Saturday 25 May 2019

59. தில்லை - (பதிகம் - 23)

வணக்கம்.

அடுத்த பதிகம்.

தில்லை (சிதம்பரம்)

அறுசீர் விருத்தம்
மா மா காய் (அரையடி)

1.
அருவாய் உருவாய் அருவுருவாய்
..அருள்பா லிக்கும் ஆண்டவனும்
கருணை பொழியும் கற்பகமும்
..கருமா மணியார் மிடற்றானும்
மருவார் புரம்மூன் றெரித்தானும்
..மருவி என்னுள் புகுந்தானும்
திருநா ளைப்போ வார்பணியும்
..திருவார் தில்லை நாயகனே

ஆகாயம் - அரு
நடராஜர் - உரு
மூலநாதர் (இலிங்கம்) - அருவுரு

திருநாளைப் போவார் - நந்தனார்

2.
உற்ற துணையாய் வருவானும்
..உயிரின் உயிராய் உறைவானும்
குற்றம் இல்லாக் கோமானும்
..கொன்றை மலரை அணிவானும்
பெற்றம் உகந்தே றும்தேவும்
..பெரிய புராணம் அளித்தானும்
சிற்றம் பலத்தே நடம்புரியும்
..திருவார் தில்லை நாயகனே

பெரிய புராணம் அரங்கேற்றம் நடைபெற்றது தில்லையில் (அலகிற் சோதியன் அம்பலத்து ஆடுவான்)

3.
நாவால் நமச்சி வாயவென்று
..நாளும் நவிலும் அடியார்க்குச்
சாவா திருக்கப் பணிவானும்
..சபையில் ஆடும் அதிபதியும்
மூவா யிரவர்க் கருள்வானும்
..மோன குருவாய் அமர்வானும்
தேவா ரத்தைத் தந்தானும்
..திருவார் தில்லை நாயகனே

மூவாயிரவர் - தில்லை வாழ் அந்தணர் மூவாயிரம் பேர்
இராஜராஜ சோழன், நம்பியாண்டார் நம்பியின் துணையோடு தில்லையில், மூவர் பாடிய தேவாரத்தை ஒரு அறையிலிருந்து எடுத்தார்.

4.
தகரா காசத் துறைவானும்
..சனகா தியர்க்கோர் ஆசானும்
மகமா யைதீர்க் கும்பரமும்
..மணிவா சகர்சொல் கேட்பானும்
முகமோர் ஐந்து கொண்டானும்
..மொழிக்கும் மதிக்கும் சேயானும்
செகமேத் திடும்நற் பண்ணவனும்
..திருவார் தில்லை நாயகனே

புக்தி முக்தி ப்ரத தகராகாசம் (ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் ஆனந்த நடன பிரகாசம் என்ற சிதம்பர ஸ்தல க்ருதி)
மாணிக்கவாசகர் சொல்ல, நடராசப் பெருமான் ஓலையில் எழுதிய திருவாசகம் - குறிப்பு

சேயான் - தொலைவானவன் / எட்டாதவன்.
மொழி - வாக்கு
மதி - அறிவு

வார்த்தையாலும் அறிவாலும் "இவன் இப்படிப்பட்டவன்" என்று வரையறுக்க முடியாதவன்.

தகராகாசம் - தஹராகாசம் = அண்டத்தில் ஆடும் பிரான் பிண்டமான ஜீவனுக்குள்ளும் ஆடுகிறான். பேரம்பலம் - சிற்றம்பலம் (தஹராகாசம்).. இவ்வாறு இறைவனை தியானித்தால் ஆத்ம ஞானம் கிடைக்கும் என்று கூறுவார்.

5.
தவமே புரிவோர் நாயகனும்
..தவள வனம்வாழ் நாயகனும்
உவமா னமிலா நாயகனும்
..உலகுக் கெல்லாம் நாயகனும்
நவகோள் பணியும் நாயகனும்
..நாவுக் கரசர் நாயகனும்
சிவகா மியம்மை நாயகனும்
..திருவார் தில்லை நாயகனே

தவள வனம் - தவளம் - வெள்ளை நிறம். திருவெண்காடு ஸ்தலம்.
நாவுக்கரசர் - தாச மார்க்க பக்தி.

6.
ஆலம் உண்ட அருட்கடலும்
..ஆணும் பெண்ணும் ஆனவனும்
காலன் அஞ்ச உதைத்தவனும்
..காமன் வேவ விழித்தவனும்
மாலுக் காழி அளித்தவனும்
..மலரோன் சிரத்தைக் கொய்தவனும்
சீலர் பணியும் சிற்பரனும்
..திருவார் தில்லை நாயகனே

மாலுக் காழி அளித்தவனும் - மாலுக்கு ஆழி அளித்தவன். மஹாவிஷ்ணுவிற்குச் சக்கரத்தை அளித்தவர் சிவபெருமான்.

7.
வம்பார் மலரும் வானதியும்
..மதியும் அணியும் சடையானும்
"நம்பா" என்று கழல்பணியும்
..நல்லோர் தம்மைக் காப்பவனும்
அம்போ ருகனும் நாரணனும்
..அலைந்தும் அறிய முடியாத
செம்பொற் சோதி ஆனவனும்
..திருவார் தில்லை நாயகனே

அம்போருகன் - பிரமன்
நாரணன் - நாராயணன் - விஷ்ணு

8.
கற்றார் போற்றும் கண்ணுதலும்
..கரையில் லாத கனைகடலும்
மற்றோர் அறியா மாமலையும்
..மதிப்போர் மனத்தில் வசிப்பவனும்
வற்றல் ஓடொன் றுடையானும்
..வன்னி ஏந்தும் கையானும்
செற்றார் புரத்தைச் செற்றானும்
..திருவார் தில்லை நாயகனே

கனைத்தல் - ஒலித்தல்
கனைகடல் - ஒலியுடைய (ஆரவாரம் செய்யும்) கடல்
மற்றோர் - மாற்றுக் கருத்து உடையோர் (நாத்திகர்) / அறிவற்றவர்கள்
செற்றார் - பகைவர்

9.
வீணை ஏந்தி நாரதரும்
..வீறு கொண்ட தும்புருவும்
காணக் கனக சபையினிலே
..களிப்பாய் நடனம் புரிவோனும்
பாணம் தன்னைப் பார்த்தனுக்குப்
..பாங்காய்த் தந்த வல்லவனும்
சேணம் அளிக்கும் பெரியவனும்
..திருவார் தில்லை நாயகனே

சிதம்பரத்தில் - ஆனந்த நடனம் - களிப்பாய் நடனம் புரிதல் - குறிப்பு
சேணம் - உயர்வு

10.
கற்ப னைக்கெட் டாதவனும்
..கலைகட் கெல்லாம் அதிபதியும்
வெற்பை வில்லாய் எடுத்தவனும்
..வேதம் போற்றும் விற்பனனும்
பொற்ச பையில் பதஞ்சலிக்கும்
..புலிக்கால் முனிக்கும் அருள்பவனும்
தெற்குத் திசைநோக் கும்சிவனும்
..திருவார் தில்லை நாயகனே

புலிக்கால் முனி - வ்யாக்ரபாதர்

பணிவுடன்,
சரண்யா

No comments:

Post a Comment