Tuesday 26 June 2018

44. திருவான்மியூர் (பதிகம் 16)

அறுசீர் விருத்தம்

விளம் விளம் மா (அரையடி)

புற்றினுள் தோன்றிய முனிவன்
..போற்றிட அருளிய சிவனே!
நற்றவம் புரிபவர்க்(கு) உவந்து
..நலமிக ஈன்றிடும் தருவே!
பற்றிட நின்னடி அன்றிப்
..பரமனே! ஒருபிடிப்(பு) அறியேன்.
மற்றொரு பிறப்பினி வேண்டேன்
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 1

புற்றினுள் தோன்றிய முனிவன் - வால்மீகி.

சென்னியில் முளைமதி வைத்தோய்
..சீறராத் திகழ்மணி கண்டா
கன்னியை இடப்புறம் கொண்டோய்
..கனலுகந்(து) ஆடிடும் செல்வா
இன்னொரு பிறவியைத் தந்(து)இவ்
..எளியனை வாட்டிட வேண்டா
வன்னியின் கீழமர் வேந்தே
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 2

வன்னி மரம் - திருவான்மியூர் ஸ்தல விருக்ஷம்.

தீட்சிதர் வேண்டிட மேற்குத்
..திசையினைப் பார்த்தமர்ந் தோனே
சாட்சியாய் இருந்திடும் அசலா
..சங்கடம் தீர்த்திடும் சதுரா
காட்சியைத் தந்தினி இந்தக்
..கடையனை ஆட்கொளு வாயே
மாட்சிமைப் பொருந்திய மணியே
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 3

தீட்சிதர் - ஶ்ரீ அப்பய்ய தீட்சிதர். வேளச்சேரியில் இருந்த இந்த மகான், அனுதினமும் திருவான்மியூர் வந்து மருந்தீசனை வழிபடுவது வழக்கம். ஒரு நாள் மழை பலமாகப் பொழிந்தது. வான்மியூர் வெள்ளத்தில் மிதந்தது. வேளச்சேரியில் இருந்து வந்த தீட்சிதர், கிழக்கு வாசலை அடையமுடியாமல் தவிர்த்தார்கள். கிழக்கு முகமாக இருக்கும் மருந்தீசனை தரிசிக்க முடியவில்லையே என வருந்தினார். அவரது மன வருத்தத்தை அறிந்த ஈசன், அன்றிலிருந்து மேற்கு முகமாக மாறி அமர்ந்தார். இறைவனை வணங்கி மகிழ்ந்தார்.

அகத்தியர் வணங்கிட அவருக்(கு)
..அரும்பெரும் தத்துவம் உரைத்தோய்
தகத்தகத் திமிதிமி என்று
..தாண்டவம் ஆடிடும் அரசே
சகத்தனில் மீண்டுமித் தமியேன்
..சன்மமெ டுத்திடா(து) அருள்வாய்
மகத்துவம் வாய்ந்தநற் கோவே
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 4

அகத்திய முனிக்கு, இறைவன், மூலிகை மருந்து பற்றிய ஞானத்தை அருளிய தலம் திருவான்மியூர்

திரிபுர சுந்தரி பாகா
..தேனுவிற்(கு) அருளிய தேசா
திரிபுரந் தனையெரி தீரா
..தேனினும் இனியஆ ரமுதா
பரிபுரம் அணிபதம் தன்னைப்
..பாவியென் முடிமிசை இடுவாய்
மருவலர் அசுரரை மாய்த்தோய்
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 5

திரிபுர சுந்தரி - தலத்து இறைவி.

தேனு - காமதேனு. தேவலேகப் பசுவான காமதேனுவால், ஒருமுறை சரியாக பால் தர இயலவில்லை. வசிஷ்டர், பூலோகத்தில் ஒரு காட்டுப் பசுவாய்ப் பிறப்பாய் என்று சாபமிட்டார்.

திருவான்மியூரில் அலைந்து கொண்டிருக்கும் போது, வால்மீகி முனிவர் துறத்திய போது, அவரைக் கண்டு அஞ்சி ஓடியது. அதன் கால் இடறிய இடத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதிலிருந்து அந்தப் பசுவிற்கு, பால் சுரக்கத் தொடங்கியது. இறைவனுக்கு இத்தலத்தில் பால்வண்ண நாதர் என்றும் ஒரு பெயர்.

சதியினை இடப்புடை வைத்துச்
..சதிருகந் தாடிடும் தலைவா!
விதியின தொருசிரங் கொய்தோய்!
..வெள்விடை ஏறிடும் தேவா!
கதியென உன்கழல் பிடித்தேன்
..கவலைகள் தீர்த்திடு வாயே
மதுநிறை மலரணி மன்னா!
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 6

புடை - பக்கம்
சதிர் - நடனம்
விதி - பிரம்மா

அரியயன் தேடியும் காணா
..அருட்பெருஞ் சோதியே அரனே
சுரிகுழல் மடந்தையின் பதியே
..தொல்வினை யாவையும் களைந்து
கரிசுடை யேனெனைக் காப்பாய்
..கடமுனிக் கருளிய கரும்பே
வரமிக அருளிடும் இறைவா
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 7

கரிசு - அழுக்கு
கடமுனி - அகத்தியர் (கடம் - குடம்)

ஆதியும் அந்தமும் இல்லா
..அருளுடை நீண்டொளிப் பிழம்பே
பாதிவெண் மதியணி சடையா
..பார்த்தனுக் கருளிய வேடா
கோதிலி குணமிலி எந்தாய்
..கொடியனென் பிழைபொறுப் பாயே
மாதொரு பாலுடை மகிபா
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 8

அறைநிறை கழலணி அழகா
..அழலுடை அரவணி வீரா
கறைநிறை மிடறுடைக் கனியே
..கலைமழு கனலணி கரத்தோய்
பிறைமதி உவந்தணி சடையா
..பிணிதனைக் களைந்திடு வாயே
மறைபுகழ் நிருமல ஈசா
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 9

அறைநிறை கழல் - ஓசை நிறைந்த சிலம்பு
அழலுடை அரவு - நஞ்சு நிறைந்த பாம்பு
கலை - மான்

அலைமலி கங்கையைத் தாங்கும்
..அவிர்சடை யுடைப்பெரு மானே!
தலையினில் மகிழ்வுடன் பலிதேர்
..தலைவ!நின் திருவடி ஒன்றே
நிலையெனக் கருதிடும் அடியார்
..நிறைவினை அடைந்திட அருள்வாய்!
மலைமகள் மருவிடும் தேகா
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 10

நிலை - கதி
நிறைவு - முக்தி

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

No comments:

Post a Comment