Wednesday 2 January 2019

50. திருஅன்பில் (பிரபந்தம் 4)

திருஅன்பில் (திருச்சிராப்பள்ளி, கொள்ளிடத்திற்கு அருகில், லால்குடியைத் தாண்டி அமைந்துள்ள சிற்றூர் - அன்பில்)

அறுசீர் விருத்தம்

விளம் மா மா (அரையடி)

1.
கொள்ளிடக் கரையில் துயிலும்
..குறைவிலா அழகு நம்பீ
தெள்ளியின் துயர்தீர்த் தவனே
..திருமகள் மருவும் மார்பா
புள்ளினைக் கொடியாய் ஏற்றோய்
..புண்ணியக் குவையே பரமா
அள்ளிவ ரங்கள் தருவாய்
..அன்பிலில் உறையும் அமுதே

அழகு நம்பி - அன்பில் தலத்து இறைவன் - சுந்தர ராஜ பெருமாள் / வடிவழகிய நம்பி
தெள்ளி - யானை (இங்கு கஜேந்திரனைக் குறிக்கும்)
புள் - பறவை - இங்கு கருடனைக் குறிக்கும்
குவை - குவியல். நாம செய்த புண்ணியத்தின் பலன், இறைவனை அனுபவித்தல்.

2.
கையினில் ஒளிரும் ஆழி
..கவின்மிகு சங்கம் கொண்டோய்
பையரா வின்மேல் துயில்வோய்
..பங்கய நாபா அனந்தா
மையுறு மேனி உடையோய்
..மதுமலர் மாலை அணிவோய்
ஐயனே சிறியேற்(கு) இரங்காய்
..அன்பிலில் உறையும் அமுதே.

3.
படவரா வணையாய்க் கொண்டோய்
..பச்சைமா மலைமே னியினாய்
குடமெடுத் தாடும் கோவே
..குணதிசை நோக்கும் தேவே
வடவரை மத்தாய் வைத்து
..மாகடல் கடைந்த மணியே
அடலெரு(து) ஏழை வென்றோய்
..அன்பிலில் உறையும் அமுதே

படவராவணை - பட அரா அணை - படமெடுக்கும் பாம்பு படுக்கை.

குடமெடுத்தாடும் கோ - குடம் எடுத்து ஆடும் கோ (தலைவன்). ராசக்ரீடையில் குடம் எடுத்து ஆடுதல் ஒரு பகுதி.
குண திசை - கிழக்குத் திசை. அன்பிலில், பெருமாள், கிழக்கு நோக்கிய திருமுகம்.

வடவரை - வட வரை - வரை - மலை. வடக்கில் இருக்கும் மந்திர மலை. வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி - சிலப்பதிகாரப் பாடல்.

அடல் எருது - அடல் என்றால் கோபம். கோபம் கொண்டு பாய்ந்து வந்த எருதுகள் ஏழினை, நப்பின்னைப் பிராட்டியைக் கரம் பிடிக்கும் முன், கண்ணன் அடக்கி, வென்றான்.

4.
துண்டவெண் பிறையான் துயரைத்
..துடைத்தவா! துவரைப் பதியே!
தண்டமிழ்ப் பாவில் மகிழ்வோய்!
..தண்டுழாய் அணியும் மார்பா!
கொண்டலின் வண்ணம் கொண்டோய்!
..குன்றினைக் குடையாய்ப் பிடித்தோய்!
அண்டம(து) உண்ட அரியே!
..அன்பிலில் உறையும் அமுதே!

துண்டவெண் பிறையான் துயரைத் துடைத்தவா - துண்ட வெண் பிறையான் = சிவன். திருக்கண்டியூரில், பிரமனின் சிரம் ஒன்றைக் கொய்ததால், சிவனுக்கு ஏற்பட்ட தோஷத்தைக் களைய, ஹர சாப விமோசன பெருமாள் என்ற திருநாமத்தில், திருக்கண்டியூரில் தோன்றி, சிவனின் தோஷத்தைப் போக்குகிறார்.

துவரைப் பதி - துவாரகா பதி

தண்டுழாய் = தண் துழாய் = குளிர்ந்த துளசி

கொண்டல் - மேகம்

அண்டம் அது உண்ட அரி - பிரளய காலத்தில், நாராயணனின் வயிற்றினுள் உலகம் இருந்தது.

5.
அதலமோ(டு) ஏழ்கீழ் உலகும்
..அவனியோ(டு) ஏழ்மேல் உலகும்
பதமிரண் டாலே அளந்தோய்
..பணிமிசைப் பள்ளி கொள்வோய்
மதுரமாய்க் குழலி சைத்து
..மாடுமேய்த் திடுபா லகனே
அதமனென் றனையும் காப்பாய்
..அன்பிலில் உறையும் அமுதே

பதமிரண்டாலே அளந்தோய் - இரண்டு அடியால் அளந்தவனே
அதமன் - கீழ்த்தனமானவன்

6.
தாயவள் போலே வேடம்
..தரித்துவந் தரவ ணைத்த
பேயவள் பாலை உண்டு
..பின்னவள் உயிரை உண்டாய்
மாயலீ லைகள் செய்யும்
..மரகத வண்ணா கண்ணா
ஆயர்தம் குலத்து மணியே
..அன்பிலில் உறையும் அமுதே

