Saturday 25 December 2021

71. விநாயகர் - சந்த விருத்தம்

 தான தான தான தான தான தான தானனா

குறிப்பு - தான என்பது சில இடங்களில் தந்த / தத்த / தய்ய / தனன என்றும் வரலாம்


1. 

தந்தி மாமு கத்த னேத யாக ராஉ மாசுதா

கந்த னுக்கு முந்தி னாய்க ணேச னேவி நாயகா

இந்து வின்செ ருக்க ரிந்த ஈடி லாத வீரனே

வந்த னைசெய் பத்த ருக்கு வந்த ருள்ச மர்த்தனே


தந்தி மா முகத்தனே தயாகரா உமாசுதா

கந்தனுக்கு முந்தினாய் கணேசனே விநாயகா

இந்துவின் செருக்கரிந்த ஈடிலாத வீரனே

வந்தனை செய் பத்தருக்(கு) உவந்தருள் சமர்த்தனே


2.

ஐந்து கையு டைய தேவ அந்த மில்லி இன்முகா

ஐந்து பூத வடிவ மான நாத ஆதி காரணா

ஐந்தெ ழுத்தி றைவன் ஆசி யாலெ ழுந்த வேழமே

ஐந்து மேதி ரிந்தி டாத டக்கி எம்மை ஆள்வையே


ஐந்து கையுடைய தேவ அந்தமில்லி இன்முகா

ஐந்து பூத வடிவமான நாத ஆதி காரணா

ஐந்தெழுத்(து) இறைவன் ஆசியால் எழுந்த வேழமே

ஐந்துமே திரிந்திடா(து) அடக்கி எம்மை ஆள்வையே


3.

ஆனை மாமு கத்த னைஅ ழித்த கொற்ற வாரணா  

ஆனை யாக வந்து வள்ளி அஞ்சி ஓட வைத்தவா

ஆனை யான உன்னை ஔவை ஆசை யோடு போற்றவே

தேனு லாவு செந்த மிழ்க்க விக்கொ டுத்த தேவனே


ஆனை மா முகத்தனை அழித்த கொற்ற வாரணா  

ஆனையாக வந்து வள்ளி அஞ்சி ஓட வைத்தவா

ஆனையான உன்னை ஔவை ஆசையோடு போற்றவே

தேனுலாவு செந்தமிழ்க் கவிக்கொடுத்த தேவனே


4.

முப்பு ரத்தை முற்று மாய ழிப்ப தற்கு முக்கணார்

செப்ப மிக்க தேரி லேறி வேக மாய்க்கி ளம்பிட

அப்பர் வந்த தேரின் ஆழி அச்சு டைந்து  நின்றிடத்

தப்பு ணர்ந்து நின்னை ஏத்த வெற்றி தந்த தந்தியே


முப்புரத்தை முற்றுமாய் அழிப்பதற்கு முக்கணார்

செப்பமிக்க தேரில் ஏறி வேகமாய்க் கிளம்பிட

அப்பர் வந்த தேரின் ஆழி அச்(சு) உடைந்து  நின்றிடத்

தப்(பு) உணர்ந்து நின்னை ஏத்த வெற்றி தந்த தந்தியே


5.

வேத வ்யாசர் வேண்ட வேவி ரைந்து பார தத்தினை

நாத நினது தந்த மொன்று டைத்தி யற்றி வைத்தவா

பேத மின்றி யாவ ரும்பி ரேமை யோடு வாழ்ந்திட

ஆதி நாய காவி நாய காஉ வந்த ருள்வையே


வேத வ்யாசர் வேண்டவேவிரைந்து பாரதத்தினை

நாத நினது தந்தம் ஒன்(று) உடைத்(து) இயற்றி வைத்தவா

பேதமின்றி யாவரும் பிரேமையோடு வாழ்ந்திட

ஆதி நாயகா விநாயகா உவந்(து) அருள்வையே

No comments:

Post a Comment