Monday 29 April 2019

57. வண்ணப் பாடல் - 14 - திருவேரகம்

திருவேரகம்

ராகம் - ஹமீர்கல்யாணி
தாளம் - ஆதி (கண்ட நடை)

தானதன தானதன தானதன தானதன
..தானதன தானதன தனதான

ஆறுமுக வேல்முருக! மால்மருக! மாமயிலில்
.ஆடிவிளை யாடிவரும் அழகோனே
..ஆகமமும் நான்மறையும் ஆருமிறை யே!கருணை
...ஆரடியை யேஅடைய அருள்வாயே

வீறுடைய தோள்வலிய! தேவகணம் மேன்மையுற
.மேவலரின் ஈடரியும் அதிதீரா!
..மேழகம தேறிவரும் மேதினிகு மாரனினை
...நாயக!வி சாக!குக! குமரேசா!

நீறணியும் மேனியுடை நேயரவர் தீவினையை
.நீறெனவெ காயுமுமை புதல்வோனே!
..நீபமலர் மாலையணி வீர!சிவ பால!குண
...நேய!குற மாதுமகிழ் மணவாளா!

ஏறதனின் மேலமரும் ஈசனது காதில்மிக
.ஏமமுறு போதனைசெய் குருநாதா
..ஈரமுடை மாவொடெழில் மேவுமுயர் சோலைநிறை
...ஏரகநி லாவிஎமை உடையோனே

பதம் பிரித்த வடிவம்:

ஆறுமுக வேல்முருக! மால்மருக! மாமயிலில்
.ஆடி விளையாடி வரும் அழகோனே
..ஆகமமும் நான்மறையும் ஆரும் இறையே! கருணை
...ஆர் அடியையே அடைய அருள்வாயே

வீறுடைய தோள்வலிய! தேவகணம் மேன்மையுற
.மேவலரின் ஈடரியும் அதிதீரா!
..மேழகம் அது ஏறிவரும் மேதினி குமார(ன்) நினை
...நாயக! விசாக! குக! குமரேசா!

நீறணியும் மேனியுடை நேயர் அவர் தீவினையை
.நீறெனவெ காயும் உமை புதல்வோனே!
..நீபமலர் மாலை அணி வீர! சிவ பால! 
...குணநேய! குறமாது மகிழ் மணவாளா!

ஏறு அதனின் மேல் அமரும் ஈசனது காதில் மிக
.ஏமம் உறு  போதனைசெய் குருநாதா
..ஈரம் உடை மாவொடு எழில் மேவும் உயர் சோலைநிறை
...ஏரகம் நிலாவி எமை உடையோனே!


ஆருமிறையே - ஆரும் இறையே - ஆர்தல் - அனுபவித்தல். 
கருணை ஆர் அடியை - ஆர்தல் - நிறைதல். கருணை நிறையும் பாதங்கள்.

வீறுடைய தோள் வலிய -  வீறு - பெருமை. பெருமை நிறைந்த வலிமையான தோள்கள் உடையவன்.
மேவலர் - பகைவர் (அசுரர்கள்)
ஈடு - வலிமை / தகுதி

மேழகம் - செம்மறி ஆடு
மேதினி குமாரன் - பூமியின் பிள்ளை - அங்காரகன். அங்காரகனின் அதிபதி முருகன்.

திருநீறு அணியும் அன்பர்களின் தீவினைகளை எரித்து, சாம்பலாக்கும் உமை பாலன்.

நீபம் - கடம்பம்

ஏமம் - உயர்வானது (ஹேமம் - தங்கம்)
உறுதல் - நிறைதல்
ஈரம் - பசுமை
மா - வயல்
ஈரம் உடை மா - நீர் நிறைந்த பசுமையான வயல்.



No comments:

Post a Comment