Wednesday 16 January 2019

51. நவகிரக வெண்பா

சூரியன்

காரிருள் நீக்கும் கதிரவன் ஏழ்பரித்
தேரிலு லாவரும் சேவகன் ஆரியன்
வீரியம் நல்கிடும் வித்தகன் மித்திரன்
சூரியனே என்றும் துணை

ஏழ் பரி - ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலா வருபவன்
சேவகன் - வழி நடத்துபவன் ((ஞான) ஒளியைத் தந்து நமக்கு வழி காட்டுபவன்)
ஆரியன் - ஆசான் / பெரியோன்
வீரியம் - வீரம்
மித்திரன் - நண்பன் / சூரியனின் 12 நாமங்களில் ஒன்று

சந்திரன்

சிந்தைக்(கு) அதிபதியே சீதக் கதிருடையாய்
சுந்தர நாயகனே தூவெண் ணிறமுடையாய்
இந்திரை சோதரனே ஈசன் தலையமரும்
சந்திரனே நல்லருள் தா

சிந்தை - மனம்
இந்திரை - திருமகள் (இலக்குமி) - பாற்கடலைக் கடைந்த போது, சந்திரன் வந்தான். பின்னர் இலக்குமி தேவி வந்தாள் என்பது புராணம்.

அங்காரகன்

செங்கண் உடையோனே செம்மறி ஆடேறும்
மங்கள நாயகனே வச்சிர வேலுடையாய்
நங்கை நிலமகளின் நன்மகனே வீரமுடை
அங்கா ரகனே அருள்

அங்காரகனின் வாகனம் செம்மறி ஆடு.
வச்சிர வேல் - கூர்மையான வேல் (சக்தி ஆயுதம் [சூலம்])
பூமா தேவியின் குமாரன்

புதன்

மதிதாரை மைந்தன் மதியைத் தருவோன்
நதிசூடி பத்தர்க்கு நன்மை அருளும்
சதுரன் கவித்திறன் தந்திடும் சாந்தன்
புதபக வானே புகல்

மதி - சந்திரன்
தாரை - சந்திரனின் ஒரு மனைவி
சந்த்ர தாரா சுதம் என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் புதம் ஆச்ரயாமி சததம் கீர்த்தனையில் பாடியுள்ளார்.
மதியைத் தருவோன் - புத்தியைத் தருபவன். புத்தி தாதா என்று புதனுக்கு ஒரு பெயர்.
நதிசூடி - சிவபெருமான். (சங்கர பக்த சிதம் சதானந்த சஹிதம்)
சாந்தன் - சாந்தமானவன் - ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்..
புகல் - பாதுகாப்பு

குரு

அரிசனம் ஆடை அணியும் அரசைப்
பெரியவனை வல்லவனைப் பேச்சிற் கிறையை
மருளை அகற்றிடும் மங்களத் தேவ
குருவை நிதமும் குறி

அரிசனம் - மஞ்சள்
மஹா பல விபோ என்று தீட்சிதர் பாடியுள்ளார்.
பேச்சிற் கிறையை - பேச்சிற்கு இறையை
பேச்சு - வாக்கு (கீஷ்பதே)

சுக்கிரன்

சக்கர பாணியின் தண்ணருளால் கண்ணொன்றை
அக்கணமே பெற்ற அறிவிற் சிறந்தவனை
வக்கிரம் தீர்ப்பவனை வல்லசுரர் ஆசானைச்
சுக்கிரனை நாளும் துதி

சக்கரபாணி - மஹா விஷ்ணு
மஹா விஷ்ணு, வாமனாவதாரம் எடுத்தபோது, மஹா பலியிடமிருந்து மூன்றடி மண்ணைப் பெறும் போது, சுக்ராசார்யார் வண்டாக மாறி, பலி சக்கரவர்த்தியின் கமண்டலத்தின் மூக்கினை அடைத்துக்கொண்டார். அப்போது, வாமன மூர்த்தி, ஒரு தர்பையால் அந்த மூக்கினைக் குத்தவே, வண்டின் ஒரு கண் போயிற்று. வந்தவர் மகாவிஷ்ணு ஆனதால், சுக்கிரனுக்கு ஒரு கண் மட்டுமே போய், மற்றொரு கண் தப்பித்தது.
ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், கேசவ கடாக்ஷ நேத்ரம் என்று ஸ்ரீ சுக்ர பகவந்தம் பாடலில் பாடியுள்ளார்.
வக்கிரம் - வறுமை

சனைச்சரன்

கருநிற மேனியன் காக்கைமேல் ஏறி
வருகிற தீரன் மறலிக்(கு) இளையன்
பனிச்சடை ஈசனின் பத்தர்க் கருளும்
சனைச்சரன் தாளே சரண்

