Monday 11 February 2019

54. சித்திரக்கவி - 3



டமருக பந்தம் - சிவன்

உடுக்கை (டமரு) வடிவம் கொண்ட சித்திரக்கவி.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின், இடதுகைப் பக்கம், கீழிருந்து மேல் சென்று, மீண்டும், மேலிருந்து கீழ் (சரிவாக) வரவேண்டும். வலதுகைப் பக்கம் கீழே வந்ததும், மீண்டும் மேலே செல்ல வேண்டும். மேல் வலப்பக்கம் சென்றதும், மீண்டும் சரிவாக கீழே இறங்க வேண்டும். தொடங்கிய இடத்தில் முடிக்க வேண்டும்.

மஞ்சள் நிறத்தில் குறியிட்டுள்ள எழுத்துகள் ஒன்றியிருக்க வேண்டும்.



மாதொரு பாகா வேதா
தாதையே நாத யோகீ
கீதனே ஏகா தேசா
சாதுவே நாதா வாமா

தாதை - தந்தை
ஏகா - ஏகன் என்பதன் விளி. ஏகனே என்று அழைப்பதை ஏகா என்றும் வழங்கலாம்.
தேசா - தேசனே. தேஜஸ் உடையவன்
சாது - முனிவன்.
வாமா - அழகா. வாமம் - அழகு.

சரண்யா

Friday 8 February 2019

53. சித்திரக்கவி - 2

கோமூத்ரி

சிவன்

பாத்திரம் ஏந்தும் பவனே போற்றி
சாத்திரம் போற்றும் பரனே போற்றி

படத்தைக் கண்டால் உங்களுக்குத் தெளிவாகும். ஒரு மாடு (கோ), சிறுநீர் கழித்துக்கொண்டு நடந்தால், அதன் வால், அந்த நீரினை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மாற்றி மாற்றி அடிக்கும் அல்லவா? அது போல் இருக்கும் இந்த அமைப்பு.




திருமயிலை கபாலீஸ்வரர் கோவிலில், சுவற்றில் எழுதி இருக்கும் வாக்கியம் ஒன்று கூட, இவ்வகையைச் சாரும்.

கயிலையே மயிலை
மயிலையே கயிலை

                           

52. சித்திரக்கவி - 1

நரமுக விநாயகர் - நன்றுடையான் கோயில், திருச்சி.

நாளை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று உங்களுடன் பகிர்கிறேன். சந்தவசந்தம் என்ற இணையக்குழுமத்தில் நடந்த சித்திரக்கவியரங்கில், அடியேன், விநாயகரின் அருளால் எழுதியது.

அஷ்ட நாக பந்தம்

வெண்பா:

நரமுகவி நாயக ஞால முதலே
கருணா முதமே கணாதிப தீர
கவலையவம் தீது களைவோய்நா தாதி
பவதாக மரிமகி பா

பதம் பிரித்த வடிவம்

நரமுக விநாயக ஞால முதலே
கருணாமுதமே கணாதிப தீர
கவலை அவம் தீது களைவோய் நாதாதி
பவ தாகம் அரி மகிபா

கருணாமுதமே - கருணா அமுதமே - கருணை பொழியும் அமுதம்
நாதாதி - நாதத்தின் ஆதி (ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டம்)
அவம் - கீழ்மை
பவதாகம் - பிறவிப் பிணி
அரி - அழிப்பாய்
மகிபா - மகிமை மிக்கவனே.

படத்தில் எட்டு வண்ணத்தில் பாம்புகள் உள்ளன. ஒவ்வொரு வண்ணப் பாம்பிலும் இதே வரிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படும்.



சரண்யா