Friday 10 May 2019

58. வண்ணப் பாடல் - 15 - திருக்கஞ்சனூர்

கஞ்சனூர்

கஞ்சனூரில் அருள்புரியும் சிவபெருமான் மீது ஒரு வண்ணப் பாடல்.

ஆபோகி ராகம்
மிஸ்ர சாபு தாளம்

தந்த தானன தந்த தானன
..தந்த தானன தனதான

துங்க நீறணி சங்க ராகடி
.துங்கி லேநட மிடுவோனே
..சுந்த ராஅப யங்க ராமிகு
...தொந்த தீவினை களைவோனே

எங்கு மேதிக ழும்ப ராவண
.எந்தை யேஉன திருதாளை
..என்று மேதொழு மன்பர் மீதுன
...தின்ப மாமழை பொழிவாயே.

பொங்க ராவுட னங்க மாலைபு
.னைந்த நாயக அதிதீரா
..பொங்கு மாவிட முண்ட பாலக
...புங்க வாபர குருதேசா

கங்கை யோடிள இந்து சூடிடு
.கந்த வார்சடை அழகோனே
..கந்த வேளையு கந்த ணைபவ
...கஞ்ச னூருறை பெருமாளே

பதம் பிரித்த வடிவம்.

துங்க நீறணி சங்கரா! கடி
.துங்கிலே நடமிடுவோனே!
..சுந்தரா! அபயங்கரா! மிகு
...தொந்த தீவினை களைவோனே!

எங்குமே திகழும் பராவண!
.எந்தையே! உனது இருதாளை
..என்றுமே தொழும் அன்பர் மீது உனது
...இன்ப மாமழை பொழிவாயே.

பொங்கு அராவுடன் அங்கமாலை
.புனைந்த நாயக! அதிதீரா!
..பொங்கு மாவிடம் உண்ட பாலக!
...புங்கவா! பரகுரு! தேசா!

கங்கை யோடு இள இந்து சூடிடு
.கந்த வார்சடை அழகோனே!
..கந்த வேளை உகந்து  அணைபவ!
...கஞ்சனூர் உறை பெருமாளே!

கடி துங்கி - பயம் தரக்கூடிய இரவு
துங்கி - இரவு என்னும் பொருள் பார்த்தேன். இரவிலே என்பது போல், துங்கிலே என்று அமைத்தேன். துங்கியிலே என்று வரவேண்டும். சந்தத்திற்காக "யி" என்ற எழுத்தை விட்டுவிட்டேன். பேச்சு வழக்காக இருப்பது போல வைத்துளேன்.


பாடலைக் கேட்க:
https://drive.google.com/open?id=1B3TRT4ejwp7SuWVNQzo1mB3lA4-cr9ae

No comments:

Post a Comment