மறலி - எமன்.
பனிச்சடை ஈசனின் பத்தர்க் கருளும் - சிவபெருமானின்  பக்தர்களுக்கு அனுக்ரகம் புரிவான். தீட்சிதரின் நவகிரக கீர்த்தனை - திவாகர தனுஜம் - அதில் வரும் ஒரு வரி.
பவானீஸ கடாக்ஷ பாத்ர பூத -
பக்திமதாம் அதிஸய ஸுப பலதம்
பவானீஸ - பவானியின் பதி - சிவபெருமான். சிவபெருமானின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு (பக்தர்களுக்கு), அதிசயிக்கும் வகையில் நற்பலன்களை அருளுபவன்.

ராகு

சுராசுரனைச் சூலக் கரத்தானை அன்பர்
உரோகம் அகற்றிடும் உத்தமனை மின்னும்
அராவுடல் கொண்ட அதிகோர மான
இராகுவை எந்நாளும் ஏத்து

தீட்சிதரின் நவகிரக கீர்த்தனை, ஸ்மராம்யஹம் சதா ராகும் என்ற பாடலில் வரும் தகவல்கள் சில:
சுராசுரம் - சுர - அசுரம் - பாதி உடல் தேவர்களைப் போல், பாதி உடல் அசுரர் உடல். பாற்கடலில் இருந்து வந்த அமுதத்தின் ஒரு துளியை உண்டதால் ஒரு பாதி  தேவர் உடல் பெற்றான் அசுரனான ராகு.
ரோகஹரம் - உபாதைகளைத் (உரோகம்) தீர்ப்பவன்
சூலாயுத தர கரம் - சூலாயுதத்தைக் கையில் ஏந்தியவன்.
அதிகோரமான - கராள வதனம் - பயங்கர வடிவம் உடையவன்.

கேது

கிரகணத்தின் மூலன் இராகுவிற்குக் கேள்வன்
உரகத் தலையன் மனித உடலினன்
வாதம் வழக்குகளில் வெற்றியைத் தந்திடும்
கேது களைந்திடுவான் கேடு

கேள்வன் - தோழன் (இணையாகக் காணப்படுபவர்கள்)
மஹாஸுரம் கேதுமஹம் பஜாமி என்ற தீக்ஷிதர் கீர்த்தனையில்,
உரகத் தலையன் - மஹா விசித்ர மகுட தரம் (விசித்திர மகுடம் - பாம்பின் தலையே மகுடம்)
நர பீட ஸ்திதம் ஸுகம் (மனித உடல் - அதுவே அவன் அமரும் பீடம்)
நவ க்ரஹ யுதம் ஸகம் (புதிதாக உருவான கிரகம் - ராகு; அவனது தோழன்)
க்ரஹணாதி கார்ய காரணம் - கிரகணத்திற்குக் காரணமானவன்
என்று பாடுகிறார்.

நவக்கிரக வெண்பா நிறைவுற்றது.
நவகோள் மகிழ்ந்து நன்மை அளிக்கட்டும்.
நமச்சிவாய வாழ்க!!

சரண்யா

Wednesday 2 January 2019

50. திருஅன்பில் (பிரபந்தம் 4)

திருஅன்பில் (திருச்சிராப்பள்ளி, கொள்ளிடத்திற்கு அருகில், லால்குடியைத் தாண்டி அமைந்துள்ள சிற்றூர் - அன்பில்)

அறுசீர் விருத்தம்

விளம் மா மா (அரையடி)

1.
கொள்ளிடக் கரையில் துயிலும்
..குறைவிலா அழகு நம்பீ
தெள்ளியின் துயர்தீர்த் தவனே
..திருமகள் மருவும் மார்பா
புள்ளினைக் கொடியாய் ஏற்றோய்
..புண்ணியக் குவையே பரமா
அள்ளிவ ரங்கள் தருவாய்
..அன்பிலில் உறையும் அமுதே

அழகு நம்பி - அன்பில் தலத்து இறைவன் - சுந்தர ராஜ பெருமாள் / வடிவழகிய நம்பி
தெள்ளி - யானை (இங்கு கஜேந்திரனைக் குறிக்கும்)
புள் - பறவை - இங்கு கருடனைக் குறிக்கும்
குவை - குவியல். நாம செய்த புண்ணியத்தின் பலன், இறைவனை அனுபவித்தல்.