7.
சிலையினை எடுத்தொ டித்துச்
..சீதையை மணந்த சீலா
கலையுரு வோடு வந்த
..கல்லமா ரீசன் தன்னை
நிலையிழந் தொழியச் செய்தோய்
,,நின்மலா நீல வண்ணா
அலைகடல் அடைத்து டைத்தோய்
..அன்பிலில் உறையும் அமுதே

சிலை - வில்
கலை - மான்
கல்லன் - தீயவன்

அலைகடல் அடைத்து உடைத்தோய் - இராமர், கடலில் பாலம் கட்டியது - கடலை அடைத்தது ஆகும். இலங்கையிலிருந்து திரும்பிய பொது, அந்தப் பாலத்தை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

8.
காலினால் சகடம் உதைத்த
..கருநிற மேனிக் கண்ணா
நாலிரண் டெழுத்து டையோய்
..நானிலம் போற்றும் தேவா
வாலியை வென்ற வீரா
..மாருதிக் கருள்செய் தோனே
ஆலிலை தனிலே துயில்வோய்
..அன்பிலில் உறையும் அமுதே

9.
வாரணம் அழைக்க வந்த
..வல்லவா ஆதி மூலா
பூரணா புன்மை தீர்ப்போய்
..புண்டரி கனுக்க ருள்செய்
நாரணா மதுரை மைந்தா
..நான்மறை பணியும் மகிபா
ஆரணங் கிடுக்கண் களைந்தோய்
..அன்பிலில் உறையும் அமுதே

புண்டரிகன் - பண்டரிபுரத்தில் வசித்த ஒரு பக்தன். வயோதிகர்களான பெற்றோர்களுக்குச் சேவை செய்தவன். பாண்டுரங்கனாக ஸ்ரீ மந் நாராயணர் அவன் வீட்டு வாசலில், அவன் கொடுத்த செங்கல் மீது நின்றார். அந்த இடமே இன்று பண்டரிபுரம்.

ஆரணங்கு - பெண் - திரௌபதி

10.
"எங்குளான் அரி"யென் றெழுந்த
..இரணிய னதாகம் பிளந்த
சிங்கமே! சீதைக் காகச்
..சீர்நிறை இலங்கை மீது
பொங்கியம் பெய்தி அழித்த
..பூபதீ! செங்கண் உடையோய்!
அங்கணார்க் கோர்கூ றுகந்தோய்!
..அன்பிலில் உறையும் அமுதே

இரணிய னதாகம் - இரணியனது ஆகம்
ஆகம் - மார்பு
அங்கணார்க் கோர்கூ றுகந்தோய் - அங்கணார்க்(கு) ஓர்கூ(று) உகந்தோய்
அங்க(ண்)ணார் - சிவன்

11.

*நவயுவ னாய்வந் தன்று
..நான்முகன் கர்வம் கடிந்தோய்
**தவமுனி மண்டூ கருக்குத்
..தண்ணருள் தந்த இறைவா
கவலைகள் தீர்த்தென் றனக்குன்
..கழலிணை காட்சி தருவாய்
அவனியைக் காக்கும் அரசே
..அன்பிலில் உறையும் அமுதே

*பிரமன், அழகிய உயிர்களைப் படைப்பதில் தான் வல்லவன் என்று மிகவும் கர்வம் கொண்டிருந்தார். இத்தலத்தில், விஷ்ணு, பிரமன் முன்.ஒரு அழகிய இளைஞனின் உருக்கொண்டு, அவர் முன் தோன்றினார். இதுவரை, தாம் இவ்வாறு ஒரு உயிரைப் படைத்ததில்லையே என்று குழம்பினார். பின்னர், சங்கு சக்கரமுடன் பிரமனுக்குக் காட்சிக்கொடுத்து, அழகு என்பது புறத்தோற்றத்தில் இல்லை. தூய மனமே அழகானது என்று கூறி அருளினார். (நவ - புதிய; யுவ - இளைஞன்)

**சுதப முனிவர் நீரிலும், நிலத்திலும் அமர்ந்து தவம் செய்யக்கூடிய வல்லமை உடையவர். ஒருமுறை, கொள்ளிட நதியில் தவம் செய்துகொண்டிருந்த போது, துர்வாச முனிவர் அங்கே வந்தார். அவர் வந்ததை கவனிக்காத சுதபர், தொடர்ந்து நிஷ்டையில் அமர்ந்திருந்தார். கோபம் கொண்ட துர்வாசர், சுதபரை, தவளையாக மாறுவாய் என்று சபித்தார். துர்வாசர் வந்திருப்பதை அறியாக் காரணத்தால், வந்தனம் செய்யாது இருந்தமைக்கு மன்னிக்குமாறு சுதபர் முறையிட, சாபத்தை மாற்ற முடியாது. எனினும், விரைவில் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்கப் பெற்று, பழைய உருவம் பெறுவாய் என்று துர்வாசர் கூறிச் சென்றார். தவளையாய் இருந்து தவம் செய்ததால், சுதபருக்கு, மண்டூக மகரிஷி என்ற பெயர் வந்தது. அன்பில் தலத்து இறைவன் அருளால், மீண்டும் பழைய உருவம் பெற்றார்.

பதிகம் நிறைவுற்றது.

அன்பில் தனிலே அருளும் அழகனின்
அன்பே அரணாம் நமக்கு

பணிவுடன்,
சரண்யா

No comments:

Post a Comment