Monday 13 August 2018

47. திருக்கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம் ஏகாம்ரேஸ்வரர் கோயில்) - பதிகம் (19)

திருக்கச்சியேகம்பம்

அந்தாதி வெண்பா (பத்துப் பாடல்கள்)

ஒரு பாடலின் இறுதி அடியின் கடைசிச் சொல் / அசை, அடுத்த பாடலின் முதல் சொல்/அசையாக வரும்.

1.

நம்பா எனநாளும் நம்பித் துதிப்பவர்க்(கு)
அம்புயக் கையால் அபயம் அளித்திடுவார்
உம்பர் தருவான ஒப்பில்லாக் கச்சியே
கம்பம் உறையும் கனி

இன்றைய பாடல், கனியில் முடிந்துள்ளது. நாளைய பாடல் கனி என்ற சொல்லில் தொடங்கும்.

பத்தாம் பாட்டின் கடைசி வார்த்தை, நம்பா என்பதின் ஒரு அசையாக வரும்.

2.

கனியென்(று) இனித்திடும் கச்சியே கம்பன்
பனிமலை மேவும் பரமன் அவன்தாள்
நினைவார் தமக்கு நிறைவை அருள்வான்
வினைகள் களைவான் விரைந்து

3.

விரைந்தவன் தாளை விரும்பித் தொழுவேன்
பரையொரு பாலுடையன் பாம்பணியும் நாதன்
வரையினையோர் வில்லாய் வளைவீரன் கம்பன்
மரையுடையான் ஈவான் வரம்

பரை - பார்வதி
வரை - மலை (மேரு மலை)
கம்பன் - கம்பா நதி தீரத்தில் அமர்ந்த சிவபெருமான் ஏகம்பன்.
மரை - மான்.

4.

வரமிக நல்கிடும் வள்ளலே! வேந்தே!
அரனே!ஏ கம்பா! அவுணர்தம் மூன்று
புரமதைச் சாய்த்தவனே! புன்மையைத் தீர்க்கும்
பரனே! எளியேனைப் பார்

5.

பாரும் கனலும் படர்விசும்பும் காற்றொடு
நீருமாய் ஆன நிமலனைக் கம்பனைப்
பேரெழி லாரும் பெருமானைப் பாடிநாம்
சீருடன் வாழ்வோம் சிறந்து

6.

சிறந்த அடியார்தம் சிந்தனையில் தங்கும்
நிறைந்த குணமுடைய நேயன் - பிறந்த
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் கம்பன் அவனை
மறவா(து) இருத்தலே மாண்பு

7.

மாண்பருளும் நல்ல மதியருளும் இன்சுவைப்
பாண்கொண்டு பாடும் பணியருளும் அன்பர்கள்
வேண்டும் வரமருளி மெய்யான வீடருளும்
மாண்புடைக்கம் பன்தாள் மலர்

பாண் - பாடல்
மாண்புடைக்கம் பன்தாள் மலர் - மாண்புடைக் கம்பன் தாள் மலர்

மாண்பு - பெருமை

8.

மலர்மாலை சூடி; மதிசூடி; வெள்ளைத்
தலைமாலை சூடி; சதிராடி; வெள்ளி
மலைவாசி; கச்சியின் மன்னன்; அவனே
நிலையை அருளும் நிசம்

வெள்ளைத் தலைமாலை - கபாலங்கள் (மண்டை ஓட்டினால் ஆன) மாலை
சதிராடி - சதிர் ஆடி - சதிர் - நடனம்; நடனம் ஆடுபவன்
வெள்ளி மலை வாசி - கயிலாயத்தில் வசிப்பவன்
கச்சி - காஞ்சிபுரம்
நிலை - முக்தி

9.

நிசமாவான் ஈசன் நிலவணியும் தேசன்
பசுவேறும் பாகன் பரசேந்தும் வீரன்
திசைதோறும் ஆரும் திரிசூலன் தூயன்
எசமானன் கம்பனுக்கீ டேது

பரசு - மழு
எசமானன் - தலைவன்

10.

ஏதமில் ஏகம்பத் தெம்மானை எந்தையைப்
போதம் அருள்வானைப் பொன்போல் மிளிர்வானைச்
சீதனையும் வாரியையும் செஞ்சடைமேல் சூடிடும்
நாதனையே எப்போதும் நம்பு

ஏதமில் - ஏதம் இல் - ஏதம் - குற்றம்
ஏகம்பத் தெம்மானை - ஏகம்பத்து எம்மானை - எம்மான் - பெரியோன்
சீதன் - நிலா
வாரி - கங்கை

குறிப்பு:
நம்பு என்று இப்பாடல் முடிந்தது. முதல் பாடல் நம்பா எனத் தொடங்கியது.

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா