Wednesday 26 February 2020

68. வண்ணப் பாடல் - 17 - திருப்புனவாயில்

தனதான தானந் தனதான

தவயோக மேதும் தெரியாத
..தமியேனென் மீதும் கனிவோடு
பவரோக சோகம் படராமல்
..பரஞான போதம் தருவாயே
அவிசீதன் வேதன் தனுசாரி
..அடிபேண மாணம் தருகோவே
புவனேசை ஆரும் திரள்தோளா
..புனவாயில் மேவும் பெருமானே

பவரோக சோகம் படராமல் - பிறவிப் பிணியால் வரும் துன்பம் அடியேனைச் சேராமல்

பர ஞானம் - உயர்ந்த ஞானம்

அவி - காற்று (வாயு)
சீதன் - சந்திரன்
வேதன் - பிரம்மா
தனுசாரி - இந்திரன் / திருமால்

வாயு, சந்திரன், இந்திரன், திருமால், பிரமன் போன்றோர் வழிபாடு செய்ய அவர்களுக்கு உயர்வு அளித்தார் இத்தலத்து ஈசன்.

மாணம் - மாட்சிமை / பெருமை

வாயு பகவானைக் குறிக்க, அவி  என்று இலக்கியங்களில் உபயோகப் படுத்தியுள்ளார்களா என்று தெரியவில்லை. எனினும் அகராதியில், அவி என்னும் சொல்லுக்கு "காற்று' என்ற பொருள் இருப்பதால் பயன்படுத்தியுள்ளேன்.
தனுசாரி என்ற பெயர் இந்திரன், திருமால் இருவரையும் குறிப்பதாக அகராதியில் கண்டேன்.

புவனேசை ஆரும் திரள் தோளா - பார்வதி அணையும் திரண்ட தோள்கள் உடையவன் என்னும் பொருள் வருமாறு.

சரண்யா

No comments:

Post a Comment