2.
கையினில் ஒளிரும் ஆழி
..கவின்மிகு சங்கம் கொண்டோய்
பையரா வின்மேல் துயில்வோய்
..பங்கய நாபா அனந்தா
மையுறு மேனி உடையோய்
..மதுமலர் மாலை அணிவோய்
ஐயனே சிறியேற்(கு) இரங்காய்
..அன்பிலில் உறையும் அமுதே.

3.
படவரா வணையாய்க் கொண்டோய்
..பச்சைமா மலைமே னியினாய்
குடமெடுத் தாடும் கோவே
..குணதிசை நோக்கும் தேவே
வடவரை மத்தாய் வைத்து
..மாகடல் கடைந்த மணியே
அடலெரு(து) ஏழை வென்றோய்
..அன்பிலில் உறையும் அமுதே

படவராவணை - பட அரா அணை - படமெடுக்கும் பாம்பு படுக்கை.

குடமெடுத்தாடும் கோ - குடம் எடுத்து ஆடும் கோ (தலைவன்). ராசக்ரீடையில் குடம் எடுத்து ஆடுதல் ஒரு பகுதி.
குண திசை - கிழக்குத் திசை. அன்பிலில், பெருமாள், கிழக்கு நோக்கிய திருமுகம்.

வடவரை - வட வரை - வரை - மலை. வடக்கில் இருக்கும் மந்திர மலை. வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி - சிலப்பதிகாரப் பாடல்.

அடல் எருது - அடல் என்றால் கோபம். கோபம் கொண்டு பாய்ந்து வந்த எருதுகள் ஏழினை, நப்பின்னைப் பிராட்டியைக் கரம் பிடிக்கும் முன், கண்ணன் அடக்கி, வென்றான்.

4.
துண்டவெண் பிறையான் துயரைத்
..துடைத்தவா! துவரைப் பதியே!
தண்டமிழ்ப் பாவில் மகிழ்வோய்!
..தண்டுழாய் அணியும் மார்பா!
கொண்டலின் வண்ணம் கொண்டோய்!
..குன்றினைக் குடையாய்ப் பிடித்தோய்!
அண்டம(து) உண்ட அரியே!
..அன்பிலில் உறையும் அமுதே!

துண்டவெண் பிறையான் துயரைத் துடைத்தவா - துண்ட வெண் பிறையான் = சிவன். திருக்கண்டியூரில், பிரமனின் சிரம் ஒன்றைக் கொய்ததால், சிவனுக்கு ஏற்பட்ட தோஷத்தைக் களைய, ஹர சாப விமோசன பெருமாள் என்ற திருநாமத்தில், திருக்கண்டியூரில் தோன்றி, சிவனின் தோஷத்தைப் போக்குகிறார்.

துவரைப் பதி - துவாரகா பதி

தண்டுழாய் = தண் துழாய் = குளிர்ந்த துளசி

கொண்டல் - மேகம்

அண்டம் அது உண்ட அரி - பிரளய காலத்தில், நாராயணனின் வயிற்றினுள் உலகம் இருந்தது.

5.
அதலமோ(டு) ஏழ்கீழ் உலகும்
..அவனியோ(டு) ஏழ்மேல் உலகும்
பதமிரண் டாலே அளந்தோய்
..பணிமிசைப் பள்ளி கொள்வோய்
மதுரமாய்க் குழலி சைத்து
..மாடுமேய்த் திடுபா லகனே
அதமனென் றனையும் காப்பாய்
..அன்பிலில் உறையும் அமுதே

பதமிரண்டாலே அளந்தோய் - இரண்டு அடியால் அளந்தவனே
அதமன் - கீழ்த்தனமானவன்

6.
தாயவள் போலே வேடம்
..தரித்துவந் தரவ ணைத்த
பேயவள் பாலை உண்டு
..பின்னவள் உயிரை உண்டாய்
மாயலீ லைகள் செய்யும்
..மரகத வண்ணா கண்ணா
ஆயர்தம் குலத்து மணியே
..அன்பிலில் உறையும் அமுதே

7.
சிலையினை எடுத்தொ டித்துச்
..சீதையை மணந்த சீலா
கலையுரு வோடு வந்த
..கல்லமா ரீசன் தன்னை
நிலையிழந் தொழியச் செய்தோய்
,,நின்மலா நீல வண்ணா
அலைகடல் அடைத்து டைத்தோய்
..அன்பிலில் உறையும் அமுதே

சிலை - வில்
கலை - மான்
கல்லன் - தீயவன்

அலைகடல் அடைத்து உடைத்தோய் - இராமர், கடலில் பாலம் கட்டியது - கடலை அடைத்தது ஆகும். இலங்கையிலிருந்து திரும்பிய பொது, அந்தப் பாலத்தை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

