Friday 11 August 2017

15. திருமீயச்சூர் (பதிகம் 9)

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா

வாய்பாடு: காய் காய் காய் காய்

மாயத்தார் அறியவொணா மகிமையுடைச் சத்தியனும்
தேயத்தோர் தாமேத்தும் தேனமுதம் ஆனவனும்
நேயத்தோ டெமையாளும் நிர்மலனும் நித்தியனும்
மீயச்சூர் தனிலுறையும் வினைபோக்கும் இறையவனே. 1

மாயத்தார் - மாயையில் கட்டுண்டோர்.
தேயத்தோர் - அறிவில் சிறந்த சான்றோர்.
ஏத்துதல் - வழிபடுதல்

பெண்ணுறையும் மேனியனும் பேரொளியாய்த் திகழ்பவனும்
கண்ணொருமூன் றுடையவனும் கருணைமிகு தேவனும்நற்
பண்ணிசையில் மகிழ்பவனும் பவளநிறம் கொண்டவனும்
வெண்ணிலவை அணிபவனும் மீயச்சூர் உறைகோவே. 2

சடையதன்மேல் விரிநதியும் தண்மதியும் புனைவோனும்
உடையதுவாய் மதகரியின் வன்தோலை உடுப்போனும்
நடுநிசியில் இடுகாட்டில் நடமாடி மகிழ்வோனும்
விடையதன்மேல் வருவோனும் மீயச்சூர் உறைகோவே. 3

விரிநதி - விரிந்து பாயும் கங்கை நதி
தண்மதி - குளிர் மதி
மதகரி - மத யானை

படவரவைத் தொடையெனவே பாங்காக அணிவோனும்
இடமதனை மடமாதிற்(கு) இடமாக அளித்தோனும்
வடவரையை வில்லாக வைத்தெயில்மூன் றெரித்தோனும்
விடமதனை உண்டோனும் மீயச்சூர் உறைகோவே. 4

படவரவு - பட + அரவு = படமெடுக்கும் பாம்பு
தொடை - மாலை
இடம் - இடபாகம்
மடமாது - மடம் + மாது = அழகிய பெண்; மடம் = அழகு.
வடவரை = வட + வரை = மேரு மலை. வடக்கே உள்ள மலை.
எயில் மூன்று = திரிபுரம்

சோதனைகள் யாவையுமே தோல்வியுறச் செய்பவனும்
ஓதுமறை நான்கினுளே உறைவோனும் ஒளிர்வோனும்
கீதமதில் திளைப்போனும் கேழல்கொம் பணிவோனும்
மேதினியை ஆள்வோனும் மீயச்சூர் உறைகோவே. 5

கேழல் - பன்றி; வராகம்.
சிவபெருமான், தனது அடியைக் காண முடியாத வராகத்தின் (விஷ்ணு) வெண் கொம்புகளில் ஒன்றையுடைத்து, தனது இடையில் அணிகலனாக அணிந்துள்ளார்.

மான்மழுதீ இவையேந்தி நடம்புரியும் வல்லோனும்
வான்வளிதீ நீர்மண்ணென் றைம்பூதம் ஆனோனும்
தேன்வழியும் மலர்மாலை தனைச்சூடும் சேகரனும்
மேன்மைபல தருபவனும் மீயச்சூர் உறைகோவே. 6

காலனைஓர் காலாலே கடிந்தோனும் மோனத்தில்
ஆலதனின் நீழற்கீழ் அறங்கூற அமர்ந்தோனும்
கோலவடி வானவனும் குற்றங்கள் பொறுப்பானும்
வேலவனைத் தந்தோனும் மீயச்சூர் உறைகோவே. 7

தசமுகனின் செருக்கதனைத் தகர்த்தவனும் பின்னரவன்
இசைமடுத்து மகிழ்ந்தவனும் இன்னருளைத் தந்தவனும்
விசயனுக்குப் பாசுபதம் விருப்புடனே அளித்தவனும்
திசையெட்டும் பணிந்தேத்தும் திருமீயச் சூர்க்கோவே. 8

சக்கரத்தை மாலுக்குத் தந்தானும் மதியாத
தக்கனவன் பெருவேள்வி தகர்த்தானும் முன்னவனும்
முக்கணனும் பிறவானும் மூவானும் இறவானும்
விக்கினங்கள் தீர்ப்பானும் மீயச்சூர் உறைகோவே. 9

முன்னவன் - ஆதி.
முக்கணன் - முக்கண்ணன்
பிறவான்,மூவான்,இறவான் -> ஜன்மம், ஜரா, ம்ருத்யு இம்மூன்றும் இல்லாதவன்

கன்னல்விற் காமனைஓர் கண்ணாலே காய்ந்தோனும்
இன்னல்கள் தீர்ப்பானும் இன்பங்கள் சேர்ப்பானும்
அன்னத்தை வெண்டலையில் அகமுவந்தே ஏற்பானும்
மின்னல்போல் ஒளிர்வானும் மீயச்சூர் உறைகோவே. 10

கன்னல் - கரும்பு
வெண்டலை - வெண்மையான மண்டை ஓடு = வெண் தலை.