Thursday 20 December 2018

49. திருக்கடவூர் - (பதிகம் 21)

அறுசீர் விருத்தம்

மா மா காய் (அரையடி)

வாரி சூடும் வார்சடையன்
..வாம தேவன் மாவலியன்
நாரி ஓர்பால் உடைத்தேகன்
..நமனை உதைத்த அதிதீரன்
மேரு வில்லன் விடையேறி
..வேதம் போற்றும் குருநாதன்
காரிக் கருள்செய் கண்ணுதலான்
..கடவூர் மேவும் கண்மணியே. 1

காரி நாயனார் அவதார ஸ்தலம் திருக்கடவூர்.

நிலவு லாவும் நீள்சடையன்
..நிருத்தம் ஆடும் நிட்களங்கன்
கொலைசேர் மழுவன் துடியேந்தி
..குற்றம் களையும் பேரரசன்
அலகிற் சோதி அம்பலவன்
..அரிய பணிசெய் குங்கிலியக்
கலயர்க் கருள்செய் கறைக்கண்டன்
..கடவூர் மேவும் கண்மணியே. 2

துடி - உடுக்கை
குங்கிலியக் கலய நாயனார் வாழ்ந்து, பணிசெய்த இடம் திருக்கடவூர்.

தார்கொண்(டு) இயமன் கட்டிடவே
..தளரா மனத்தோ(டு) அலர்தூவி
நீர்கொண்(டு) இலிங்க மேனிதனை
..நேர்த்தி யுடனே வழிபட்ட
மார்க்கண் டனுக்கன் றருள்செய்த
..மகவான் அமிர்த கடேசுவரன்
கார்க்கண் டன்கூற் றுதையீசன்
..கடவூர் மேவும் கண்மணியே 3

தார் - கயிறு

நறையார் மலர்கொண்(டு) எப்போதும்
..நமச்சி வாய என்பார்தம்
குறைகள் தீர்க்கும் அமுதீசன்
..கோல வடிவன் பேரொளியன்
நிறைவை அருளும் பேராளன்
..நினைவில் நிறையும் சீராளன்
கறைசேர் கண்டன் காமாரி
..கடவூர் மேவும் கண்மணியே 4

நறை - தேன்

அலையார் கங்கை அணிசடையன்
..அபிரா மியம்மை மணவாளன்
ஒலியின் மூலன் மெய்ப்பொருளன்
..உயிரின் உயிராயத் திகழ்சீலன்
கலியைத் தீர்க்கும் கொடையாளன்
..கரியின் உரிவை போர்த்தியவன்
கலையார் கையன் கட்டங்கன்
..கடவூர் மேவும் கண்மணியே. 5

கலி - கலி தோஷம் / துன்பம்
கரி - யானை
உரிவை - தோல்
கலை - மான்
கட்டங்கன் - கட்டு + அங்கன் = வலிமை மிக்கவன்.
கட்டங்கம் - மழு / கோடரி. மழுவை (கட்டங்கத்தை) ஏந்தியவன் கட்டங்கன் எனவும் கொள்ளலாம்.

பெண்ணோர் பாகன் செய்யொளியன்
..பெற்றம் ஏறும் பெய்கழலன்
வெண்ணீ(று) அணியும் வெங்காடன்
..வேண்டும் வரங்கள் தரும்வள்ளல்
எண்ணார்க்(கு) எட்டா எழிலாளன்
..ஏற்றம் அளிக்கும் திருக்கரத்தான்
கண்ணார் நுதலன் கயிலாயன்
..கடவூர் மேவும் கண்மணியே. 6

"நாதா! நீயே துணை"யென்று
..நவில்வோர்க் கென்றும் அருள்செல்வன்
வேதா முதல்விண் ணவர்போற்றும்
..விமலன் விரிகொன் றைச்சடையன்
மாதோர் கூறன் இளமானும்
..மழுவும் ஏந்தும் ஒளிக்கரத்தான்
காதார் குழையன் விடைப்பாகன்
..கடவூர் மேவும் கண்மணியே. 7

அந்தம் ஆதி இல்லாதான்
..அண்டம் ஆளும் மாமன்னன்
மந்த காசத் தாலெயில்கள்
..மடியச் செய்த மாவலியன்
விந்தை பலசெய் மாமாயன்
..வெந்த நீற்றை அணிவாகன்
கந்தம் கமழும் கொன்றையினன்
..கடவூர் மேவும் கண்மணியே. 8

பெற்றம் உகந்தே றும்தலைவன்
..பேரோர் ஆயி ரங்கொண்டான்
முற்றல் ஆமை யோடேனம்*
..முளைகொம் பரவம் அணிமார்பன் **
வற்றல் ஓட்டி னையேந்தி
..வாசல் தோறும் பலிதேர்வான்
கற்றோர் பரவும் இயமானன்
..கடவூர் மேவும் கண்மணியே. 9

*முற்றல் ஆமை ஓடு, ஏனம்
**முளைக்கொம்பு, அரவம் அணிமார்பன்

முளை - பன்றி.

முளைவெண் மதியம் திகழ்சடையன்
..மூப்பும் பிறப்பும் முடிவுமிலன்
வளைமங் கையவள் மணவாளன்
..மழமால் விடையே றியமறவன்
தளைகள் நீக்கும் தார்மார்பன்
..தவம்செய் முனிவர்க் கருள்பரமன்
களையார் முகத்தன் எண்குணத்தான்
..கடவூர் மேவும் கண்மணியே. 10

மழமால் - என்றும் இளமையாக இருக்கும் திருமால் (மூவா முகுந்தன் (பூத்தவளே புவனம் பதினான்கும் என்ற பாடலில், என்றும் மூவா முகுந்தர்க்கு இளையவளே) என்று அபிராமி பட்டர் பாடியுள்ளார்). சிவனுக்கு, திருமாலே ரிஷபமாக சில சமயத்தில் ஆவார்).

தளை - பந்தம்.
தார் - மலர் மாலை.

களை - அழகு.

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

No comments:

Post a Comment