8.
காலினால் சகடம் உதைத்த
..கருநிற மேனிக் கண்ணா
நாலிரண் டெழுத்து டையோய்
..நானிலம் போற்றும் தேவா
வாலியை வென்ற வீரா
..மாருதிக் கருள்செய் தோனே
ஆலிலை தனிலே துயில்வோய்
..அன்பிலில் உறையும் அமுதே

9.
வாரணம் அழைக்க வந்த
..வல்லவா ஆதி மூலா
பூரணா புன்மை தீர்ப்போய்
..புண்டரி கனுக்க ருள்செய்
நாரணா மதுரை மைந்தா
..நான்மறை பணியும் மகிபா
ஆரணங் கிடுக்கண் களைந்தோய்
..அன்பிலில் உறையும் அமுதே

புண்டரிகன் - பண்டரிபுரத்தில் வசித்த ஒரு பக்தன். வயோதிகர்களான பெற்றோர்களுக்குச் சேவை செய்தவன். பாண்டுரங்கனாக ஸ்ரீ மந் நாராயணர் அவன் வீட்டு வாசலில், அவன் கொடுத்த செங்கல் மீது நின்றார். அந்த இடமே இன்று பண்டரிபுரம்.

ஆரணங்கு - பெண் - திரௌபதி

10.
"எங்குளான் அரி"யென் றெழுந்த
..இரணிய னதாகம் பிளந்த
சிங்கமே! சீதைக் காகச்
..சீர்நிறை இலங்கை மீது
பொங்கியம் பெய்தி அழித்த
..பூபதீ! செங்கண் உடையோய்!
அங்கணார்க் கோர்கூ றுகந்தோய்!
..அன்பிலில் உறையும் அமுதே

இரணிய னதாகம் - இரணியனது ஆகம்
ஆகம் - மார்பு
அங்கணார்க் கோர்கூ றுகந்தோய் - அங்கணார்க்(கு) ஓர்கூ(று) உகந்தோய்
அங்க(ண்)ணார் - சிவன்

11.

*நவயுவ னாய்வந் தன்று
..நான்முகன் கர்வம் கடிந்தோய்
**தவமுனி மண்டூ கருக்குத்
..தண்ணருள் தந்த இறைவா
கவலைகள் தீர்த்தென் றனக்குன்
..கழலிணை காட்சி தருவாய்
அவனியைக் காக்கும் அரசே
..அன்பிலில் உறையும் அமுதே

*பிரமன், அழகிய உயிர்களைப் படைப்பதில் தான் வல்லவன் என்று மிகவும் கர்வம் கொண்டிருந்தார். இத்தலத்தில், விஷ்ணு, பிரமன் முன்.ஒரு அழகிய இளைஞனின் உருக்கொண்டு, அவர் முன் தோன்றினார். இதுவரை, தாம் இவ்வாறு ஒரு உயிரைப் படைத்ததில்லையே என்று குழம்பினார். பின்னர், சங்கு சக்கரமுடன் பிரமனுக்குக் காட்சிக்கொடுத்து, அழகு என்பது புறத்தோற்றத்தில் இல்லை. தூய மனமே அழகானது என்று கூறி அருளினார். (நவ - புதிய; யுவ - இளைஞன்)

**சுதப முனிவர் நீரிலும், நிலத்திலும் அமர்ந்து தவம் செய்யக்கூடிய வல்லமை உடையவர். ஒருமுறை, கொள்ளிட நதியில் தவம் செய்துகொண்டிருந்த போது, துர்வாச முனிவர் அங்கே வந்தார். அவர் வந்ததை கவனிக்காத சுதபர், தொடர்ந்து நிஷ்டையில் அமர்ந்திருந்தார். கோபம் கொண்ட துர்வாசர், சுதபரை, தவளையாக மாறுவாய் என்று சபித்தார். துர்வாசர் வந்திருப்பதை அறியாக் காரணத்தால், வந்தனம் செய்யாது இருந்தமைக்கு மன்னிக்குமாறு சுதபர் முறையிட, சாபத்தை மாற்ற முடியாது. எனினும், விரைவில் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்கப் பெற்று, பழைய உருவம் பெறுவாய் என்று துர்வாசர் கூறிச் சென்றார். தவளையாய் இருந்து தவம் செய்ததால், சுதபருக்கு, மண்டூக மகரிஷி என்ற பெயர் வந்தது. அன்பில் தலத்து இறைவன் அருளால், மீண்டும் பழைய உருவம் பெற்றார்.

பதிகம் நிறைவுற்றது.

அன்பில் தனிலே அருளும் அழகனின்
அன்பே அரணாம் நமக்கு

பணிவுடன்,
சரண்யா