Friday 16 August 2019

64. புஜங்கம் அமைப்பு - பொது (பதிகம் 27)

வணக்கம்.

"ப்ரபும் பிராண நாதம் விபும் விச்வநாதம்" என்று தொடங்கும் சிவாஷ்டகம், எட்டு ஸ்லோகங்களும் பலஸ்துதி ஒன்றுமாக ஒன்பது அழகிய துதிகள் கொண்டது.

சிவாஷ்டகத்தை ஒட்டி புஜங்க அமைப்பில் மூவடி மேல் ஓரடி வைப்பு என்பது போல் முயற்சி செய்துள்ளேன்.

புஜங்கம் என்றால் சமஸ்க்ருதத்தில் பாம்பு என்ற பொருள். சுப்ரமண்ய புஜங்கமும் இதே அமைப்பில்.

அதாவது நான்கு அடிகள்.
ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள்.
ஒவ்வொரு சீரிலும் இந்த அமைப்பு இருக்கும்.

குறில் - நெடில் - நெடில்.

குறில் - 1 மாத்திரை (ஒலிக்கும் நேரம் / கண் இமைக்கும் நேரம் என்று வைத்துக்கொள்ளலாம் - மாத்திரை)
நெடில் - 2 மாத்திரைகள்

சந்தத்தில் த னா னா என்று வரும்.

நெடில் எழுத்து

நெடிலாகவோ (கா என்பது போல)

அல்லது

குறில் + [மெல்லின/வல்லின] ஒற்று (சங் / சத் ) அல்லது

நெடில் + [மெல்லின/வல்லின] ஒற்று (மூன்/ சாத்)

என்பது போலவும் வரலாம்.

இடையின ஒற்று, மாத்திரைக் கணக்குப் பெறாது.

இந்த அமைப்பு, ஒரு பாம்பு ஊர்வது போல் இருப்பதால் புஜங்கம் என்ற பெயர் பெற்றது.

தலம் - பொது.

வாய்பாடு:
தனானா × 4 அல்லது தனாதான தானா × 2

1.
சிரத்தே நிலாவோ டுசீரா றுசூடும்
கருத்தன் கரித்தோ லுடுத்தும் சுசீலன்
சிரிப்பா லெயில்மூன் றெரித்திட் டதீரன்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

சிரத்தே நிலாவோடு சீராறு சூடும்
கருத்தன் கரித்தோல் உடுத்தும் சுசீலன்
சிரிப்பால் எயில்மூன்(று) எரித்திட்ட தீரன்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

எயில் - கோட்டை (மூன்று எயில் - திரிபுரம்). மந்தஹாசத்தால் சிவபெருமான் திரிபுரத்தை எரித்தார் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன.

2.
தரங்கக் கட‌ற்றந்த ஆலாலம் உண்டான்
மரங்கீழ் அமர்ந்தன் றுநால்வர்க் குரைத்தான்
சிரந்தாழ்த் தியென்றும் பணிந்தார்க் கருள்செய்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

தரங்கக் கடல்தந்த ஆலாலம் உண்டான்
மரங்கீழ் அமர்ந்தன்று நால்வர்க்(கு) உரைத்தான்
சிரம் தாழ்த்தி என்றும் பணிந்தார்க்(கு) அருள்செய்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

தரங்கக் கடல் - ஒலிக்கும் கடல்

3.
புராணன்ப சும்பொன் பொருப்பேந் துவீரன்
முராரிக் களித்தான் முனைப்போ டொராழி
அராவா டுகண்டன் பணைத்தோ ளிபங்கன்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

புராணன் பசும்பொன் பொருப்பேந்து வீரன்
முராரிக்(கு) அளித்தான் முனைப்போ(டு) ஒர் ஆழி
அரா ஆடு கண்டன் பணைத்தோளி பங்கன்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

பசும்பொன் பொருப்பு - மேரு மலை

4.
புலித்தோ லுடுத்தும் புயங்கன் விகிர்தன்
புலிப்பா தருக்குப் புகல்தந் தவீசன்
ஒலிக்கும் சிலம்பொன் றணிந்தா டுமெம்மான்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

புலித்தோல் உடுத்தும் புயங்கன் விகிர்தன்
புலிப்பாதருக்குப் புகல்தந்த ஈசன்
ஒலிக்கும் சிலம்பொன்(று) அணிந்தாடும் எம்மான்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

புலிப்பாதர் - வியாக்ரபாதர்

5.
விடங்கப் பிரான்வெண் ணிலாச்சூ டிகொன்றை
வடங்கொண் டமார்வன் வனப்பார் மடந்தை
இடங்கொண் டநாதன் இடர்தீர் விசிட்டன்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

விடங்கப் பிரான் வெண்ணிலாச்சூடி கொன்றை
வடம் கொண்ட மார்வன் வனப்பார் மடந்தை
இடம் கொண்ட நாதன் இடர்தீர் விசிட்டன்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

விடங்கன் - அழகன்
விசிட்டன் - பெரியவன்

6.
தயாளன் சதுர்வே தமாறங் கமானான்
வியாழன் பணிந்தேத் துமாலங் குடிக்கோன்
மயானத் திலாடும் மகேசன் நடேசன்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

தயாளன் சதுர்வேதம் ஆ(று)அங்கம் ஆனான்
வியாழன் பணிந்தேத்தும் ஆலங்குடிக் கோன்
மயானத்தில் ஆடும் மகேசன் நடேசன்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

7.
விடங்கொள் மிடற்றான் மிளிர்செஞ் சடைக்கண்
படங்கொள் அராப்பூண் பரன்நா ரிபாகன்
திடங்கொள் புயத்தான் சிதானந் ததேவன்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

விடங்கொள் மிடற்றான் மிளிர் செஞ்சடைக்கண்
படங்கொள் அராப்பூண் பரன் நாரிபாகன்
திடங்கொள் புயத்தான் சிதானந்த தேவன்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

8.
வனத்தில் தவஞ்செய் தவில்லான் தனக்கு
மனத்தால் மகிழ்ந்தத் திரந்தன் னையீந்தான்
அனைத்துக் குமாதா ரமாவான் அதீதன்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

வனத்தில் தவம் செய்த வில்லான் தனக்கு
மனத்தால் மகிழ்ந்(து) அத்திரம் தன்னை ஈந்தான்
அனைத்துக்கும் ஆதாரம் ஆவான் அதீதன்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

9.
எருத்தே றுமெம்மான் எழில்சேர் நிசிந்தன்
அருத்தித் துவந்தோர் அவத்தைக் கெடுப்பான்
நிருத்தன் நெருப்புப் பிழம்பாய் நிமிர்ந்தான்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

எருத்(து) ஏறும் எம்மான் எழில்சேர் நிசிந்தன்
அருத்தித்து வந்தோர் அவத்தைக் கெடுப்பான்
நிருத்தன் நெருப்புப் பிழம்பாய் நிமிர்ந்தான்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

10.
உவந்தே யளித்தா னுமைக்கோர் புறத்தை
இவன்றா னெலாமென் றிருக்கும் சனத்தின்
பவந்தன் னைமாற்றும் பவன்வா மதேவன்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

உவந்தே அளித்தான் உமைக்கோர் புறத்தை
இவன்தான் எ (ல்)லாம் என்(று) இருக்கும் சனத்தின்
பவம் தன்னை மாற்றும் பவன் வாமதேவன்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

சனம் - மக்கள்
பவம் - ஸம்ஸாரம்
மாற்றுதல் - நீக்குதல்
பவன், வாமதேவன் - சிவனின் ஒரு பெயர்

சரண்யா

No comments:

Post a Comment