேதனும்
..நேடி யும்மறி யாவொளி
கால னையுதை கழலினன்
..காம னையெரி கண்ணினன்
ஆல நீழலில் அமர்பவன்
..ஆதி யோகநி ராமயன்
ஆல காலம ருந்திய
..ஆல வாயுறை ஐயனே. 5

மோன மாய்மர நீழலில்
..மூவி ரல்களு யர்த்தியே
ஞான போதம ருள்பவன்
..நானி லம்புகழ் நர்த்தனன்
மீன லோசனி நாயகன்
..மேரு வைவளை சாகசன்
ஆனை ஈருரி போர்த்தவன்
..ஆல வாயுறை ஐயனே. 6

வாரி சூடிய சென்னியன்
..வாம தேவன்நி ரஞ்சனன்
பூர ணத்துவம் ஆனவன்
..புன்மை யையழி அற்புதன்
*தாரு காவன முனிவர்தம்
..தாட றுத்தவொர் இரவலன்
ஆர ணங்கொரு பாலுடை
..ஆல வாயுறை ஐயனே. 7

வாரி - கங்கை
தாடு - வலிமை

*இறைவன், திருப்பராய்த்துறை என்னும் ஸ்தலத்தில், தாருகாவன முனிவர்களின் வலிமை, கர்வத்தை, பிக்ஷாடனார் கோலத்தில் வந்து தகர்த்த வரலாறு

வெற்ப ரைமகள் நாயகன்
..விற்ப னன்செய மேனியன்
சிற்ப ரன்திரு மால்தொழும்
..செஞ்ச டாதரன் சின்மயன்
கற்ப கத்தரு வாய்வரம்
..கனிவு டன்தரும் ஆதிபன்
அற்பு தம்பல புரிபவன்
..ஆல வாயுறை ஐயனே. 8

வெற்பரை - வெற்பு அரை
வெற்பு - மலை
அரை - அரசன்
செய - சிவப்பு

சாம வேதமு கப்பவன்
..தாபம் ஏதுமி லாதவன்
சேமம் அருளிடும் ஐம்முகன்
..சேத னன்சசி சேகரன்
நாமம் ஆயிரம் உடையவன்
..நாதம் அதிலுறை நாயகன்
ஆமை நாகம ணிந்திடும்
..ஆல வாயுறை ஐயனே. 9

சாம வேதம் உகப்பவன் - சாம வேதம் கேட்டு மகிழ்பவன்

சிந்த னைசெயும் அன்பருள்
..தேனெ னத்திக ழும்பரன்
சந்தி ரன்சல மகளையும்
..சடையில் அணிபவன் சத்தியன்
மந்தி ரப்பொருள் ஆனவன்
..மாயை விலகவ ருள்பவன்
அந்த மில்புகழ் உடையவன்
..ஆல வாயுறை ஐயனே. 10

பதிகம் நிறைவுற்றது.

சரண்யா