Wednesday 12 June 2019

60. திருக்காளத்தி - (பதிகம் 24)

திருக்காளத்தி

நாலடித் தரவு கொச்சக் கலிப்பா

1.
சடைமேல்வெண் மதியணிவோய் சங்கடம்தீர்க் கும்சதுரா
உடையானே உமைபாகா உயர்ஞானம் அருள்வோனே
விடையேறி வருவோனே வெவ்வினைகள் களைந்திந்தக்
கடையேனைக் காப்பாயே காளத்திப் பெருமானே

2.
பிறையாரும் சடையோனே பிறப்பிறப்பில் லாத்தேவே
மறையாரும் வழியாலே மகிபாஉன் அடிபணியும்
குறையாரும் சிறியேனின் குற்றங்கள் பொறுப்பாயே
கறையாரும் மிடற்றோனே காளத்திப் பெருமானே

பிறப்பிறப்பில் லாத்தேவே - பிறப்பு இறப்பு இல்லாத் தேவே
ஆர்தல் - நிறைதல், நிரம்புதல், திகழ்தல், அனுபவித்தல்
பிறையாரும் சடையோன் - நிலா திகழும் சடை உடையவன்
மறையாரும் - வேதங்கள் அனுபவிக்கும்/போற்றும்
குறையாரும் - குறை நிரம்பியுள்ள
கறையாரும் - விடம் உள்ளதால் கரிய நிறம் நிறைந்த

3.

நரைஎருதின் மேலேறி நானிலம்போற் றிடவருவோய்
பரையினையோர் கூறுகந்தோய் பகலிரவென் றெப்போதும்
இரைதேடி அலைகின்ற ஈனனெனைக் கைதூக்கிக்
கரைசேர்த்த ருள்வாயே காளத்திப் பெருமானே

4.

நண்ணார்தம் புரம்மூன்றை நகையாலே எரித்தோனே
விண்ணோர்கள் துயர்தீர்த்தோய் விடையேறும் வித்தகனே
பண்ணவனே பணிந்தேத்தும் பத்தனெனைக் காப்பாயே
கண்ணப்பர்க் கருள்கோவே காளத்திப் பெருமானே

5.
கூற்றுக்குக் கூற்றோனே கொல்களிற்றை உரித்தோனே
மாற்றார்க்குச் சேயோனே வணங்கிடுவார்க் கென்றென்றும்
ஊற்றான உத்தமனே ஓங்கிவளர் ஒளிப்பிழம்பே
காற்றாகி நிறைவோனே காளத்திப் பெருமானே

6.

வாரணமும் மாசுணமும் சிலந்தியுமன் றேத்திடவே
பூரணமாய் அருள்செய்த புண்ணியனே! மலரோனும்
நாரணனும் காணவொணா நாயகனே! அனைத்திற்கும்
காரணமாய் நின்றவனே! காளத்திப் பெருமானே!

காளத்தியை, சீகாளத்தி என்று கூறுவார். சீ - சிலந்தி, காள - பாம்பு, அத்தி - யானை. மூன்றும் சிவபெருமானை வணங்கி, நற்கதி அடைந்த தலம்.

7.
ஆலமர நீழலமர்ந்(து) அறநெறியை உரைப்போனே
நீலமணி மிடற்றோனே நீலியமர் மேனியனே
ஓலமிடும் தீனனென(து) ஊறுகளைக் களைவோனே
காலனஞ்ச உதைத்தோனே காளத்திப் பெருமானே

8.

அங்கசனை எரித்தோனே ஆதியந்தம் இல்லோனே
மங்கையொரு பங்கினனே மாசுணம்சூழ் மிடற்றோனே
கொங்குமலி கொன்றைவிழை கோமானே எழிலொலிசேர்
கங்கைமலி சடையோனே காளத்திப் பெருமானே

கொங்கு - தேன்
அங்கசன் - மன்மதன்

9.
பண்ணாரும் இறையோனே படிகம்போல் மிளிர்வோனே
எண்ணார்முப் புரம்தன்னை கணையொன்றால் எரித்தோனே
பெண்ணோர்பால் உடையோனே பிறப்பறுக்கும் பெரியோனே
கண்ணோர்மூன் றுடையோனே காளத்திப் பெருமானே

10.

அலைபரவும் கடல்தந்த ஆலாலம் உண்டோனே
மலையரசன் மகள்கேள்வா மதிசேர்செஞ் சடையோனே
கலைகளுக்கோர் அதிபதியே காலத்தைக் கடந்தோனே
கலையணியும் கரத்தோனே காளத்திப் பெருமானே

பணிவுடன்,
சரண்யா

No comments:

Post a Comment