Monday 22 July 2019

62. திருவண்ணாமலை (பதிகம் 26)

கலி விருத்தம்

வாய்பாடு - மா x 4

1.

விடையே றிவரும் விமலன் சுடலைப்
பொடிபூ சியவன் புனிதன் கரிய
விடமார் மிடற்றன் வினைதீர்ப் பவன்மெய்
அடியார்க் கருள்வான் அருணா சலனே.

2.

என்போ டாமை அரவம் அணிவான்
முன்பின் இல்லான் மூலன் ஆவான்
இன்ப வடிவன் இன்னல் தீர்ப்பான்
அன்பர்க் கருள்வான் அருணா சலனே

3.

கண்டம் கரியன் கண்மூன் றுடையன்
பண்டை வினையைப் பாழ்செய் பெரியன்
வண்டார் குழலி மருவும் நாதன்
அண்டத்(து) இறைவன் அருணா சலனே

4.

வானோர் துயரை மாட்டும் பெருமான்
மானும் மழுவும் வண்கை ஏந்திக்
கானத் தினிலே களிப்பாய் நடிக்கும்
ஆனை உரிபூண் அருணா சலனே

வண்கை - அழகிய கை
கானம் - காடு
நடித்தல் - நடனமாடுதல்
மாட்டுதல் - அழித்தல்

5.

செய்ய நிறத்தன் சேயோன் தாதை
வெய்யோன் பல்லைத் தகர்த்த வீரன்
கையில் பிரம கபாலம் ஏந்தி
ஐயம் தேர்வான் அருணா சலனே

செய்ய நிறத்தன் - சிவந்த நிறம் கொண்டவன்
சேயோன் தாதை - முருகன் தாதை
வெய்யோன் - சூரியன். சூரியனின் பல்லைத் தகர்த்தவன். தக்ஷனின் யக்ஞத்தில் தக்ஷனோடு சேர்ந்து சிவனை, சூரியனும் அவமதித்தான். அதனால் வீரபத்திரர்(சிவன் ஸ்வரூபம்) சூரியனின் பல்லை உடைத்தார்.
கையில் பிரமனது (ஐந்தாவது தலையைக் கொய்து ) கபாலத்தை வைத்துக்கொண்டு பிக்ஷை ஏற்பார் சிவன்.

6.

இம்மை மறுமை இயக்கம் களைவான்
செம்மை அருளும் சீரார் கரத்தன்
எம்மை ஆளும் எழிலார் ஈசன்
அம்மை அப்பன் அருணா சலனே

சீர் ஆர் - சீர் நிறைந்த கரம் உடையவன்.. சிறப்பு மிகு கரம் கொண்டவன்

7.

விரல்மூன் றுயர்த்தி விருட்சத் தடியில்
குருவாய் அமர்வோன் கொன்றைச் சடையோன்
அரியும் அயனும் அலைந்தும் அறியா
அரிய சோதி அருணா சலனே

8.

நரையே றுமிசை அமரும் நல்லான்
புரமூன் றினைவெண் பொடியாக் கியவன்
பரையோர் பாகன் பகவன் படமார்
அரவம் அணிவான் அருணா சலனே

நரை - வெள்ளை
ஏறு - ரிஷபம்
மிசை - மேல்

புரமூன்று - திரிபுரம்
வெண்பொடி - சாம்பல்

பரை - பராசக்தி

9.

மணியார் கண்டன் மலையான் மருகன்
பணியார் அறியா பரமன் நிமலன்
நணியார்க் கருள்வான் நம்பன் நக்கன்
அணியார் சடையன் அருணா சலனே

மணியார் கண்டன் - விடம் உண்டதால் கறுத்த கழுத்துடையவன்.. கருநிற மணி போன்ற கழுத்துடையவன்.
மலையான் - பர்வத ராஜன்
மருகன் - மருமகன்
பணியார் அறியாப் பரமன் - தன்னை வணங்காதோரால் அறிய முடியாத பரமன்
நிமலன் - தூயவன்
நணியார் - அருகில் வருவோர் அவர்களுக்கு அருள்பவன்
நம்பன் - நம்முடையவன்
நக்கன் - திகம்பரன்
அணியார் சடையன் - அழகிய சடை உடையவன்

10.

கண்ணார் நுதலான் கயிலை மலையான்
நண்ணார் புரத்தை நகையால் எரித்தான்
உண்ணா முலையாள் உடையான் எழில்சேர்
அண்ணா மலையான் அருணா சலனே

பதிகம் நிறைவுற்றது.

சரண்யா

No comments:

Post a Comment