Thursday 14 June 2018

43. திருமால் பதிகம் (பிரபந்தம் 3)

தலம் - பொது

வஞ்சித்துறை

வாய்பாடு - விளம் விளம்

மார்கழிச் செல்வனைக்
கார்முகில் வண்ணனை
ஓர்பவர் வாழ்வினில்
சேர்வது நன்மையே. 1

ஓர்பவர் - வணங்குபவர் (follower)
மாதங்களில் மார்கழியாய் இருப்பதாய்க் கண்ணன் கீதையில் சொல்லியுள்ளார்

பையரா வில்துயில்
ஐயனை ஏத்துவீர்
வையகம் தன்னிலே
உய்யவோர் வழியதே 2

பை அரா - விடம் நிறைந்த பாம்பு
ஏத்துதல் - தொழுதல்

கன்றினம் மேய்ப்பனைக்
குன்றெடுத் தாள்வனை
மன்றுவோர் வாழ்வினில்
என்றுமே இன்பமே 3

குன்றெடுத்து ஆள்வன் - குன்றெடுத்துக் காத்தவன்
ஆளுகை / ஆளுதல் - காத்தல்
மன்றுதல் - வணங்குதல்

மாயனை அடியவர்
நேயனை அழகொளிர்
ஆயனை என்றுமே
வாயினால் பாடுமே 4

ஆலிலை தன்னிலே
கோலமாய்த் துயில்பவன்
காலினைப் பற்றுவோம்
சீலமாய் வாழவே 5

வம்பலர் தூவியே
நம்பியை நித்தமும்
கும்பிடு வார்க்கொரு
வெம்புதல் இல்லையே 6

வம்பு - தேன்
அலர் - மலர்
வம்பலர் - தேன் நிறைந்த மலர்
வெம்புதல் - துயர் அடைதல்

சங்கொடு சக்கரம்
அங்கையில் ஏந்திடும்
பங்கயக் கண்ணனே
மங்களம் அருள்வனே 7

மல்லரை மாய்த்தவன்
வில்லினை ஒசித்தவன்
வல்லமை போற்றிட
தொல்லைகள் இல்லையே 8

ஒசித்தல் - ஒடித்தல் (உடைத்தல்)

மருப்பொசித்த மாதவன் தன்... ஆண்டாள் - நாச்சியார் திருமொழிப் பாடல்

அத்தியைக் காத்தவன்
சத்தியன் அவன்மிசைப்
புத்தியை வைப்பவர்
முத்தியைப் பெறுவரே 9

பூமகள் கேள்வனின்
கோமள மானதோர்
நாமமே நவிலவே
சேமமே சேருமே 10

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

No comments:

Post a Comment